Tuesday, January 26, 2010

மொய்...! மொய்...!

கல்யாண வீட்டில் மொய் எழுதுவது என்ற கலாச்சாரம் மெதுவாக அருகி வரும் நிலையில், மொய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவை படிக்க நேர்ந்தது.. இதோ...

மொய்...!

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே… நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் ‘ஆவன்னா திருஞானம்’னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு ‘முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்’னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன்

இன்னொரு பாட்டி வந்தாங்க. ‘யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு’னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். ‘தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?’ னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் ‘ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு’னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும்

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. ‘பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது…’ னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன… உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? ‘இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்’னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ஆனா விட்டுட்டேன்…

நன்றி: அருட்பெருங்கோ

Saturday, January 23, 2010

கல்லூரி கதை

பல நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்த சிறுகதை.... படிக்கும் போது கல்லூரி நாட்கள் ஞாபகத்துக்கு வருவதை தடுக்கமுடியவில்லை!

கல்லூரிப் பயணம்



கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடையும் பொழுது மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. இன்னும் கோவை மாநகரம் ஆறு வருடத்திற்கு முன் இருந்ததை போலவே மிதமான குளிரோடு இருந்தது. கோவையில் தங்கியவர்கள் வேறு எங்கும் போக முடியாததற்கு அங்கிருக்கும் பண்பான மக்கள், சிறுவாணி தண்ணிருக்கு அடுத்த காரணம் இந்த குளிர்ச்சி தான்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த பதின்ம வயது நடத்துனரிடம், துடியலூர் என்றேன்.

“ஏறிக்கோங்க”

ஏறி அமர்ந்தேன். சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சாய்பாபா காலனியை கடந்து செல்லும் போழுது ”தாலு சே தாலு மிலா” என்று என்னை பார்த்து கொண்டே ஆடிய ஷாலினி ஒரு நிமிடம் மனதில் வந்து மறைந்தாள். எட்டு ஐந்து மணிக்கு துடியலூர் சென்றடைந்தேன். துடியலூர் சுத்தமாக மாறியிருந்தது. நிறைய பேக்கரிகள் அழகழகான சீரியல் லைட்டுடன் இருந்தன. ஆலமரத்தடியில் இருந்த பெஞ்ச் கடை இல்லை.

ஐந்து நிமிட நடையில் மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் இரண்டாமாண்டு படிக்கும் போது தான் மினி பஸ் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன் டவுன் பஸ் தான்.
அதுவும் காலேஜிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலே வட்டமலைப்பாளையம் பிரிவில் இறக்கிவிடுவார்கள். முதல் வருடம் முழுவதும் அந்த டவுன் பஸ் தான். மினி பஸ்
வந்தபிறகு டவுன் பஸ்ஸை எல்லோரும் மறந்து போனோம்.

நான் வந்த இரண்டாவது நிமிடம் பஸ் வந்து சரியாக என் முன்னால் நின்றது. நான் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ”ஏ அசைந்தாடும் காற்றுக்கும், அழகான பூவுக்கும் காதலா, காதலா” ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மினி பஸ்களின் தேசிய கீதம் போல. அடுத்த முப்பது நொடிக்குள் பேருந்து நிரம்பியது. ஐந்தாவது நிமிடத்தில் பயணம் ஆரம்பித்தது. என்னை சுற்றிலும் கல்லூரி மாணவர்கள். என் ஜூனியர்ஸ். எந்த வித பதட்டமோ, வருத்தமோ இன்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.

அனைவரது முகமும் மலர்ச்சியாக இருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு என் முகமும் இப்படி தான் இருந்தது. எந்த வித வருத்தமும் இல்லாமல் அடுத்த நாளை பற்றி கவலைப்படாமல்
மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தவிர்க்க நான் முயலவில்லை.

ஆகஸ்ட் இருபத்தி மூன்று, தொன்னுற்றி ஒன்பதாம் ஆண்டு. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். விடுதிக்கு ஒரு
நாள் முன்பே வந்துவிட்டதால் ஒரு சிலர் நண்பர்களாகி இருந்தார்கள். அவர்களுடன் முதல் நாள் வகுப்பிற்கு சென்று அமர்ந்தேன். அறுபது பேர் வகுப்பில் இருபது பெண்கள் இருந்தார்கள்.

எனக்கு ஒருத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று நானே யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி வகுப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸிற்கும் கெமிஸ்டிரிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இருந்தாலும் பனிரெண்டாவதில் படித்த பாடம் என்றதால் கொஞ்சம் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக பெயர்களை சொல்லி கொண்டு வந்தார்கள். அவள் எழுந்திரிக்கும் பொழுது அவளை விட எனக்கு பதட்டம் அதிகமா இருந்தது. அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.

ஹாஸ்டலுக்கு சென்றவுடன் ரேகிங் தொடங்கியது. தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டப்பட்டு மிச்ச மீதி இருந்த சொரனையை இழந்தோம். சீனியரை முறைத்தவர்கள்

அதிகமாக ரேகிங் செய்யப்பட்டார்கள். எகத்தாளம் பேசியவர்கள் அடி வாங்கினார்கள். ஒரு முறை என் அருகிலிருப்பவனிடம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சொல்ல சொன்னார்கள்.
அவனோ ’புத்திசாலி’த்தனமாக “நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவன். நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல ”அப்ப நாங்க எல்லாம் என்ன @#$%&^ குடும்பத்துல இருந்து வந்தமா?” சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார். அவர் கையிலிருந்த சோறும் சாம்பாரும் அவன் கன்னத்தில் இருந்தது. கன்னத்தை தொடைக்காம சாப்பிட சொன்னார்கள். இந்த நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் அந்த நான்கு ஆண்டுகளில் பேசாத “நல்ல” வார்த்தைகளே இல்லை என்று மாறி போனான்.

இந்த எல்லா கொடுமைகளிலும் எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் காலேஜ் லேப் தான். முதல் ஆண்டில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வொர்க் ஷாப். மொத்தம் நான்கு லேப். இதில் மகிழ என்ன இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். அட்டெண்டென்ஸில் செந்தில்லுக்கு அடுத்த பெயர் ஷாலினி.

இருவரும் பிசிக்ஸ் லேபில் ஒரே குரூப். மீதி லேப்களில் அருகருகே இருந்தோம். ஷாலினி சாய்பாபா காலனியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பிறந்தது படித்தது எல்லாமே கோயமுத்தூர் தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ரெசனன்ஸ் காலம் அப்பேரட்டஸ் செய்யும் போது கையில் வைத்திருக்கும் இரண்டு ஃபோர்க்கையும் அடித்து பக்கத்திலிருக்கும் மாணவர்கள் காதில் நான் வைக்க அவர்கள் அலறியதை பார்த்து சிரித்தாள். நான் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது என் காதுக்கருகில் அதை வைத்தாள். நான் அலறியதை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள். மத்தவங்களுக்கு இப்படி தானே இருக்கும் என்றாள். அவள் தான் அதை செய்கிறாள் என்று தெரிந்திருந்தால் அது இளையராஜா இசையை விட நன்றாக இருந்தது என்று தோன்றியிருக்கும்.

கெமிஸ்ட்ரி லேபில் அவளுக்கு பிப்பட்டை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அவளுடைய பிப்பட்டை வாங்கி உதவ நான் முயலும் போது அவளுடைய துப்பட்டாவால் நன்றாக துடைத்து
கொடுத்தாள். ஒரு மாதிரி இருந்தது. பிப்பட் இனித்ததை போல் இருந்தது. இல்லை வேறு ஏதோ மோசமான சுவை. என்ன என்று நான் யோசிக்கும் முன் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். தவறுதலாக சோடியம் ஹைட்ராக்சைடை வேகமாக இழுத்துவிட்டேன். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசன, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்வதை போல் இருந்தது அவள் பார்வை. இருந்தாலும் அழகாக சிரித்து கொண்டிருந்தாள். இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தோம். பத்து நாட்கள் சென்ற நிலையில் லெட்ரல் எண்ட்ரி மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அன்று தான் கேசவனும் வந்தான். எங்கே அமர்வது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது நான் நகர்ந்து இடம் விட்டேன். அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருந்தது. இண்டர்வெலில் எங்கள் வகுப்பு மாணவர்களே லேட்டரல்களை ரேகிங் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு சரக்கடிப்பவனை ”எங்க இந்த பீர் அடிச்சிட்டு பேசு”னு சொல்வதை போல் இருந்திருக்கும் . கேசவனை கூப்பிட்டு பாட சொன்னார்கள். அரை நிமிடம் யோசித்தவன், ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” என்று கண்ணை மூடி பாட ஆரம்பித்ததும் அனைவரும் அமைதியானோம். நான்கு நிமிடத்தில் அவன் முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். எதையும் மதிக்காமல் வெளியே சென்றுவிட்டான். அடுத்த ரெண்டு வகுப்பிற்கு அவன் வரவில்லை.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவன் வீடு காலேஜிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தான். அதனால் அடிக்கடி அல்லு போட்டு இடிகரைக்கு சாப்பிட போகும் போது அவன் வீட்டிற்கும் செல்வோம். சில சமயம் சனி, ஞாயிறன்று சிக்கன் சாப்பிட அவன் வீட்டிற்கு அழைக்கப்படுவோம். வெக்கம் மானமில்லாமல் அனைவரும் பேய் தீனி தின்று வருவோம். அது மட்டுமில்லாமல் இண்டர்வெலில் அவனுடைய டிபன் பாக்ஸை காலி செய்துவிடுவோம். ஹாஸ்டலில் காலையில் டிபன் சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சில சமயம் அவனிடம் முதல் நாள் மெனு சொல்லிவிடுவோம். அதிகமாக சொல்லப்படுவது அரிசி, பருப்பு சாதமும் உருளைகிழங்கு வறுவலும் தான். அவனும் சரியாக கொண்டு வந்துவிடுவான்.

எங்களுள் ஒருவனாக அவன் சீக்கிரம் மாறி இருந்தான். ஆனால் பெண்களுடன் பேசுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் முதல் நாள் பாடிய பாட்டிற்கு அவனுக்கு ஒரு வழக்கமான ஒரு லவ் ஃபெயிலியர் ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் விசாரிக்கும் போது அப்படி எதுவும் இல்லையென்றும் ஏதோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை என்றும் சொன்னான். அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

இந்த நேரங்களில் ஷாலினியுடன் என் நட்பு லேப் தவிற பிற நேரங்களிலும் தொடர்ந்தது. கேசவன் இல்லாத நேரங்களில் அவளுடைய இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அவளுடைய தம்பி முதல் நாள் அவளிடம் சண்டை போட்டதிலிருந்து கடைசியாக அவள் வாங்கிய புஜ்ஜி வரை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். புஜ்ஜி அவளுடைய பிங் நிற டெட்டி பொம்மை. பூனைக்கு தான் புஜ்ஜி என்று வைப்பார்கள் என்று நான் சொன்னதை அவள் ஏற்று கொள்ளவில்லை. கடைசியாக டெட்டியிடமிருந்து எனக்கு அந்த பெயர் வந்துவிட்டது. செந்தில் என்று அவள் கூப்பிடுவதை விட புஜ்ஜி என்று கூப்பிடுவது எனக்கு பிடித்திருந்தது. கேசவனுக்கு அந்த பெயர் தெரிந்ததும் என்னடா புஜ்ஜி, பஜ்ஜி என்று கிண்டல் செய்தான்.

மினி பஸ் காலேஜ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பஸ் முழுதும் காலியானது. இடிகரைக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று பேர் தான் இருந்தார்கள். காலேஜ் முழுதாக மாறியிருந்தது. தெரிந்த முகங்கள் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தார். வேறு யாரும் தெரியவில்லை. வண்டி புறப்பட்டது. காம்பவுண்ட் சுவரையும் மீறி பிரமாண்டமான ஆடிட்டோரியம் கண்ணில் பட்டது. அங்கே நடந்த முதல் நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

அப்பொழுது நாங்கள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தோம். கல்சுரல்ஸ் நிகழ்ச்சி. ”தில் யே பே செனு வே, ரஸ்தே பே நெயின் வே” ஷாலினி வட இந்திய ஆடையுடன் ஆடி கொண்டிருந்தாள். வேகமாக சென்று முதல் சீட்டிலிருந்த ஜீனியர் ஒருவனை எழுப்பிவிட்டு அமர்ந்தேன். ”தாலு சே தாலு மிலா” என்னை பார்த்து கொண்டே ஆடி கொண்டிருந்தாள். அட்டகாசமான நடனம். அவள் நடனம் முடிந்ததும் மேடைக்கு பின்னால் சென்று அவளை வாழ்த்தலாம் என்று புறப்பட்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து கதவருகே கேசவன் நின்றிருந்தான். இறுதியாக நடக்கும் பாட்டு போட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லி அனைவரும் வற்புறுத்தி கொண்டிருந்தனர். அவனை கேட்காமலே அவன் பெயரை நான் கொடுத்திருந்தேன். என்னை பார்த்ததும் பிடித்து கொண்டார்கள்.

எப்படியும் ஷாலினி ஒரு ப்ரைஸ் வாங்கிடுவா. பசங்க சைட்ல இருந்து ஒருத்தவங்க கலந்துக்க வேண்டாமா? சும்மா பாடுடா, நிச்சயம் ப்ரைஸ் நமக்கு தான். எவ்வளவோ ஏத்திவிட்டு அவனை ஒத்துக்கொள்ள வைத்தோம். பிறகு அந்த இடத்தை விட்டு நழுவி ஷாலினியை தேடி சென்றேன். அங்கே ஷாலினி குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அவளை கூப்பிட்டேன். திரும்பவில்லை. விசும்பல் சத்தம் கேட்டது. ஷாலினி அழுது கொண்டுருந்தாள்.

என்ன நடந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. விசும்பல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ”என்னடா ஆச்சு. சொல்லுடா” என்று நான் சொன்னதும் என்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் ஆடி முடித்து வந்ததும் அவள் மேல் யாரோ மோதிவிட்டானாம். அவள் திரும்பி முறைத்ததற்கு, ”என்னடி பெரிய பத்தினியாட்டம் முறைக்கற. எப்ப பார்த்தாலும் அந்த செந்திலோட உரசிக்கிட்டே தானே சுத்துவ. நான் உரசுனா என்ன வந்துச்சாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் டிப்பார்ட்மெண்ட் பசங்கள் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்களாம். அவன் MSc சாப்ட்வேர் நான்காம் ஆண்டு மாணவன் என்றும், பெயர் தெரியவில்லை என்றும், தண்ணி அடித்திருந்தான் என்றும் சொன்னாள்.

ஷாலினியுடன் ஆடிய MSc மூன்றாம் ஆண்டு மாணவியின் துணை கொண்டு அவன் யாரென்று கண்டுபிடித்தேன். அவனை தேட ஆரம்பித்தேன். அவன் ஆடிட்டோரியத்திற்கு பின்னால் நின்று
யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு தம் அடித்து கொண்டிருந்தான். அவனுடன் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் குழம்பி பிறகு நான் யார் என்பதை புரிந்து கொண்டான். ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” கேட்டு கொண்டிருந்தது. ”வந்துட்டாருடா ரோமியோ” என்று நக்கலாக சொல்லி சிரித்தான். ஒரு நிமிடத்தில் அவன் கண்ணாடி உடைந்திருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. என் இடது கண்ணத்தில் லேசாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன்
நெற்றியில் லேசாக ரத்தம். அவனுடன் இருந்த ஒருவனுடைய சட்டை கை மட்டும் கிழிந்திருந்தது. அங்கே கேட்ட சத்தத்தில் EEE HOD அந்த பக்கம் வந்துவிட்டார். அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டோம்.

நான் ஹாஸ்டலில் என் அறையில் இருந்தேன். இருபது நிமிடத்தில் கேசவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னை அடித்துவிட்டார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தது. காரணம் தெரியவில்லை. பயங்கர கோபமாக வந்தான். எவன்னு சொல்லுடா, நாளைக்கு ஒருத்தவனும் NGGO காலனியை தாண்ட மாட்டானுங்க. துடியலூர்ல இருந்து பசங்கள வர சொல்லிடறேன். அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும். சரி, இப்ப நீ என் கூட வா. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்ல தங்கிக்கோ. நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு காரணம் சொல்லவும் விருப்பமில்லை. வேறு சட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப சொன்னான். தயங்கி கொண்டே கிளம்பினேன்.

ஆடிட்டோரியத்திற்கு முன்னால் நின்ற கேசவனுடைய சாமுராயை எடுத்து கொண்டு கிளம்பினோம். யாரோ, ”கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாடி கொண்டிருந்தார்கள். முடிந்தவுடன் யாருக்கு பரிசு என்பதை கேட்டுவிட்டு செல்லலாம் என சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அங்கிருந்து கிளம்பி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. MSc நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அங்கே இருந்த NGGO காலனியை சேர்ந்தவனிடம் கேசவன் சமாதானம் பேச முயற்சி செய்தான். ஏன்டா நாளைக்கு ஒருத்தன் கூட காலனியை தாண்ட முடியாதுனு சொன்னியாம். விடுதியில் அவன் என்னிடம் பேசியது அதற்குள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதில் ஒருத்தனிடம் செல் ஃபோன் இருந்தது.

அந்த இடத்தை சரியாக மினி பஸ் கடந்து கொண்டிருந்தது. இப்பொழுது முன்பு போல அங்கே முள் செடிகள் இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கே ஒரு குச்சியில் போர்ட் மாட்டியிருந்தார்கள். தார் ரோட் இருந்தது.

நீ என்ன பெரிய கூ*யாடா? துடியலூர்ல இருந்து பசங்களை வர வெச்சா நாங்க பயந்துடுவோமா? அப்படி அவனுங்க வந்தா மட்டும் எங்களை என்னடா பண்ணுவான். பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் மாட்டியிருந்த காப்பு வெளியே வந்து அவன் கைப்பிடிக்குள் வந்தது. ஏதோ தப்பு நடக்க போகிறது என்று எனக்கு தொன்றியது. அந்த நிலவொளியில் அங்கே நடக்கவிருந்த பயங்கரம் எனக்கு புரிய ஆரம்பித்தது. கேசவனும் அதை புரிந்து கொண்டான். ஆனால் அவன் செயல் பட ஆரம்பிப்பதற்குள் அந்த காப்பு கேசவனின் வலது பக்க நெற்றியை பதம் பார்த்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நான், அங்கே அருகே ரோடு போட கொட்டி வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவன் பின் தலையில் அடித்தேன். இருவருடைய கெட்ட நேரமும் வேலை செய்தது. கல்லை எடுக்கும் போதோ அவனை அடிக்கும் போதே என் கையிலிருந்து நீண்டிருந்த அதன் ஆறு இஞ்ச் கூர்மையான பகுதியை நான் கவனிக்கவில்லை. அந்த கல் அவன் தலையில் அப்படியே சொறுகி கொண்டது. ஒரு பக்கம் கேசவன் நெற்றியிலிருந்து ரத்தம் ஒழுக, மறு பக்கம் பின் மண்டையில் கல் பாய்ந்த அந்த மாணவன். அவன் தலையிலிருந்து கல்லை என்னால் எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்.

நான் அப்படியே அந்த கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் அமர்ந்து விட்டேன். என்ன நடந்தது, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். ஆம்புலன்ஸ், போலிஸ் ஜீப் இரண்டும் வந்தது. போலிஸ் ஜீப்பில் நானும், ஆம்புலன்சில் கேசவனும், தலையில் கல் சொருகியிருந்தவனும் ஏற்றப்பட்டோம். அன்று அடிப்பட்டவுடன் ஓடியவர்கள் தவறாமல் வந்து சாட்சி சொன்னார்கள். நன்னடத்தையால் ஆறு ஆண்டுகள் முடித்து வெளியே விட்டார்கள். நேராக கேசவனை பார்க்க வந்துவிட்டேன். இதோ
இடிகரை வந்துவிட்டது.

இடிகரையில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் பெரிதாக காணப்படவில்லை. நேராக என் கால்கள் கேசவன் வீட்டிற்கு அழைத்து சென்றது. கதவு திறந்திருந்தது. நண்பர்கள் புடை சூழ வந்து கேசவனையும், அப்பாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்ட அந்த முன் அறை விரிச்சோடி இருந்தது. அந்த குரல்கள் இன்னும் அந்த சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே சென்றேன். சிமெண்ட் தரையில் இன்னும் குளிர் இருந்தது. இடது பக்கம் இருந்த அறை இருட்டாக இருந்தது. கேசவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பல நாள் வழிக்கப்படாத தாடி, காலில் விலங்குடன் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தேன். அவன் கண்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவன் கால்களில் நிறைய தழும்புகள். நெற்றியில் வலது பக்கம் இன்னும் அந்த தழும்பு தெரிந்தது. அவனுக்கு நான் யார் என்று தெரியவில்லை. அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்து மினி பஸ்ஸில் சென்று அமர்ந்தேன். பத்து நிமிடம் கழித்து புறப்பட்டது. பஸ்ஸில் நான்கைந்து பேர் மட்டும் இருந்தார்கள். ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.

நான் சத்தம் போட்டு அழவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.


நன்றி: எழுதியவரின் பெயர் தெரியவில்லை...!

Saturday, January 9, 2010

மர்மம்?

மானாமதுரையில் வீடியோகான் பல ஆயிரம் கோடி ரூபாயில் புது தொழிற்சாலை தொடங்க இருப்பதாக தமிழக அரசின் ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது - இது செய்தி

ஆளும் அரசின் புண்ணியத்தில் தான் தமிழ்நாட்டின் இன்டு இடுக்கு முதல் சந்து பொந்து வரை இலவச டி.வி-யில் மானாட மயிலாட பார்த்து பிறவி பெரும்பயனை அடைந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில் எந்த மார்க்கெட்டை பிடிக்க வீடியோகான் இங்கு வந்து கடை விரிக்கிறது..?

இலவச டிவியின் ஆயுள் அதை கொடுத்தவர்களின் ஆட்சிக் காலத்தோடு முடிந்து விடும் என்று சில வருடங்களுக்கு முன் அரசில் வேலை பார்க்கும் நண்பர் சொன்னதாக எனது பேராசிரியர் சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது...!!!!

சோர்ந்து போயிருக்கும் டிவி கடைக்காரர்கள் கவனத்துக்கு..!!

Monday, January 4, 2010

புத்தாண்டு

போன வாரம் அலுவலக நண்பர் "ஹேப்பி நியூ இயர்" சொன்னார். எனக்கு ஆங்கில புத்தாண்டில் நம்மிக்கை இல்லை என்றேன். தமிழ் புத்தாண்டு எப்போது வருகிறது என்று கேட்டார். எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. தமிழ் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா? இந்த பஞ்சாயத்தே முடியாத நிலையில் இந்த வார விகடனில் "உண்மையான தமிழ் புத்தாண்டு தை மாதம் வரும் பவுர்ணமியான தை பூசம் தினம் தான்" என்று ஒரு ஆய்வாளர் கிளம்பியிருக்கிறார்.

தமிழ் புத்தாண்டு எப்போது என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யாராவது சொல்லுங்களேன்..!!