Sunday, December 19, 2010

அடடே! தமிழ் மீடியாவுக்கு ரோசம் வந்துவிட்டதே

தமிழ் ஊடகங்களில் சமீபமாக பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை
அனைவரும் வரிந்து கட்டி எழுதுகிறார்கள். குமுதம்
ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு பத்திரிக்கைகள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுத ஆரம்பித்து விட்டன.இன்னும் சொல்லப் போனால், நேற்று (18.12.2010) வந்த ஜு.வியில் மொத்த 48 பக்கங்களில் 23 பக்கங்கள் ஸ்பெக்ட்ரம் செய்திகள் மட்டுமே!! ஜூவியில் கடந்த இரு வாரங்களாக ஆளும் கட்சி மீது உக்கிரமான அனல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

குடும்பச் சண்டை காரணமாக சன் டிவியும் 'ஜேஜே' என்று ஸ்பெக்ட்ரம் பற்றி செய்தி வாசிக்கிறது. ஆனால் தமிழ் நாளேடுகளில் தினமணி மட்டுமே ஆரம்பம் முதல் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதி வந்தது. தினமலர் இப்போது எழுத ஆரம்பித்து விட்டது. ஆனால் பாமரர்களின் பத்திரிக்கை எனப்படும் தினத்தந்தி இந்த உலகத்தில் தான் இருக்கிறதா? என்று தெரியவில்லை. எப்படி எல்லாம் இருந்த தினத்தந்தி இன்று முரசொலியின் மறு பதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்த போதே வட இந்திய ஊடகங்கள் ராசாவையும் திமுகவையும் உரித்து உப்புக்கண்டம் போட்டு விட்டன. 

பத்திரிக்கைகளில் வருவது ஒரு பக்கம் இருந்தாலும் நாடு நகரமெல்லாம் ஸ்பெக்ட்ரம் அலைதான் வீசுகிறது. அலுவலகங்கள், பேருந்து, ரயில், டீக்கடை, வீடு, சலூன், கல்யாண வீடு, சாவு வீடு, ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக், பிளாக்குகள், எஸ்.எம்.எஸ், கிராமங்கள், சிறு நகரம் என்று தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது. நம்மிடமே சுவிட்சர்லாந்து, டென்மார்க், துபாய், சீனா, ஆஸ்திரேலியா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தொடர்பு கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி விசாரிக்கிறார்கள் 

ஆனால் அனைவரிடமும் ஒரு தார்மீக கோபமும் அடுத்த தேர்தலில் திமுக தூக்கி எறியப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Saturday, December 18, 2010

இந்த ஆண்டு அதிக மழை ஏன்?

இந்தியத்தாய் தன் மக்களுக்காய் விடும் கண்ணீரில் தமிழ் நாடு மிதக்கிறது. ஊழலிலே மிகப் பெரிய ஊழலைச் செய்த தமிழர்களை நினைத்து நினைத்து, இந்தியத் தாய் அழுது கொண்டிருக்கிறாள். அக்கண்ணீர் தான் தமிழ் நாட்டில் மழையாய்ப் பொழிகிறது.

* * * * * *

கோடிகளில் குளித்து, பணப்படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் ஊழல்வாதிகளே !

ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு “அம்மா பசிக்கிறதே?” என்று அடிவயிற்றிலிருது கதறும் சிறார்களைப் பாருங்கள் ! சாலையோரம் குப்பைக் கூளங்களுக்கு இடையே படுத்துறங்கும் மக்களைப் பாருங்கள் ! வயிறு காய்ந்து, ஒட்டி, பேசக்கூட திராணியற்ற ஏழைகளைப் பாரீர் கொடுங்கோலர்களே !

இந்திய நீதிபதிகளே, மக்கள் உங்களைத்தான் கடவுளாய் பார்க்கின்றார்கள். கைவிட்டு விடாதீர்கள்.

- பஞ்சரு பலராமன்




நன்றி: அனாதி

Thursday, November 25, 2010

இன்னொரு ஸ்பெக்ட்ரமா?

இலவச தொலைக்காட்சி, இலவச சமையல் எரிவாயு அடுப்பு என்ற வரிசையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு மாபெரும் திட்டமான இலவச விவசாய நீரிறைப்பான் (பம்பு செட்) திட்டம் (Free Pump Set Scheme) விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், அது உள்ளுர் நீரிறைப்பான் உற்பத்தியாளர்களுக்கு இடமளிக்காத புதிரான ஒரு திட்டமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டின் விவசாயிகளில் தற்போது 19 இலட்சம் பேர் மின் இணைப்புடன் கூடிய நீரிறைப்பான்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 14 இலட்சம் விவசாயிகளுக்கு, அவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் நீரிறைப்பான்களுக்குப் பதிலாக, புதிய நீரிறைப்பான்களை இலவசமாக அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தி்ற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் இணையத்தின் வாயிலாக கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருந்த அந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளைக் கண்ட நீரிறைப்பான் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் விவசாய பம்பு செட் தயாரிப்பில் (97%) முன்னணியில் இருக்கும் கோயம்புத்தூர் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியோடு கோபமும் வந்துள்ளது. காரணம்?

மின்சார பம்பு செட் என்றாலே நினைவுக்கு வருவது கோயம்புத்தூர்தான். இன்று நேற்றல்ல, பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் மாவட்டமாகத் திகழும் கோவையில்தான் விவசாய நீரிறைப்பான்கள் மட்டுமின்றி, மின் மோட்டார்களால் இயக்கப்படும் மாவரைத்தல் இயந்திரம் (வெட் கிரைண்டர்) உள்ளிட்ட பல பயன்பாட்டு்ச் சாதனைங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றனர். அந்நிய நாட்டுத் தயாரிப்பான புல்லட் வாகனத்திற்கு டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்துப் பொருத்தி, அதன் பயன்பாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்திய இடமல்லவா கோயம்புத்தூர்? தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விவசாய நீரிறைப்பான்கள் அனைத்தும் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டதுதான். அப்படியிருக்க கோயம்புத்தூரில் மின்சார நீரிறைப்பான்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் எவரும் பங்கேற்ற முடியாதவாறு அந்த நிபந்தனைகள் இருந்தன. இந்த ஒப்பந்த புள்ளிகள் கோரலில் தமிழ்நாடு மின்சார வாரியம் குறித்துள்ள நிபந்தனைகள் இவைதான்:

1. ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில் பங்கேற்கும் எந்தவொரு நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனமும், ஆண்டிற்கு ரூ.30 கோடிக்கும் குறையாமல் வணிகம் (Turn -Over )செய்திருக்க வேண்டும்.

2. அந்த நிறுவனத்தின் அல்லது தொழிற்சாலையின் சொத்து மதிப்பு ரூ.15 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

3. தொழிற்சாலையில் குறைந்தது 100 பேராவது பணியாற்றிட வேண்டும்.

4. ரூ.50 இலட்சத்திற்கு வங்கி உத்தரவாதம் பெற்றுத் தர வேண்டும்.

5. ரூ.10 இலட்சம் வங்கி வைப்பில் செலுத்தி ஒப்பந்தப் புள்ளியுடன் அளிக்க வேண்டும்.



இதைப் பார்த்தவுடன் சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, கோவையில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் ஒதுங்கிக்கொண்டன.

மேற்கண்ட நிபந்தனைகள் மட்டுமின்றி, ஒரு முக்கிய நிபந்தனையை தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ளது. அது என்னவெனில், இந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரலில், தங்களுடைய தயாரிப்பான நீரிறைப்பான்களுக்கு இந்திய அரசின் தரச் சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ) மட்டும் பெற்றிருந்தால் போதாது, இந்திய அரசின் மின்சார சிக்கன வாரியத்தின் (Bureau of Electricity Efficiency) நட்சத்திரச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த நட்சத்திரச் சான்றிதழ் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று நீரிறைப்பான்களின் மின்சார சிக்கன திறனிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அதன்படி, நான்கு நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

அது மட்டுமல்ல, அரசின் ஒப்பந்தத்தைப் பெற்று நீரிறைப்பான்கள் விற்கப்பட்டாலும், அவைகள் விவசாய நிலங்களில் பொறுத்தப்பட்டு, ஒரு மாத காலத்தில் 35% மின் சேமிப்பு ஆகியிருந்தால் மட்டுமே நீரிறைப்பான்களுக்கான பணம் தரப்படும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது மின்சார வாரியம்!

இந்த நிபந்தனைகளையெல்லாம் பார்த்த சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை ஒருவரும் ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. ஒப்பந்தப் புள்ளி அளிக்க முதலில் 15ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவரும் அளிக்காததால், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படியும் ஒருவரும் ஒப்பந்தப் புள்ளி அளிக்கவில்லை.

உண்மையிலேயே, தமிழக அரசு மின் சேமிப்பில் அக்கறைக் கொண்டுதான் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளதா என்று பார்த்தால், அதில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. உதாரணமாக ஒரு சிறு தொழில் நிறுவனம் தயாரிக்கும் 10 குதிரை சக்தி கொண்ட நீரிறைப்பான் ரூ.20,000 நிகர விலை ஆகிறது. இதே திறன் கொண்ட 4 நட்சத்திர சான்றிதழ் பெற்ற நீரிறைப்பான் விலை ரூ.32,000 ஆகிறது. அதாவது 40 விழுக்காடு விலை கூடுதல். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு சாதாரண நீரிறைப்பான் ஓடினால் ஆகும் மின்சாரம் 5.5 யூனிட் ஆகும். அதே ஒரு மணி நேரத்திற்கு 4 ஸ்டார் நீரிறைப்பான் ஓடினால் அதற்கு ஆகும் மின்சாரம் 5.25 யூனிட்டுதான். ஆக சேமிப்பு 5 விழுக்காடே. ஆனால் விலை 40 விழுக்காடு கூடுதல்!

இது தொடர்பாக கோவை மின்சார நீரிறைப்பான் மற்றும் உபரிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.வி.கருப்பசாமி பேசியபோது, 4 நட்சத்திர அளவிற்கு திறன் மேம்பாட்டை தங்களாலேயே செய்து தர முடியும் என்றும், அதற்குக் கூடுதலாக 10 விழுக்காடுதான் அதிக விலை ஆகும் என்றும் கூறினார்.

ஆக, கோவையில் இயங்கிவரும் சிறு, பெரு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்காத, பங்கேற்க இயலாத வகையில் ஒப்பந்தப் புள்ளிக் கோரலிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனை விதித்ததன் இரகசியம் என்னவென்பதுதான் இதுவரை புரியாத புதிராக உள்ளது.

ஏனெனில் கோவையில் இருந்து மட்டுமல்ல, அகமதாபாத் போன்ற நகரங்களில் இயங்கிவரும் பெரு நிறுவனங்களும் கூட இந்த ஒப்பந்தக் கோரலை நிராகரித்துவிட்டன!

இது இந்தியாவில் இயங்கிவரும் நீரிறைப்பான் நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஒப்பந்தப் புள்ளியா அல்லது அயல் நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கக் கூடியதா என்பது குறித்து அந்த கோரலில் விவரம் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.

தமிழக மின்வாரியத்தின் இப்படிப்பட்ட பயங்கரமான ஒரு ஒப்பந்தப் புள்ளிக் கோரலின் பின்னணி என்ன என்பது எவருக்கும் புரியாமல் உள்ள நிலையில், இது சிறு தொழில்களை நசுக்கும் எண்ணத்துடன் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தமிழக மின் வாரியத்தின் இந்த ஒப்பந்தக்கோரலை எதிர்த்து நீரிறைப்பான் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்துள்ளதாக கசிந்த செய்தியை அடுத்து, தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தற்போது தங்கள் நிலத்தில் நீரிறைப்பான் பொறுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பல இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களில் இரண்டு இலட்சம் விவசாயிகளை, அவர்கள் 4 நட்சத்திர நீரிறைப்பான்களை வாங்கிப் பொறுத்தினால், அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குமாறு அந்த சுற்றறிக்கை கூறுகிறது. இது பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நீரிறைப்பான் விற்பனைக்கு வழி செய்யும் சுற்றறிக்கையாகும்!

இந்த சுற்றறிக்கையை ஐ.எஸ.ஐ. சான்றிதழ் மட்டுமே பெற்று நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளையும், 4 நட்சத்திர சான்றிதழ்களுடன் நீரிறைப்பான்களை உற்பத்தி செய்யும் சி.ஆர்.ஐ., டெக்ஸ்மாக்கோ போன்ற பெரிய நிறுவனங்களையும் பிரித்தாளும் முயற்சி என்று கோவை சிறு நீரிறைப்பான்கள் மற்றும் உபரி உற்பத்தியாளர்கள் சங்கம் பார்க்கிறது.

அதுமட்டமல்லாமல், இந்த சுற்றறிக்கை, விவசாயிகளின் உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. இந்த விதமான பம்பு செட்டை வாங்கினால்தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று நேரடியாகவே மின் வாரியம் கூறியுள்ளது!

மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயல்படும் எந்த ஒரு அரசும், அது செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவதாகச் செயல்படுத்தும். ஆனால் இந்த இலவச பம்பு செட் திட்டத்தை வேறு ஏதோ ஒரு உள் நோக்கத்துடனோ அல்லது உள் திட்டத்துடனோ தமிழக அரசு செயல்படுத்துகிறது என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படுகிறது.

ஒரு முகவரை வைத்து இந்த ஒப்பந்தத்தை அரசு முடித்துவிட நினைக்கிறது என்கிற ஐயப்பாடும் நிலவுகிறது. எதுவாயினும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளியாகவில்லையா, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறதல்லவா? அப்போது உண்மை தெரியும்.

நன்றி: தமிழ்வெப்துனியா

Monday, November 22, 2010

திமுகவின் இன்னொரு முகம்

கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி விசாரிக்கப் போக.. அது இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக நினைக்குமளவுக்குப் போகும் என்று மன்மோகன்சிங்கும் அவருடைய அல்லக்கைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நீரா ராடியா என்ற அந்த இந்தியாவின் தலைசிறந்த புரோக்கரின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பட்டியலிட்டால் பக்கம் போதாது போலிருக்கிறது..

அம்மணியின் திருவாய் ஜம்முதாவி எக்ஸ்பிரஸை போல நிறுத்தாமல் பேசியிருக்கிறது..! இந்தியாவின் அடுத்த அரசை அமர வைக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால்தான், இந்த அம்மணியின் ரேடியோ ஒலிபரப்பு நான் ஸ்டாப்பாக இருந்திருக்கிறது.

முதலில் இந்த டேப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது..? யார் டேப்புகளை பதிவு செய்தது..? எப்படி இந்த டேப்புகள் வெளியில் லீக் ஆனது என்பதையெல்லாம் விசாரித்தால் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.



ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்திய பின்பே சிபிஐ இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. அப்போது அமைச்சராகவே இருந்தாலும் இவரைத் தொடர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராசாவின் பேச்சை டேப் செய்யும் அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது.

ஸோ.. தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாகத் திகழும் கேபினட் அமைச்சரான ராசாவின் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்படுகின்ற சூழலில்தான் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 15-வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு கடந்தாண்டு மே 13 அன்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்த செய்தியும் அன்றைக்கே கிடைத்தது.

இந்தக் களேபரத்துக்கிடையில் இலங்கையில் இனவாத சிங்களப் பேரரசின் கொடும் தாக்குதலினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழ் ஈழ மக்கள் செத்து மடிந்தார்கள். மே 18-ம் தேதியன்று பிரபாகரன் இறந்ததாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுவிட்டது. அன்றோடு தமிழ் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போரும் முடிவுக்கு வந்தது.

மே 19-ம் தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி ஆட்சி பற்றி விவாதிக்க டெல்லி செல்கிறார். தனது குடும்பத்தினரை எப்பாடுபட்டாவது அமைச்சரவையில் இடம் பெற வைத்தே தீருவது என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு சோனியாவையும், மன்மோகனையும் சந்தித்துப் பேசுகிறார்.

எத்தனை சீட்டுக்கள் என்பதில்கூட காங்கிரஸுக்கு பிரச்சினையில்லை. ஆனால் யார், யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு தலைவலி.. அத்தனை சொந்தங்களையும் கொண்டு போய் நிறுத்தி “இவங்க எல்லாருமே என் குடும்பந்தான்.. ஒருத்தருக்கு கொடுத்து, இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா கோச்சுக்குவாங்க. என் மனசு தாங்க முடியாது” என்றெல்லாம் சீன் போட்டு அழுதார் கலைஞர்.

மே 20-ம் தேதியன்று மன்மோகன்சிங் டில்லி அரண்மனைக்குச் சென்று தற்போதைய ராணியிடம் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். அங்கேயே அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதினால் மன்மோகன் வீடு திரும்புவதற்குள், மே 22 அன்று அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் விண்ணப்பம் கொடுத்த 20-ம் தேதியில் இருந்து அரியணை ஏறிய 22-ம் தேதிவரையிலுமான காலக்கட்டத்தில் இந்த நீரா ராடியா என்னும் புரோக்கரின், எண்ணற்ற சித்துவேலைகள் மர்ம தேசமான டெல்லி அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

இந்த டேப்புகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. நாங்கள் இப்படி எதையும் பேசவில்லை. சி.பி.ஐ. பொய்யாக இந்த டேப்புகளைத் தயாரித்துள்ளது என்று இந்த டேப்பில் சிக்கியுள்ள அரசியல்வியாதிகள் யாரும் இதுவரையில் முன் வந்து கூறவில்லை.
மாறாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டும், பயத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து மழுப்பியபடியே நடமாடி வருகிறார்கள். அ.ராசாவோ, கனிமொழியோ இதுவரையில் இது பற்றி எனக்குத் தெரிந்து எதையும் கூறவில்லை. இது போலியானது என்றால் அவர்கள் தாராளமாக இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். போயிருக்கலாம்.

ஆனால் சகல செல்வாக்கும் உடைய அவர்கள் மெளனமாக இருப்பதைப் பார்க்கின்றபோது, நிச்சயம் இந்த பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் அனைத்தும் உண்மையானவைகள்தான் என்று 200 சதவிகிதம் நம்ப வேண்டியிருக்கிறது. நானும் நம்புகிறேன்.

இடையில் நீரா ராடியா லண்டனில் இருந்தபடியே இந்த டேப்புகளை இனியும் வெளியிடக் கூடாது என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது தள்ளுபடியானதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸோ.. இனிமேல் இந்த டேப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பேசியிருக்கிறார்கள் என்கிற நம்பகத்தோடு மேலும் சில விஷயங்களைப் பற்றி இங்கே பேசுவோம்..!

முதலில் வீர்சிங்வியிடம் என்ன சொல்கிறார் நீராராடியா? மன்மோகன்சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அனில் அம்பானிக்குக் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை முகேஷ் அம்பானி டிவி நிகழ்ச்சியில் தான் பேசப் போகும் விஷயத்தில் மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அது தொடர்பான கேள்விகளைத்தான் வீர் சிங்வி கேட்க வேண்டும்.. இது முகேஷ் அம்பானிக்காக, நீரா ராடியா செய்யும் லாபி..!

ஆனால் இதில் கேலிக்குள்ளாகும் விஷயம் வீர் சிங்வி நடத்திய அந்த விவாதத்தை முகேஷ் அம்பானி உள்ளிட்ட அறிவுஜீவிகளெல்லாம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலையுடன் விவாதிக்கிறார்கள் என்று அப்பாவி ரசிகர்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத்தான்..!

மே 21 காலையில் கனிமொழியுடன் பேசும் ராடியா தி.மு.க. கொடுத்திருக்கும் பட்டியலை காங்கிரஸ் ஏற்க மறுத்தது பற்றித் தெளிவாகச் சொல்கிறார். மூன்று கேபினட், நான்கு இணை அமைச்சர்கள் ஓகே. ஆனால் கேபினட் அமைச்சர்கள் யார், யார் என்ற குழப்பத்தை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் காங்கிரஸ் சொல்லியிருக்கிறது..!

இதில் எங்கே தமிழ்நாட்டின் நலன் இருக்கிறது.. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சினைதானே தெரிகிறது..?

மே 22-ல் பர்கா தத்துடன் பேசும் ராடியா, தி.மு.க. கேட்கும் இலாகாக்களை பட்டியலிடுகிறார். இதில் சாலை போக்குவரத்து, மின்சாரம், நிலக்கரி, சுகாதாரம், ரயில்வே என்று லம்ப்பான மேட்டர்களையே கேட்டிருப்பது தெரிகிறது.. அதிலும் தயாநிதி மாறன் தனக்காக நிலக்கரி, சுரங்கத் துறையைக் கேட்டிருக்கிறார்..

இது மட்டும் கிடைத்திருந்தால், கனிமொழியும், அவரது தாயாரும் இப்போதும் செய்து வரும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தொழிலில் கை வைத்திருக்கலாம். ஒருவேளை கனிமொழிக்கு இப்படி தங்களது தொழிலில் தலையிட்ட நினைத்ததால்தான் மாறன்மேல் கோபம் வந்ததோ..?

பர்காதத் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மறந்து இந்தக் கேடு கெட்ட ஆட்சியாளர்களின் பதவியேற்புக்கு உதவிகளைச் செய்துள்ளார். அதுவும் எப்படி..?

மாறன், கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு சகிதமாக வந்ததால் கலைஞரிடம் தனியாக நாலு வார்த்தைகூட பேச முடியவில்லை என்பது பிரதமரின் அங்கலாய்ப்பாம்.. டி.ஆர்.பாலு வேண்டாம் என்பது பிரதமரின் அவா. ஆனால் இதனை அவரால் அப்போது வெளிப்படுத்த முடியவில்லை என்பது பர்கா தத்தின் மில்லியன் டாலர் தகவல்..!

எப்படி பேசுவார்..? டி.ஆர்.பாலு வேண்டாம் என்றோ,. ராசா வேண்டாம் என்றோ அவர்களை வைத்துக் கொண்டே பேச முடியுமா..? அதுதான் தயக்கம். இந்தத் தயக்கத்திற்காக கனிமொழியின் வேண்டுகோளை ஏற்று ராடியா பர்கா தத்திடம் பேச, பர்கா தத் மீண்டும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி நேரம் வாங்கித் தருகிறேன். அல்லது குலாம் நபி ஆசாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்கிறார்.

ம்.. இந்தம்மா 24 மணி நேரமும் டிவிலதாம்பா தெரிஞ்சாங்க.. இவங்களுக்கு எப்படி இந்த புரோக்கர் தொழிலுக்கெல்லாம் நேரம் கிடைச்சதோ தெரியலையே..?

அடுத்த போன் ராசாவுக்குப் பறக்கிறது.. “டி.ஆர்.பாலுதான் பிரச்சினை. அதனால்தான் மினிஸ்ட்ரி பெர்த் இன்னமும் பைனல் ஆகாமல் இழுத்தடிக்கிறது..” என்கிறார் ராடியா. பதைபதைக்கிறார் ராசா. “உடனே இதை தலைவரிடம் சொல்ல வேண்டும். நாங்க சொல்ல முடியாது. நீங்களே இதை எப்படியாவது தலைவர் காதுக்கு போன்லயாவது சொல்லிருங்களேன்.. இல்லாட்டி ரகசியக் கடுதாசியையாவது கொண்டுபோய் கொடுங்களேன்” என்கிறார் ராசா. அப்படியேகூட, “அ.ராசாகூட எங்களுக்குப் பிரச்சினையில்லை. டி.ஆர்.பாலுகூடத்தான் பிரச்சினைன்னு சொல்லச் சொல்லுங்க..” என்று கூச்சநாச்சமில்லாமல் பதறுகிறார்.

உஷ்.. அப்பா.. இந்த மொள்ளமாரி, முடிச்சவிக்கியெல்லாம் ஏதோ கூவம் ஆத்துக் கரையோரமெல்லாம் இல்லப்பா. நிசமா அ.ராசா மாதிரியான ஆளுங்கதாம்பா அவங்க..! பாவம் டி.ஆர்.பாலு..! தனக்கு லைன் கிளியர் ஆக வேண்டும் என்பதற்காக ராசா எவ்ளோ துடிக்கிறார் பாருங்க..!

அடுத்த போன் கனிமொழிக்கு.. இடையில் அகமது பட்டேலிடம் ராடியா போனில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு அகமது படேலிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல் சாலை போக்குவரத்து கட்டுமானத் துறை பாலுவுக்கோ, மாறனுக்கோ கிடையாது என்பது..

இதைத்தான் கனியிடம் சொல்கிறார் ராடியா. கனி மறுக்கிறார். “யார் சொன்னது இது? என்னிடமோ அப்பாவிடமோ யாரும் இதைச் சொல்லவில்லை..” என்று மறுக்கிறார். ஆனால் “யாரோ சென்றிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள்..” என்கிறார் ராடியா. ஸோ.. தாத்தாவை யார் கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதிலேயே அங்கே போட்டி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த டேப்பிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள இன்னொரு விஷயம்.. தாத்தாவும் காது கேளாதோர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார் என்ற சோகச் செய்திதான் அது. வெல்கம் தாத்தா..!

அப்போது டெல்லியில் தங்கியிருந்த ராஜாத்தி அம்மாவை ராடியா நேரில் சென்று சந்திக்கிறார். அங்கேயும் ஏதோ சதித் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதை இவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களில் தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு தகவல். ராஜாத்தியம்மாளுக்கு நீரா ராடியாவை அறிமுகப்படுத்தி வைத்தது பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமின் மனைவிதான் என்கிறார்கள். இவர்தான் இப்போதைக்கு ராஜாத்தியம்மாளின் பண விவகாரத்தை டீல் செய்து, கூடவே சுற்றுக்கும் விட்டு வருகிறார் என்பது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்..!

கனியிடம் பேசி முடித்துவிட்டு உடனேயே பர்காவுக்கு போன் அடித்து சாலை போக்குவரத்துத் துறை மாறனுக்கோ, பாலுவுக்கோ இல்லை என்று பிரதமர் மறுத்துவிட்டதைச் சொல்கிறார் ராடியா. கூடவே காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க.வுடன் யார் பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கனியிடம் பேசியதையே சொல்கிறார் ராடியா..

அன்றைய மதிய நேரத்தில் ராடியாவிடம் இருந்து அ.ராசாவுக்கு போன் பறக்கிறது. அழகிரியைப் பற்றி அவருடைய செல்ல மருமகன் தயாநிதி மாறன் டில்லியில் என்னென்ன வத்தி வைப்புகளை பற்ற வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ராடியா சொல்கிறார். அஞ்சாங்கிளாஸு தாண்டாதவரு.. இங்கிலீஷ் தெரியாது.. அவர் ஒரு கிரிமினல் அப்படீ, இப்படீன்னு தயாநிதி மாறன் செஞ்சோற்றுக் கடனை அடைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே ராசாவும் அழகிரியிடம் மாறன் பற்றி தான் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொல்கிறார். ஆக, ராடியாவிடமிருந்து நியூஸை வாங்கி அழகிரியிடம் போட்டுக் கொடுத்துவிட்டு தனக்கான ஆதரவை அழகிரியிடமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் ராசா என்றே நம்ப முடிகிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் கனிமொழிக்கு போன்.. கனி கேட்கின்ற முதல் கேள்வியே ங்கொய்யால வகையானது.. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் போகிறாரா இல்லையா?” என்று கேட்கிறார் கனி. கலைஞர் டெல்லியில் இருந்தபோதெல்லாம் கனிமொழி, ராசா, தயாநிதி, பாலு நால்வரும்தான் கூடவே போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கட்சிதானே.. ஒரே பேமிலிதானே..? பேசிக்கவே மாட்டாங்களா.. குடும்பப் பிரச்சினைல சண்டைன்னா அதை குடும்பத்துக்குள்ள வைச்சுக்க வேணாமாய்யா..! இப்படியா பப்ளிக்காக்குறது..?

அவங்களுக்காக.. அவங்க தலைமுறைக்காக ஒரு மனுஷன் நடக்க முடியாத காலத்துலேயும் தவழ்ந்தாவது போய் பிச்சை கேட்டு அழுதுகிட்டிருக்காரு.. அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா இவங்களுக்கு..?

வெறுப்பாகப் பேசுகிறார் கனிமொழி. “அவர் போறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா போயிட்டு வந்து அப்பாகிட்ட அகமது படேல் கூப்பி்டடாரு போனேன்னு சொல்வாரு..” என்கிறார் கனி. ஆக மொத்தம், தயாநிதியின் வளர்ச்சி சிஐடி காலனி வீட்டுக்கு என்றைக்குமே உறுத்தலாகத்தான் உள்ளது..

22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மன்மோகன்சிங் தனது 19 சகாக்களுடன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுவிட்டார். அன்றைய இரவு மீண்டும் கனிமொழியிடம் பேசுகிறார் ராடியா. கனிமொழி இப்போது இன்னொரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அது ராசா மீண்டும் மந்திரியாக வேண்டும் என்பதில். “இனிமேல் அப்பாவுடன் யார் பேச வருவதானாலும் அவர்கள் இவரைப்(அ.ராசா) பற்றி எதிராகப் பேசக் கூடாது.” என்று ராடியாவிடம் உறுதியாகக் கூறுகிறார் கனிமொழி.

ஆக.. தயாநிதி மாறனுக்கு எதிராக அழகிரியை டெல்லியில் வளர்க்க முடியாது.. ஆனால் ஆ.ராசாவை வளர்க்கலாம் என்று ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் நன்கு தி்ட்டமிட்டுத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..! இதற்கிடையில் மே 22-ம் தேதியே கலைஞர் சென்னை திரும்பி விட்டார்.

23-ம் தேதி காலையில் பத்து மணிக்கு மீண்டும் கனிமொழிக்கு போன்.. இம்முறை ராடியா தெளிவாகச் சொல்கிறார் அழகிரி பற்றியும், ராசா பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தில் தான் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக..!

அழகிரியின் இந்தி, ஆங்கிலம் தெரியாத நிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக அவருக்குக் கீழ் இரண்டு மொழிகளும் தெரிந்த நபரை துணை அமைச்சராகப் போட்டுச் சமாளிக்கச் சொல்லுங்கள் என்று தனது பெரிய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் கனிமொழி. கூடவே “அந்த ஆளு” என்று தயாநிதி மாறனை விளித்து அவருக்குத் தொலைத் தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகிறார். மாறனுக்குப் பதவி கிடைப்பது தி.மு.க.விலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் ஒரு பிட்டைப் போடுகிறார் கனி.!

இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே நாள் இரவில் வீர்சிங்வியைத் தொடர்பு கொள்கிறார் ராடியா. தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளும்படி பிரதமருக்கே நிர்ப்பந்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ராடியா. இப்படி நிர்ப்பந்தம் கொடுப்பது ஸ்டாலினும், அவரது அக்காள் செல்வியும் என்கிறார் ராடியா. இதென்னாங்கடா புது குழப்பம்னு யோசிச்சா.. நமக்குத்தான் தலையே சுத்துது..!

ஸ்டாலினுக்கு அழகிரியின் வளர்ச்சி நிச்சயம் ஆபத்தானதுதான். ஆகவே அவர் பதவியில் இல்லாமல் இருந்தால்தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். செல்விக்கோ தனது மகன் போன்ற தயாநிதி மாறனை விட்டுக்கொடு்க்க முடியாத நிலைமை. அந்த மகன் மட்டும் இல்லாவிடில் தான் இன்னமும் ராயப்பேட்டையில் துணிக்கடையில் பில்தான் போட்டுக் கொண்டிருந்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் பாசப்பிணைப்பில் செல்வியும், ராஜதந்திரவகையில் ஸ்டாலினும் தயாநிதி மாறனுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. ம்.. இந்த மாறன்களுக்கு மச்சம் எங்கிட்டுத்தான் இருக்குன்னு தெரியலை சாமிகளா..!

ஆனால் ராடியா சொல்லியிருப்பதுபோல் 600 கோடி ரூபாயை தயாளு அம்மாளுக்கு மாறன்கள் கொடுத்திருந்தால், அது முன்னதாகவே சன் டிவியில் பங்கு பிரிக்கும்போது நடந்தததன் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது தயாளு அம்மாவுக்கு மிகக் குறைவான தொகையைத்தான் பங்காக கொடுத்தார்கள் என்று ஏக கோபத்தில் இருந்தார்கள் கோபாலபுரத்து குடும்பத்தினர்.. ஓகே.. எப்படியோ வந்து சேர்ந்திருந்தால் சரிதான்..!

இதற்கிடையில் 23-ம் தேதி இரவு சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் பாலுவை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு அழகிரி தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கலைஞரிடம் நேருக்கு நேராகக் கேட்டு உறுதிமொழி வாங்கிவிட்டுச் சென்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவிடம் “ஸாரி பாலு..” என்று ஒரு வார்த்தையில் பாலுவின் பதவி கனவில் ஒரு டன் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு சிட்டாகப் பறந்தார் அழகிரி.. இதுவெல்லாம் தெரிந்துதான் ராசா மறுநாள் காலை ராடியாவிடம் பேசும்போது உறுதியாகச் சொல்கிறார் கேபினட் பெர்த்தில் அழகிரி உறுதியென்று....!

அந்தச் சமயத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ஏன் இவ்ளோ லேட்டு என்று பத்திரிகைகள் மாய்ந்து, மாய்ந்து கட்டுரைகள் எழுதித் தள்ளியபோது தி.மு.க.வால்தான் தாமதம் என்ற செய்தி காங்கிரஸால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அப்படியாவது தி.மு.க. சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரட்டுமே என்றுதான்..!

இந்த இடைவெளியில் பாலுவுடனும், அ.ராசாவுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கைகூட வெளியிட்டார். நம்மால் தாமதம் என்று அவர்கள் சொல்லக் கூடாதே என்பதால்தான்..!

அ.ராசாவின் பெர்த் 23-ம் தேதி இரவில் உறுதியாகிவிட்டதாக ராடியாவும் சொல்கிறார். அழகிரியைப் பற்றி மாறன்களின் பற்ற வைப்புகள் அவருக்கே தெரியும் என்பதை ராசா மீண்டும் இங்கே தெளிவாக்குகிறார்.

ராடியா என்னும் அரசியலில் இல்லாத வெறும் புரோக்கர் பெண், இத்தனை அல்லல்பட்டு ஒருவரை மத்திய அமைச்சரவையிலேயே சேர்க்க முடிகிறது என்றால் இவரது செல்வாக்கு என்ன என்பதையும், எதற்காக என்பதையும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறையப் பெற வேண்டியிருக்கிறது.” என்று ராடியா ராசாவிடம் சொல்வதைப் பார்க்கும்போது இதுவெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடந்தேறி உள்ளது என்று சந்தேகத்திடமில்லாமல் நான் நம்புகிறேன்..!

கூடவே அமைச்சருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருப்பதைப் போல ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டலிடம் ராசா சார்பில் சமாதானம் பேசியிருப்பதையும் சொல்கிறார் ராடியா. இதற்கு ராசா சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.. “இன்னும் அஞ்சு வருஷம்கூட என்கூடத்தான் அவர் வேலை பார்த்தாகணும். இதையும் அவர்கிட்ட சொல்லிருங்க” என்கிறார் ராசா.. அசத்தல் சினிமா டயலாக்..! செத்தான்டா வில்லன்..!

எப்படியோ இந்தத் திருடர்கள் இத்தனை உள்ளடி வேலைகளையும் செய்த பின்பு மே 28-ம் தேதியன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..!

இதன் பின்பும் நிச்சயம் சி.பி.ஐ. போன் பேச்சுக்களை பதிவு செய்திருக்கும்.. அதனால்தான் இன்றைக்குக்கூட ஆடிட்டர் ஜெனரலின் குற்றச்சாட்டுக்களை ஒரு ஆதாரமாக தான் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்களிடம் இப்போது இருக்கும் ஆதாரங்களே போதுமானது என்றும் சிபிஐ கூறியிருக்கிறது.

ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.

இது தி.மு.க.வுக்கும் தெரியாமலில்லை. அவர்களே இது போன்ற சித்து வேலைகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலேயே டெலிபோனில் ஒட்டுக் கேட்பது எப்படி என்பதை செய்து காட்டியவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்களுக்கே ஆப்பு வைப்பது போல ஒரு பக்கம் டேப்புகள் லீக். இன்னொரு பக்கம் கூட்டணி உறுதி.. பதவி விலக நிர்ப்பநதம்.. கோர்ட்டில் மனு தாக்கல்.. ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சரவையின் சார்பில் மனு தாக்கல். ஆனால் அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஊழல் நடந்திருக்கிறது என்று மனு தாக்கல் என்று நாடே கலவர பூமியாக இருக்கிறது..

ம்.. ஒண்ணும் புரியலை.. இதுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் மன்மோகன்சிங் என்னும் பிரதமர் இருக்கிறார்.. இவர் எதுக்காக இந்தப் பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்குக் கீழுள்ள ஒரு துறை ஊழல் நடக்கவில்லை என்கிறது. இன்னொரு துறையோ நடந்துள்ளது என்கிறது.. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நிச்சயம் தப்ப முடியாது என்று வீர ஆவேசம் காட்டுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நாள் தி.மு.க.வுடனான தங்களது கூட்டணி பலமானதாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்கிறார்..!

ஆக மொத்தம்.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுவு என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது காங்கிரஸ்.. தி.மு.க.வும் வேறு வழியில்லாமல் இதனை அப்படியே பாலோ செய்து கிளிசரின் போடாமலேயே பூணூல், பார்ப்பு, பார்ப்பான், தலித், சூத்திரன், மனு தர்மம் என்று புளுத்துப் போன புழுக்கைகளை கை நிறைய அள்ளி தன் மேலேயே வாரி இறைத்துக் கொள்கிறது..!

இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!


------------------------------------------


இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர்களில் ஒருவராகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரத்தன் டாட்டா, தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்று நீரா ராடியா மூலமாக லாபி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தேன்.

நீரா ராடியாவுடனான, ரத்தன் டாட்டாவின் பேச்சு அடங்கிய விவரங்கள் இன்றுதான் கிடைக்கப் பெற்றன. அதனைப் படித்தால் இன்னுமொரு பூதமும் இதில் அடங்கியிருப்பது தெரிய வந்தது.

கனிமொழிக்கும், அ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் கடந்த இரண்டாண்டுகளாகவே மீடியாவில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அத்தனை மீடியாக்களும் சொல்லி வைத்தாற்போல் தலை, கை, கால் அமைத்து தினமும் ஒரு புது செய்தியைச் சொல்லி வந்தார்கள்.

இவர்கள் இருவருக்குமான இந்த நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபரான ரத்தன் டாட்டாவிடம், இந்தியாவின் மிகச் சிறந்த புரோக்கரான நீரா ராடியா உரையாடியிருப்பதைப் பார்க்கின்றபோது கலைஞரும், கனிமொழியும், அவர்தம் குடும்பத்தினரும் ஏன் இன்னமும் மெளனமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஜெயலலிதா திருச்சிக் கூட்டத்தில் பேசும்போது, "மகளின் மனம் கவர்ந்தவர்" என்று ஒரு வார்த்தை போட்டதற்காக ஜெயலலிதாவின் ஜாதகத்தையே பிட்டு பிட்டு வைத்த பாசத்தந்தையான கலைஞர், இந்த சி.டி. பேச்சைக் கேட்டுவிட்டும், படித்துவிட்டும் எப்படி அமைதியாக இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

ஒருவேளை ரத்தன் டாட்டாவும், நீரா ராடியாவும் பூணூல் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை என்பது தாத்தாவுக்குத் தெரிந்துவிட்டதா.?

அல்லது இந்த வதந்தியைத் திட்டமிட்டு கிளப்பிவிட்டதே தயாநிதி மாறன்தான் என்று ராடியா சொல்லியிருப்பதால் இதற்காக தயாநிதி மாறனின் குடும்பப் பின்னணியைத் கவிதை எழுதித் தாக்க முடியாது. அது தன் குடும்பத்தையே தாக்கியது போலாகி, குடும்பச் சண்டை பகிரங்கமாகிவிடும் என்று நினைத்து தாத்தா அமைதியாகிவிட்டாரோ..?

இந்த டேப்புகள் வெளியானதில் கனிமொழிக்கும், ராசாவுக்கும் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல் இதுதான்.. அவர்கள் இருவருக்கும் இடையில் எதுவுமே இல்லை என்று நீரா ராடியாவே கனிமொழியிடம் கேட்டு சொல்லிவிட்டதால் மீடியாக்காரர்களே தயவு செய்து உங்களது தவறான அந்த எண்ணத்தை இனிமேலாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி:உண்மைத்தமிழன்

Sunday, October 31, 2010

சுரணை என்ன விலை

சன் டிவியின் தில்லாலங்கடி, அழகிரி மகனின் "வ" குவாட்டர் கட்டிங் போன்ற மானங்கெட்ட படங்களுக்கு எல்லாம் வரிவிலக்கு அளித்து விட்டு "ஒச்சாயி" தமிழ் பெயர் இல்லை என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்து இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளையும், சுரணை என்ன விலை என்று கேட்கும் கருணாநிதியையும் எதைக் கொண்டு அடிக்கலாம்?

Thursday, October 7, 2010

சபாஷ்! சரியான போட்டி

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது சன்டிவியின் நிலைமை!

மூன்று நாட்களுக்கு முன்பு தினமணியில் "எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்" என்ற தலைப்பில் எந்திரன் படத்துக்காக சன்டிவி செய்யும் அராஜகங்களை அப்பட்டமாக எடுத்து உரைத்தது ஒரு கட்டுரை.



இந்த செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த நாளிதழுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.

இதையடுத்து நேற்று அதே தினமணியில் "இணையதளத்தில் எந்திரன் - அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியது. அதில் எந்திரன் படம் இணையத்தில் கிடைக்கும் இணைய முகவரியை முற்று முழுவதும் தெளிவாக வெளியிட்டு 100 பேருக்கு தெரிந்ததை 1000 பேருக்கு தெரியும் மாதிரி செய்துவிட்டது. இந்த ஒரு இணையத்தில் மட்டுமல்ல மேலும் சில இணையதளங்களிலும் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது "எந்திரன்" என்பது கூடுதல் தகவல்.



இந்த பதிவு எழுதும் போதே தினமணி குறிப்பிடும் இணையத்தின் வருகையாளர் எண்ணிக்கை 76,000-த்தை தொட்டிருந்தது.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா!"

-----------------------

சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி,

"ரஜினிகாந்த் தனது மகளின் திருமணத்திற்கு தனது ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கூறியதற்காக அவரால் கூறப்பட்ட காரணம் - கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் துன்புற வேண்டாம் என்று தான் வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுக்கும் இவரது ரசிகன் கூட்ட நெரிசலில் சிக்கியும் காவல் துறையினரிடம் தடியடி வாங்கியும் படம் பார்க்க வரும் போது இவருக்கு இதெல்லாம் தெரியவில்லையா .....???"

Tuesday, September 14, 2010

எங்கெங்கும் மலையாள வாசம்!

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசியலில் வந்த கட்டுரை. சில தகவல்கள் "அப்டேட்" செய்யப்படாமல் இருக்கலாம்.

இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட நாடு. மத்தியில் அமையும் எந்தவொரு அரசாயினும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாகவும் அதிகாரங்-களையும் சலுகைகளையும் பிரதிநிதித்து-வத்தையும் எந்தவொரு ஏற்ற இறக்கமோ பாகுபாடோ காட்டாமல் நியாயமான வகையில் பகிர்ந்து அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுவே முறை. ஆனால் அவ்-வாறு நடக்கிறதா என்றால் இல்லை.

நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாநிலங்களுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை. மத்தியில்தான் அத்தனை அதிகாரங்களும் கொட்டிக் குவிந்துக் கிடக்-கின்றன. அதனால்தான் மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களது தயவு மாநில அரசுகளுக்குத் தேவைப்-படுகிறது. அத்தனை சர்வ வல்லமை வாய்ந்தது மத்திய அரசு. அதனால்தான் அந்தக் காலம் தொட்டே மாநில சுயாட்சிக்கு குரலெழுப்பப்பட்டு வருகின்றன. தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா எழுப்பிய மாநில சுயாட்சி என்ற உரிமைக் குரலை, தி.மு.க. தலைவர் கலைஞர் அண்மையில்கூட எழுப்பியது இதனடிப் படையில்தான்.

ஆக, மத்தியில் குவிந்துக் கிடக்கும் அதிகாரங்கள் யார் வசம் உள்ளன என்ற ஆராய்ச்சி அவசியம். அதிலென்ன சந்தேகம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. பிரதமர் மன்மோகன்சிங். தவிர, சர்வ வல்லமை பொருந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா. இவர்கள்-தானே என்று கூட தோணலாம். அதுவல்ல விஷயம்.

ஒரு சினிமா பார்க்கிறோம். அதில் கதாநாயகன் கதாநாயகி உள்ளிட்ட நடிக நடிகையர்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறார்கள். உண்மையில் இவர்கள் மட்டும்தானா சினிமா? திரையில் காட்டப்படும் பிம்பங்கள் மட்டுமே இவர்கள்.

இவர்களை இயக்குவதும் திரைக்குப் பின்னே மூளையாக இருக்கும் இயக்குனரும் பிற தொழில்-நுட்பக் கலைஞர்களும்தான்.இவர்கள் எல்லாம் சட்டென்று நினைவுக்கு வந்துவிட மாட்டார்கள். ஆனால் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான்.

ஆளும் வர்க்கம் ஒன்று. அதிகார வர்க்கம் மற்றொன்று. ஆளும் வர்க்கம் என்பது ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள். அதிகார வர்க்கம் என்பது ஓய்வு பெறும் வயது வரை எப்போதும் நிலையாக பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணியில் உள்ள அதிகாரிகள். ஆளும் வர்க்கத்தைக் கூட ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் மாற்றிவிடலாம். ஆனால் அதிகார வர்க்கத்தை நெருங்கக் கூட முடியாது. ஆளும் வர்க்கத்தை அறிந்த அளவுக்கு, அதிகார வர்க்கத்தைப்-பற்றி மக்கள் தெரிந்து வைத்துள்ளனரா என்றால் சந்தேகமே. உண்மையில் ஆளும் வர்க்கத்தைவிட அதிகார வர்க்கம்தான் மிகவும் பலம் வாய்ந்தது என்பதை விஷயமறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா என்று யாராவது சொன்னால் அது தவறு என்று தாராளமாகச் சத்தியம் செய்யலாம். ஆளும் மற்றும் அதிகார வர்க்கம் என இரு மையங்களிலும் இன்று நாட்டிலேயே சர்வ வல்லமையுடன் கோலாச்சும் பவர்புல் லாபி பெற்ற ஒரே மாநிலம் கேரளாதான்.

மத்தியாரசு, மன்மோகன்சிங், சோனியா… இவையெல்லாம் அதிகார மையங்கள்தான். இந்த அதிகார மையங்களுக்குள் அமர்ந்து கொண்டிருப்பது அதிகார வர்க்கம் என்றழைக்கப்படும் அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இவர்கள் எல்லாம் தத்தமது பாணியில் செயலாற்றுகிறார்கள். இந்த அதிகார மையங்களில் இடம்பிடிப்பது என்பது, அத்தனை சாதாரண விஷயமாகி விடாது. சர்வ வல்லமை வாய்ந்த அதிகார மையங்கள் அனைத்துமே மலையாள அதிகாரிகளின் பிடியில்தான் உள்ளன.

பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகம் கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டது. அதில் மத்திய அரசின் கேபினட் செயலாளராக இருக்கும் சந்திரசேகரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது. மலையாளியான இந்த சந்திரசேகர், ஒருவேளை பதவி நீட்டிப்புப் பெறமுடியாமல் போய் இருந்தாலும்கூட அந்த இடத்துக்கு மற்றொருவர் வந்திருப்பார். அவர் சுதாபிள்ளை. தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர். இவரும் மலையாளி. இவரது கணவர் வர்த்தக அமைச்சக செயலாளராக இருக்கிறார். பெயர் கோபால் கிருஷ்ண பிள்ளை. இவரும் மலையாளி.

நாட்டில் நடக்கும் தீவிரவாத, குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் நேஷனல் இன்வெஸ்டிகேட்டிவ் ஏஜென்சி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக ராதாவினோத் ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநில கேடரைச் சேர்ந்தவர் என்றாலும் இவரும் ஒரு மலையாளி.

விவசாய அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் டி. நந்தகுமார் என்பவர். இவரும் மலையாளி. சட்ட அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் டி.கே.விஸ்வநாதன். இவரும் மலையாளி. சிவில் ஏவியேஷன் எனப்படும் விமான அமைச்சகத்தின் செயலாளராக இருப்பவர் மாதவன் நம்பியார். இவரும் மலையாளி.

ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை பதவியில் இருப்பவர் மாதவன் நாயரும் ஒரு மலையாளி.(இதன் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணனும் மலையாளி தான்).

பிரதமர் அலுவலகத்திலும் மலையாள அதிகாரிகள்தான் அதிகம். கேபினட் செயலாளராக சந்திரசேகரின் பதவி நீட்டிப்போடு சேர்ந்து இன்னொருவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்-பட்டது. அவர் பெயர் டி.கே.ஏ.நாயர். இவரது பதவி என்ன தெரியுமா? பிரதமரின் முதன்மைச் செயலாளர். இவரைத் தாண்டித்தான் எதுவும் பிரதமருக்குப் போகும். அத்தகைய சக்திவாய்ந்த பதவியில் உள்ள நாயர், கேரளாக்காரர் என்பதை பெயரே சொல்லிவிடும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முதன்மை பதவி ஜனாதிபதி பதவி. ஜனாதிபதி மாளிகையிலும் கணிசமான மலையாள அதிகாரிகள். அவ்வளவு ஏன் ஜனாதிபதியின் செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்ணான்டஸ். இவரும் ஒரு மலையாளி.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது எத்தனை முக்கியமானது. அதில் உள்ள எம்.கே.நாராயணனைப் பற்றி அதிகம் கூற வேண்டாம். டெல்லியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து உடல்கள் சிதறின. மும்பையில் அத்தனை பெரிய தீவிரவாத சம்பவம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் பந்தாடப்பட்டார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பலரும் பலிகடா ஆக்கப்பட்டனர். ஆனால் உண்மையில் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய எம்.கே.நாராயணனை மட்டும் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

எத்தனையோ தலைவர்கள் நாராயணனை நீக்க வேண்டுமென்று குரல் எழுப்பினர். ஆனால் இவர் மட்டும் பதவியில் நீடித்தார். காரணம், அவரது செல்வாக்கு அப்படி. இலங்கைப் பிரச்னையில் இவரது கருத்தின்படி மட்டுமே அனைத்தும் நடந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன். இவரும் மலையாளி. மிகவும் சக்திவாய்ந்த பதவிகளில் எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் இருப்பதால், இலங்கைப் பிரச்னையில் என்ன சாதிக்க வேண்டுமோ அதை இவர்கள் சாதித்து முடிக்க முடிந்தது. (தற்போது வெளியுறவு செயலராக இருக்கும் நிருபமாவும், தேசிய பாதுகாப்பு ஆலோகசராக இருக்கும் சிவசங்கர் மேனனும் மலையாளிகளே). பார்லிமென்ட்டின் சக்தி வாய்ந்த சபை லோக்சபா. இந்தச் சபையின் செக்ரட்ரி ஜெனரலாக இருப்பவர் பி.டி.டி. ஆச்சாரி. இவரும் மலையாளி.

காங்கிரஸின் தலைமைப் பீடம் டெல்லியில் உள்ள 10, ஜன்பத் இல்லம். இங்குள்ள மூலவரான சோனியாவை அத்தனை சுலபமாகச் சந்தித்துவிட முடியாது. இவரைச் சந்திப்பதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமென்றால் மூன்று பேர்தான் மனம் வைக்க வேண்டும். இவர்கள்தான் சோனியாவின் அந்தரங்கச் செயலாளர்கள். அந்த மும்மூர்த்திகள் பெயர் ஜார்ஜ், மாதவன் மற்றும் பிள்ளை. இந்த மூன்று பேருமே மலையாளிகள். சென்னையிலிருந்து கிளம்பி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முதலில் தமிழ்நாடு இல்லத்தில் ரூம் போட்டுவிட்டு, அடுத்து செய்யும் வேலை , இவர்கள் மூன்று பேருக்கும் போன் போடுவதுதான். இவர்கள் மனம் வைத்தால்தான் அப்பாயின்ட்மென்ட் அளிக்க முடியும். அதந்பின்னர் சோனியாவை சந்திக்க முடியும்.

அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் பணி-யாற்றும் பெரும்பாலானோரும், மீடியா அலுவலகத்தில் பணியாற்றும் முக்கால்வாசிப் பேரும் மலையாளிகள்தான். எந்தச் செய்தியாயினும் இவர்கள் தயவு வைத்தால்தான் முடியும். இவ்வாறு டெல்லியில் உள்ள அதிகார மையங்களில் எங்கும் மலையாளி, எதிலும் மலையாளி என்பதுதுதான் தற்போதைய நிலவரம்.

இப்போது பதவியேற்ற அமைச்சரவையில்கூட தமிழகத்துக்கு சமூகநீதி,செய்தி ஒலிபரப்பு உள்ளிட்ட உப்புசப்பு இல்லாத இலாகாக்கள்தான் கிடைத்தன. ஆனால் கேரளாவுக்கு ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி போன்றவர்கள் சக்திவாய்ந்த கேபினட் பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டனர். இணையமைச்சர் பதவிகளாக இ.அகமது, கே.வி.தாமஸ், முல்லப்பள்ளி ராமச்ஸந்திரன் மற்றும் சசிதரூர் ஆகியோர் பதவியேற்றனர். தமிழகத்துக்குக் கிடைத்ததுபோல அல்லாமல் ரயில்வே, உள்துறை, வெளி-யுறவு போன்ற முக்கிய இலாகாக்கள் இவர்களுக்குக் கிடைத்தன. ஆக மலையாள ஆதிக்கம் தற்போது கொடிக் கட்டிப்பறக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். கடந்த வாரம் நாடாளு-மன்றத்தில் பி.சி.தாமஸ் என்பவர் எழுந்து முல்லைப்பெரியாறு அணைக்-குப் பதிலாகப் புதிய அணை கட்ட-வேண்டுமென பேசிக்கொண்டே போனார். பொதுவாக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் அவையில் விவாதிக்க மாட்டார்கள். ஆனாலும் முல்லைப்-பெரியாறு விவகாரத்தை இந்த கேரள எம்.பி.,பேசிக் கொண்டே போனார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமே எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். தி.மு.க. எம்.பி.க்கள் ஏதோ ஒப்புக்காக எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களோ தேமே என்று உட்கார்ந்திருந்தனர். தற்போதுகூட ஒரு செய்தி வந்துள்ளது. கேரளாவின் மூத்த தலைவர் கருணாகரனுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்க சோனியா பரிசீலித்து வருகிறாராம். அதிலும் கர்நாடகத்திலோ அல்லது தமிழகத்திலோ காலியாகும் கவர்னர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பாம். காரணம், என்ன தெரியுமா? அவர் அடிக்கடி கேரளா சென்று ஆயுர்வேத சிசிச்சை எடுப்பதற்கும், அவ்வப்போது குருவாயூர் கோயிலுக்குச் சென்று வருவதற்கும் ஏதுவாக இந்த ஏற்பாடாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட டெல்லியில் வசிக்கும் கேரள மக்கள், ‘தலஸ்தானத்து எல்லாம் ஞங்கள்தன்னே’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். அதாவது
டெல்லியில் எங்கள் ஊர் அதிகாரிகளின் கொடி பறக்கிறது என்று அர்த்தமாம்.

பி.கு: தற்போது தமிழக காவல்துறையின் தலைவராக (டிஜிபி) இருக்கும் லத்திகா சரணும், அடுத்து அந்த பதவிக்காக காத்திருக்கும் விஜயகுமார் (வீரப்பன் வேட்டை புகழ்) இருவரும் மலையாளிகளே.

Monday, August 30, 2010

ஜெயலலிதாவை தூக்கில் போடு!


தர்மபுரியில் 10 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரின் ஆத்மா இன்று சாந்தி அடைந்திருக்கும்.

நாம் இருபதாம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா? என்று சந்தேகப்பட வைத்து, இந்த தமிழ்ச் சமூகம் எந்தளவுக்கு கேடு கெட்டு போய் விட்டது என்பதை உணர்த்திய அந்த சம்பவத்தை யாராலும் மறந்துவிட முடியாது.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்தளவுக்கு வழக்கு சாதகமாக கொண்டு செல்லப்பட்டது, குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அதிமுக தரப்பில் எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன, அதற்கெல்லாம் மேல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னனி வக்கீல்கள் நேரில் ஆஜராகி வாதாடியிருப்பது எந்தளவுக்கு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்?

குற்றவாளிகள் தரப்பும் "அம்மா" எப்படியாவது கப்பாற்றி விடுவார் என்று நம்பி இருந்தார்களாம். என்ன ஒரு திமிர்?

ஒருவேளை, இந்த பாவத்தை கழுவத்தான் போன வாரம் ஸ்ரீரங்கம் போய் வந்தாரோ? அரங்கநாதன் மன்னித்தாலும் மூன்று மாணவிகளின் ஆத்மா மன்னிக்காது ஜெயலலிதாவை..!

Tuesday, August 24, 2010

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்.!


ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது "புதிய கலாசாரம்" இதழில் வெளிவந்த கட்டுரை.

பரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
‘அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் -
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

அழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.


நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகந்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

கவச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

- புதிய கலாச்சாரம் (ஜூன் 1991)

Saturday, August 14, 2010

இந்த நாட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா?

63ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

Friday, August 6, 2010

ஒரு காவல் கதை - என்கவுன்டர்


கசங்கிய அழுக்கேறிய சட்டை. பரிதாபமான தோற்றத்தோடு ஆட்டுக்கால் சூப் விற்றுக் கொண்டிருந்தவரின் அருகே சூப் குடித்துக் கொண்டு கூட்டம் நிற்கத்தான் செய்தது. அவரின் தோற்றம் அழுக்காய் இருந்தாலும், அவர் விற்கும் சூப் சுவை குறைந்து விடுமா என்ன ?

நான்கு சக்கரங்கள் பொருத்திய வண்டிக் கடையில் சூப் வியாபாரம் செய்து கொண்டிருந்த முனியாண்டிக்கு வயது அறுபது இருக்கும். முகத்தில் முதுமையின் சாயல்கள் நன்றாகவே தெரிந்தன. இருபது வருடங்களாக அன்றாட உணவுக்காகவே போராட்டம் நடத்திய களைப்பு அவரின் தோற்றத்தில் தெரிந்தது.

‘என்ன பெரிதாக வந்து விடப்போகிறது சூப் விற்பதில் லாபம் ?’ ஆனால் முனியாண்டிக்கு வேறு தொழில்கள் செய்து பழக்கமில்லை. சுவையான சூப் கிடைக்கும் என்ற பெயர் பரவி விட்டதால் இவர் கடையை தேடி வந்து சூப் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனாலும் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்க பெரிதாக வருமானமில்லை.

சூப் குடிக்க வருபவர்களின் உறவு, முனியாண்டியிடம் சூப்புக்கு காசு கொடுப்பதோடு முடிந்து விடும் அல்லவா ? வேறு என்ன உறவு இருக்க முடியும் ? அவருக்கு பொருளாதார உதவி செய்து அவரது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையை போராட்டமாக இருக்கும் போது, சூப் விற்பவனின் வாழ்க்கையை பற்றி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கிறது.


“அய்யா நம்ம பாண்டிய போலீஸ் சுட்டுக் கொன்னுடுச்சுய்யா“ என்று அலறியபடி வெங்கடேசன் ஓடி வந்ததைப் பார்த்து முனியண்டிக்கு நெஞ்சில் கடப்பாறையை இறக்கியது போல இருந்தது. தடுமாறி விழப் போனவரை அருகே சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர்.


“ அய்யா வேணான்டா. சொல்றதக் கேளுடா. ஒன் வாழ்க்கையே தெச மாறிப் போயிடுண்டா“ என்று பாண்டியிடம் முனியாண்டி மன்றாடியபோது, 25 வயதுப் பாண்டி “வாய மூடுப்பா. போலீஸ் என்னவோ கண்டுபிடிச்சு மயிறப் புடுங்கிடுவாங்கன்ன…“ “இப்ப பாத்தியா ? இன்னையோட இருபது நாளாகுது. தெனாவட்டா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுங்க. என்னப் பாத்து பொட்டப் பயன்னு நெனைக்க மாட்டான் ? “

இந்த காரசார விவாதத்தின் பின்னணி, பாண்டியின் தம்பி, முனியாண்டியின் இளைய மகனின் மரணம். பாண்டியின் தம்பி முருகன், ஒரு சில்லரைத் தகராறில் 35 இடங்களில் வெட்டுப் பட்டு சாலை முழுக்க தன் ரத்தத்தை சிதற விட்டுப் பிணமானான்.

கொலைகாரர்களை போலீஸ் கைது செய்யாமல் உலவ விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரத்தில்தான் முனியாண்டியிடம் வாதம் செய்து கொண்டிருந்தான் பாண்டி.


“அவனுங்கள பழிக்குப் பழி வாங்குனாத்தான் என் மனசு ஆறும்ப்பா. நான் சும்மா விடமாட்டேன். “ என்று கறுவியபடி வெளியே சென்றான் பாண்டி. ஓரு பத்து நாள் போனா சரியாயிடும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டே, மாலை சூப் கடை வைப்பதற்கான ஆயத்தங்களில் இறங்கினார் முனியாண்டி.


இரண்டு நாட்களில் தன் மகன் பாண்டி, இளைய மகனின் கொலைக்கு காரணமான இரண்டு பேரை சந்தையில் வைத்து கொலை செய்தான் என்ற செய்தி முனியாண்டியை மனம் உடைந்து போகச் செய்தது. அத்தோடு, பாண்டியின் உறவை முறித்துக் கொண்டு, அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டார் முனியாண்டி.


குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு, சேலம் சிறையில் இருந்த பாண்டிக்கு சிறைக்குள் நட்பு வட்டாரம் பெருகியது. “அண்ணே, வெளியப் போனதும், இந்த சம்பவத்த செஞ்சு குடுங்கன்னே. தலைவரு நல்லா கவனிச்சுக்கிடுவாரு. “ என்று அடுத்த கொலைக்கான அச்சாரம் கிடைத்த போது, இயல்பாக ஏற்றுக் கொண்டான் பாண்டி.


பணம் கொட்டியது. பெரிய மனிதர்களின் சகவாசம் கிடைத்தது. புதிதாக சுமோ ஒன்று வாங்கினான். வெளியே எங்கு சென்றாலும் பத்து பேர் இல்லாமல் செல்வதில்லை. சுமோ சீட்டுக்கு கீழே பத்து இருபது வீச்சரிவாள்கள் இருக்கும். சிறையில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, புதிதாக கைத்துப்பாக்கி ஒன்று வாங்கினான். போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக பேசத் தொடங்கினர்.

“பாண்டி. அய்யா வீட்டுல பங்ஷன் வச்சுருக்காரு. பாத்து கவனிச்சுக்கிட்டன்னா, பின்னாடி யூஸ் ஆகும்“ என்று தல்லாக்குளம் ரைட்டர் வந்து சொன்னபோது, அருகில் இருந்த எடுபிடியை அழைத்து, ரெண்டு லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
பாண்டி வற்றாத அமுத சுரபியானான்.

கழுத்தில் 8 பவுனக்கு தங்கச் சங்கிலி. பாண்டியின் சுமோ வந்தால் என்னமோ ஏதோ என்று மதுரை மக்கள் அலறுகிற அளவுக்கு பிரபலமானான். மதுரை தாண்டி, தமிழகம் முழுவதும் பாண்டியின் புகழ் பரவியது. இரண்டு ஸ்கார்ப்பியோக்கள், நான்கு சுமோக்கள் என்று பெரிய பணக்காரனைப் போல பாண்டி வலம் வந்தாலும், முனியாண்டி தள்ளு வண்டியில் சூப்தான் விற்றுக் கொண்டிருந்தார். தன் பேச்சைக் கேட்காக மகனிடம் பேச மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம்.


“அண்ணே வக்கீல் லயன்ல இருக்காருன்னே. “


“எந்த வக்கீல்டா“

“நம்ம சேகர் சாருன்னே“

“குடு“

“என்ன பாண்டி நல்லா இருக்கியா ? “ என்று நலம் விசாரித்த சேகர், பிரபலமான வக்கீல். பெரிய தலைவர்களுக் கெல்லாம் வக்கீலாக இருப்பவர்.

“நல்லா இருக்கேன்னே. நீங்க நல்லா இருக்கீங்களா ? “

“இருக்கேன். இருக்கேன். ஒரு சம்பவம் செய்யணுமே ! “

“சின்னதா பெரிசாண்ணே ? “

“ஒனக்கு எது பெருசு ? நீ நெனச்சா எல்லாம் சின்னதுதான். “

“சொல்லுங்கண்ணே. “

“ கே.கே.நகர்ல ஒருத்தன் இருக்கான். குமார்னு பேரு. எதுக்கும் மசிஞ்சு வர மாட்டேங்குறான். தலைவரையே எதுத்துப் பேசிட்டான்னா பாரேன்.“

“மெறட்டிப் பாக்கட்டான்னே ? “

“அதெல்லாம் ஒத்து வர மாட்டான் பாண்டி. சம்பவம் செஞ்சடுன்னு நான் சொல்றேன்னா, காரணம் இல்லாமயா இருக்கும் ? ஐஞ்சு ரூபா கொடுத்துடுறேன். யாராவது பசங்கள அனுப்பு. இன்னைக்கே அனுப்பு“


“சரிண்ணே“


கே.கே.நகரில் பட்டப் பகலில், அந்தப் படுகொலை நடந்த போது, நகரமே ஆடித்தான் போனது. அந்தக் குமார் நடு வீதியில் இறந்து கிடந்ததைப் பார்ப்பது யாராக இருந்தாலும் பயத்தை கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கொலை நடந்தது.


காலப் போக்கில் வக்கீல் சேகருக்காக மட்டும் ஐந்து கொலைகள் செய்தான் பாண்டி. போலீசின் தேடுதல் வேட்டை தீவிரமாகவும், சிறிது நாட்கள் ஆந்திராவுக்குச் சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, சேகரிடமிருந்து அழைப்பு.


“பாண்டி… என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்“


“இல்லண்ணே. போலீஸ் டார்ச்சர் தாங்க முடியலே. அதான் ஆந்திராவுக்குப் போய் ரெண்டு மாசம் இருந்தேன். “

“பாண்டி, அயனாவரத்துல ஒரு சம்பவம் செய்யணும். “

“அண்ணே. போலீஸ் டார்ச்சர் ரொம்ப அதிகமாயி டுச்சுண்ணே. கொஞ்ச நாள் அப்ஸ்காண்டிங்ல இருக்கலாம்ணு பாக்கறேன். ஒரு ஆறு மாசம் போகட்டும்ணே. “ என்றதை சேகர் ஏற்கவில்லை.

“என்னா பாண்டி. இருவது வருஷமா ஃபீல்டுல இருக்க. நீயே இப்படி சொன்னா எப்படி ? அவசரம்னு தானே ஒங்கிட்டே வர்றேன்“

“இல்லண்ணே. சூடு கொஞ்சம் தணியட்டும். யாரோ புது டிஜிபி போட்ருக்காங்கள்லாம். ரொம்ப ஸ்டிட்டாமே ? “


“பாண்டி. நாந்தான் பாத்துக்கறேன்றேன்ல. எதுக்கு கவலப் பட்ற ? “

“இல்லண்ணே. கொஞ்ச நாள் போகட்டுண்ணே. அப்பொறம் நானே சம்பவம் செஞ்ச குடுக்கறேன். “ என்று சொல்லி விட்டு, லைனில் காத்திருக்காமல் பாண்டி போனை கட் பண்ணியது சேகரை ரொம்பவே ஆத்திரப் படுத்தியது.


ரவுடிப்பய… …. என்ன திமிரு இவனுக்கு என்று மனதிற்குள் கறுவினார் சேகர்.


பாண்டியின் இருப்பிடம் பற்றி கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அநாமதேய அழைப்பை


அடுத்து, பாண்டி தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தது போலீஸ்.
மதுரையில் பிடிக்கப் பட்ட பாண்டியும், அவன் கூட்டாளியும் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

“ யோவ் நந்தகோபால். எங்கய்யா இருக்க ? “ என்ற உயர் அதிகாரியின் குரலைக் கேட்டதும் விறைப்படைந்தார் இன்ஸ்பெக்டர் நந்தகோபால்.

“சார். ரவுண்ட்ஸ்ல இருக்கேன் சார். “

“சரி. பாண்டிய செக்யூர் பண்ணி க்யூ ப்ரான்ச் சேப் ஹவுஸ்ல வச்சிருக்காங்க. யூ டேக் ய டீம் வித் யூ. டேக் கஸ்டடி ஆப் ஹிம் அன்ட் பினிஷ் ஹிம். டோன்ட் லீவ் எனி ட்ரேசஸ் அன்ட் தேர் ஷுட் நாட் பி எனி மிஸ்டேக்ஸ். யூ அண்டர்ஸ்டேன்ட் ? “ என்றதற்கு “எஸ் சார். வெரி வெல் சார்“ என்ற பதிலளித்து விட்டு, உயர் அதிகாரி இணைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்தார் நந்தகோபால்.

பழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆளரவமற்ற தனிமையான பங்களாவுக்கு, தன்னுடன் ஒரு எஸ் ஐயும், இரண்டு ஏட்டுக்களையும் அழைத்துக் கொண்டு எங்கே என்று சொல்லாமல் புத்தம் புதிய பொலீரோ ஜீப்பில் கிளம்பினார் நந்தகோபால். மறக்காமல் பிஸ்டலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார்.

இரவு 12 மணியைத் தாண்டியிருந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஏற்கனவே அந்த பங்களா வாசலில் வேறோரு ஜீப் நின்று கொண்டிருந்தது.


பங்களா வாசலில், இடுப்பில் பிஸ்டலை மறைத்து வைத்திருந்த சபாரி அணிந்த ஒருவர், நந்தகோபாலைப் பார்த்ததும் விறைப்பாக சல்யூட் அடித்தார்.


“சார். சிசிபிலேர்ந்து இன்ஸ்பெக்டர் அஷோக்கும், அவரோட டீமும் வந்துருக்காங்க சார். அக்யூஸ்ட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கான் சார் என்ற அந்தக் காவலரின் பேச்சுக்கு தலையசைத்தபடி முதல் மாடி ஏறினார் நந்தகோபால்.

கால்களில் சங்கிலி போட்டு ஜன்னல் கம்பியோடு இணைக்கப் பட்டு தரையில் உட்கார்ந்திருந்தான் பாண்டி. இவனா இவ்ளோ பெரிய ரவுடி என்று மனதிற்குள் ஏற்பட்ட எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அவன் செயின ரிலீஸ் பண்ணுங்கைய்யா“ என்று யார் என்று குறிப்பிடாமல் பொதுவாகச் சொன்னதை தங்களிடமே சொன்னது போல பாவித்து, மூன்று கான்ஸ்டபிள்கள் வேகமாக ஓடி, பாண்டியை ஜன்னலோடு பிணைத்திருந்த சங்கிலியை மட்டும் அவிழ்த்து, அந்தச் சங்கிலியின் இன்னொரு முனையை கையில் பிடித்துக் கொண்டார்கள். பாண்டியின் கைகள் பின்னால் கைவிலங்கிடப் பட்டன. பாண்டியோடு கூட இருந்தவனும், அதே போல கட்டப் பட்டான். பாண்டியும் அவன் கூட்டாளியும் பொலீரோ ஜீப்பின் பின்புறம் தரையில் உட்காரவைக்கப் பட்டனர்.


“சார் ரிமாண்டா சார்“ என்று பாண்டி கேட்டதை நந்தகோபால் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. நள்ளிரவில் ஜீப்பில் அழைத்து செல்வதைக் கண்டதும் பாண்டிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.


“சார். என்கவுன்டரா சார். ரிமாண்ட் பண்ணிடுங்க சார். குண்டாஸ் கூட போடுங்க சார். என்கவுன்டர் வேண்டாம் சார். ரெண்டு பொண்டாட்டி சார் எனக்கு. கெஞ்சிக் கேக்கிறேன் சார்.“ என்ற பாண்டியின் எந்த புலம்பல்களையும், நந்தகோபால் காதில் விழாதது போல அமைதியாக இருந்தார்.

பாண்டி கூட இருந்தவன் “அய்யோ சார் விட்டுடுங்க சார்“ என்று கத்த ஆரம்பித்தான். பிஸ்டலை எடுத்து அவன் நெற்றிப் பொட்டில் வைத்த நந்தகோபால் “சத்தம் வந்துச்சு, இங்கேயே சுட்டுடுவேன்“ என்று கூறியதற்குப் பிறகு, மூச்சு சத்தம் கூட வரவில்லை.

ஆளரவமற்ற குறுக்கு சாலையில் வண்டி நிறுத்தப் பட்டது. “எறக்குங்கய்யா அவங்க ரெண்டு பேரையும்“ என்ற உத்தரவைக் கேட்டதும், ஜீப்பின் பின் கதவு திறக்கப் பட்டு, இரண்டு பேரும் இறக்கப் பட்டனர். ஜீப் என்ஜின் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.

ஜீப்பின் லைட் வெளிச்சத்திற்கு இரண்டு பேரும் அழைத்து வரப்பட்டனர். “அய்யா. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா. அய்யா கெஞ்சிக் கேக்குறோம்யா.. விட்டுடுங்கய்யா “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிஸ்டலை எடுத்து இரண்டு பேரின் நெஞ்சிலும் சுட்டார் நந்தகோபால்.


இருவரின் உடலையும் பொலீரோ ஜீப்பில் ஏற்றி, கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நந்தகோபால் சென்ற போது, அங்கே, சிசிபி இன்ஸ்பெக்டர் ஒரு புதிய ஸ்கார்ப்பியோ ஜீப்பை, பாதி சாலை மீதும், பாதி சாலையை விட்டு இறக்கியும் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“என்ன சார் முடிஞ்சுதா ? “

“ம். ஓவர். பாடிய எந்தப் பொசிஷன்ல வைக்கலாம் ? “

“சார். ஸ்கார்ப்பியோ லேர்ந்து, ஒரு டென் ஃபீட் தள்ளி வைக்கலாம் சார். அப்போதான் அட்டாக் பண்ணிட்டு ஓடுன மாதிரி இருக்கும்“

“ஆல்ரைட். அப்படியே பண்ணிடுங்க. கமிஷனருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்“ என்று செல்போனை எடுத்தபடி ஓரமாகச் சென்றார் நந்தகோபால்.

பாண்டியின் உடலையும், அவன் கூட்டாளியின் உடலையும், ஓடிப் போய் விழுந்தது போல உத்தேசமான ஒரு வாகில் கிடத்தி விட்டு, நந்தகோபால் அருகில் சென்று “சான் எவ்ரிதிங் ஓவர் சார்“ என்று கூறினார் சிசிபி இன்ஸ்பெக்டர்.

“குட் வொர்க்“

“சார். கேலன்ட்ரி மெடல் இல்லேன்னா ஆக்சலரேட்டட் ப்ரோமோஷன் கெடைக்குமா சார்“

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேன்னா கெடைக்கும். இந்த ஹ்யூமன் ரைட்ஸ் தேவடியாப் பசங்க ஏதாவது கூப்பாடு போட்டுகிட்டு இருப்பானுங்க. அதான் பிரச்சினை. இல்லேன்னா கமிஷனரே, ஹோம் செக்ரட்ரிகிட்ட பேசி வாங்கித் தந்திடுவாரு“

“பிரபல ரவுடி சுட்டுக் கொலை. கூட்டாளியுடன் போலீசைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சிக்கையில் என்கவுன்டிரில் கொலை“ என்று தலைப்புச் செய்திகள் அலறின. சம்பவ இடத்தை பார்வையிட்ட கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போத் ஆர் நொட்டோரியஸ் ரவ்டீஸ். அவங்க ரெண்டு பேரும், வச்சிருந்து துப்பாக்கிய எடுத்து ஃபயர் பண்ண ட்ரை பண்ணாங்க. நம்ப காப்ஸ் செல்ப் டிஃபென்ஸ்ல சுட்டதுல, போத் டைட்“

ப்ரெஸ் மீட் முடிந்ததும் கிடைக்கப் போகும் கவரை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நிருபர் “சார் ரெண்டு பேர் மேலயும் எத்தனை கேஸ் இருந்துச்சு“ என்று கேட்டதற்கு, “போத் வேர் வெரி டேஞ்சரஸ். தே ஹேவ் மோர் தன் 20 கேசஸ்“ என்று கூறி விட்டு, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.


பாண்டி இறந்ததிலிருந்து ஒரு வாரம் சூப் கடை போடவில்லை முனியாண்டி. வீட்டில் சோகம் வெளியேறாமல் சுவர்களெங்கும் ஒட்டிக் கொண்டிருந்தது. உதவி கமிஷனர் முராரி அழைப்பதாக ஒரு போலீஸ்காரர் முனியாண்டியை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
முனியாண்டியை எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார் முராரி.


“இந்தா பாருங்க பெரியவரே. நாளைக்கு ஆர்டிஓ விசாரணை இருக்கு. பத்மான்னு ஒரு
ஆர்டிஓ உங்கள விசாரிப்பாங்க. அங்க போய் கண்டதையெல்லாம் பேசக் கூடாது என்ன ?. பாண்டி சாகும்போது அவன் கழுத்துல 8 பவுன் செயின் இருந்துச்சு. அத குடுத்துர்றேன். “

“அப்புறம் பாண்டி வச்சுருந்த ஒரு வீட்ட நாங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி சீஸ் பண்ணோம். அதுல இருக்க பொருள்லாம் எடுத்துக்கங்க. புரியுதா ? ஆர்டிஓ அம்மா என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கணும்“ என்று முனியாண்டியிடம் கூறியது அறிவுரையா, மிரட்டலா என்று முனியாண்டிக்குப் புரியவில்லை.


“மவனே போயிட்டான். அப்பொறம் என்னங்கய்யா ? “ என்று அவருக்கு பதிலளித்து விட்டு, முராரிக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார் முனியாண்டி.



“ காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, பாண்டியும், அவன் கூட்டாளியும் ஒரு ஸ்கார்ப்பியோ ஜீப்பில் வேகமாக வந்தனர். காவல் ஆய்வாளர் நந்தகோபாலும், காவல் ஆய்வாளர் அஷோக்கும், பாண்டியின் வாகனத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்ட போது, நிற்காமல் செல்ல பாண்டி முயற்சித்ததால், குறுக்கே புகுந்து காவல் துறை அதிகாரிகள் தடுத்த போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாண்டி சுட முயற்சிக்கையில், ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்பட்டு, தன்னுடைய கைத்துப்பாக்கியால் இருவரையும் தற்காப்புக்காக சுட்டதில், இருவரும் மரணமடைந்தனர். ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்படாவிட்டால், அங்கே இருந்த காவல் அதிகாரிகளுக்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் திறமையாக செயல்பட்டு இரண்டு பயங்கர குற்றவாளிகளை தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் ஆய்வாளர் அஷோக் மற்றும் அவர்களுடன் இருந்த அனைத்து காவல் துறையினருக்கும், குடியரசுத் தலைவரின் வீரதீரச் செயலுக்கான விருதும், ஒரு படி பதவி உயர்வும் வழங்க பரிந்துரை செய்யப் படுகிறது“ என்று தனது அறிக்கையை அரசுக்கு அளித்தார் ஆர்டிஓ பத்மா.


நன்றி: படைப்பு இணையம்

Wednesday, August 4, 2010

புதுப்பொலிவு

இனி "தீராத தாகம்" "தண்ணீர் பந்தல்" ஆக உங்கள் தாகம் தணிக்கும்

Thursday, July 22, 2010

அரசியலில் இருந்து ஓய்வு - ஸ்டாலின் திடீர் அறிவிப்பு!


தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா ? இது இப்போது நடக்கவில்லை. 2020ல் நடக்கிறது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று பிரத்யேக தகவல் வந்துள்ளது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதைப் பற்றி பார்க்கும் முன், 2020 எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.

2011 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறுகிறது. கருணாநிதி மீண்டும் முதல்வராகிறார். 2020ல் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்கப் படும் பணத்தில் நிறைய ஊழல் ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, ரேஷன் கடைகளிலேயே ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.

இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனை போல, அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை, இலவச பேண்ட் சர்ட், இலவச உள்ளாடைகள் வழங்கப் படுகின்றன.
அனைத்து காவல் நிலையங்களிலும், எஃப்ஐஆர் போட, அரெஸ்ட் பண்ண, அரெஸ்ட் பண்ணாமல் இருக்க, காணாமல் போன பொருளை கைப்பற்ற, கைப்பற்றிய பொருளை திருப்பித் தர, புகார் கொடுக்கும் போது, உட்கார வைக்க, கெட்ட வார்த்தையில் திட்டாமல் இருக்க என்று தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாருக்கு, மேற்படி வசூலாகும் தொகையிலிருந்து 10 சதவிகிதம் வெகுமதியாக கிடைக்கும் என்று அறிவிக்கப் படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைப்பதில்லை என்று வந்த புகாரையடுத்து, அனைத்து மளிகை கடைகளிலும் மதுபானங்கள் விற்கலாம் என்று உத்தரவிடப் படுகிறது.

தமிழகத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்களிலும், முதல் பக்கத்தில் கருணாநிதியின் படம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப் படுகிறது. தவறும் நாளிதழ்களுக்கு, அரசு விளம்பரம் நிறுத்தப் படுகிறது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கிடையாது என்று உத்தரவிடப்பட்டது போதாது என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கைகளை அடுத்து, ஒவ்வொரு திரைப்படம் எடுக்கும் போது ஆகும் செலவில் 50 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப் படுகிறது.

திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.

2020ல் ஏற்பட்ட ராஜ்ய சபை காலியிடத்தில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து, கருணாநிதி 2024ல் ஏற்படும் காலியிடத்தில் வழங்கப் படும் என்று உறுதி கூறுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி கலைக்கப் பட்டு திமுகவோடு இணைக்கப் பட்டு, மருத்துவர் ராமதாசுக்கு, திமுக வன்னியர் பிரிவு தலைவர் என்று பதவி வழங்கப் படுகிறது. அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலைக்கப் பட்டு, திமுகவின் தலித் பிரிவு தலைவராக திருமாவளவனுக்கு பதவி வழங்கப் படுகிறது.

கருணாநிதியின் “கவர் பாலிடிக்ஸ்“ முன் அரசியல் செய்ய முடியாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அழிந்து போகின்றன.

எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தால், இமேஜ் நன்றாக இருக்காது என்று கருணாநிதியே, “திராவிட பின்னேற்றக் கழகம்“ என்ற ஒன்றை துவக்கி, அதற்கு, அழகிரியை தலைவராக்குகிறார்.

இப்போது டிஜிபியாக உள்ள லத்திகா சரண், ஓய்வு பெற்றதும், திமுக மகளிர் அணித் தலைவியாக ஆகிறார்.

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், ஓய்வு பெற்றதும், எம்எல்ஏவாகி, மந்திரியும் ஆகி, “ஒட்டுக் கேட்புத் துறை“ மந்திரியாக்கப் படுகிறார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், நாயுடு மகாஜன சபாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

மவுரியா சிஐடி காலனி வீட்டின் “மெயின்டெனன்ஸ்“ காண்ட்ராக்டர் ஆகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மூடப்பட்டு, “லஞ்ச பராமரிப்புத் துறை“ என்ற ஒன்று ஏற்படுத்தப் பட்டு, ஆ.ராசா அதற்கு மந்திரியாகிறார்.

ஏ.கே.விஸ்வநாதன், அப்போதும் பதவியில்லாமல், அழகிரி வீட்டில் வாட்ச்மேனாக சேர்ந்து விடுகிறார்.

வழக்கறிஞர்-காவல்துறை மோதல் குறித்த தீர்ப்பு 2024ல் வழங்கப் படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.

அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு முறை அலுவலகம் சென்றால் போதும், சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது.

பழைய உள்துறை செயலாளர் மாலதி, அஞ்சுகம் அறக்கட்டளையின் கணக்காளர் ஆகிறார்.

காங்கிரஸ் கட்சி, 2028ல் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அறிவிக்கிறது.
இப்போது கருணாநிதியின் பேச்சு.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே, ஒட்டுக் கேட்புத் துறை அமைச்சர் ஜாபர் சேட் அவர்களே, நாயுடு மகாஜன சபா தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களே, மகளிர் அணித் தலைவர் லத்திக்கா சரண் அவர்களே, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, இந்த விழாவை அழகாக தொகுத்து வழங்கிய, கழக முன்னோடி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே…

எனக்கு பாராட்டு விழா என்றாலே பிடிக்காது. அந்த நேரத்திலே, எப்படி மக்கள் பணி ஆற்றலாம், என்ன எழுதலாம் என்று சிந்தித்து வேலை செய்பவன் நான்.

ஆனால் துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்கள் இது பாராட்டு விழா அல்ல, பிறந்த நாள் விழா என்று எடுத்துக் கூறி, என்னை இசைய வைத்தார்கள். கழக ஆட்சியிலே துணை முதல்வராக இருந்தாலும், அவருக்கு நன்றி பாராட்டுதல் தமிழ்ப் பண்பு என்பதால் நன்றி கூறுகிறேன்.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், என்னிடமிருந்து ஏதாவது செய்தியை எதிர்ப்பார்த்திருப்பீர்கள். எப்போது இவன் ஓய்வு பெறுவான், எப்போது இளைஞர் அணித் தலைவர் (?!) ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்று காத்திருக்கிறீர்கள்.

எனக்கு வயதாகி நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தால் தானே ஸ்டாலின் முதல்வராக முடியும். நானே ஒரு இளைஞன். இதனால்தான், நான் 2010ம் ஆண்டு, இளைஞன் என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன்.

அந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று அருமைத் தம்பி வைரமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், சில சதிகாரர்களால், ஒரு தமிழன், தமிழில் வசனம் எழுதியதற்காக ஆஸ்கர் விருது மறுக்கப் பட்டது.

இவ்வாறு ஆஸ்கர் விருது மறுக்கப் பட்ட போது, அஞ்சாநெஞ்சன் அழகிரி, உடனடியாக ஹாலிவுட் சென்று, ஒரு பத்து பேரையாவது உயிரோடு கொளுத்தலாம் என்றான். நான்தான், பெருந்தன்மையோடு வேண்டாம் என்றேன்.

இந்த வயதிலும், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து (பன்ச்) நான் வேலை பார்த்து வருகிறேன். தமிழ்நாட்டிலே ஒரு காலத்தில், ஜெயலலிதா என்ற ஒரு அம்மையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் பல கோப்புகளை கட்டி வைத்திருந்தார். நான்தான் அவர் கட்டி வைத்திருந்த கோப்புகளையெல்லாம், 2006ல் கழக ஆட்சி வந்தவுடன், அவிழ்த்து, உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.

இப்போதும் சிலர், எப்படி எனக்கு இந்த வயதிலும் இப்படி சலிக்காமல் வேலை செய்யும் தெம்ப இருக்கிறது என்று கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து “மானாட மயிலாட“ நிகழ்ச்சியைப் பார்த்துதான் எனக்கு பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும், உணர்ச்சியையும் ஊட்டிக் கொள்கிறேன்.

இது போல, நீங்களும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பீர்களேயானால், என்னைப் போலவே ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றும், தெம்பு வரும் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவி, உரிய நேரத்தில் வழங்கப் படும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் தலைமை நிலையக் குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியவை கூடி முடிவு செய்யும்.

என்று பேசினார்.

விழா முடிந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின், 1975ம் ஆண்டு முதல், தனக்கு பதவி தருகிறேன், தருகிறேன் என்று தொடர்ந் சொல்லி வந்த கருணாநிதி, இந்த பிறந்த நாளிலாவது பதவியைத் தருவார் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால், தலைவர் அவர்கள், நான் இன்னும் இளைஞன் என்று கூறி விட்டதால், எனக்கு வாய்ப்பு எப்போதுமே வராதோ என்று தோன்றுகிறது.

இதனால், நான் பொது வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

நன்றி: சவுக்கு

Friday, July 9, 2010

விஜய் ரசிகர்களுக்கு பிரியாணி

பிரியாணிக்குப் பேர் போன நடிகர் என்றால் அது விஜயாகத்தான் இருக்கும், அப்படி பட்ட ஒரு உறவு விஜய்க்கும், பிரியாணிக்கும். விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் சரி, இவரின் ரசிகர்களுக்கும் சரி பிரியாணி விருந்து படைப்பது இவருடைய வழக்கம். இந்த வழக்கத்தை பயன்படுத்தி தயாரிப்பாளர் ஒருவர் ஆதாயத்தேடப்போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
'சுறா' படத்தின் மூலம் பிரமாண்டமான தோல்வி விழாவை கண்ட விஜய், தனது 'வேலாயுதம்' படத்தின் துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார். ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். (இதுவும் ஒரு ரீமேக் படம்தானாம்)

இந்த படத்தின் துவக்க விழா ஜூலை 15ஆம் தேதியன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கவுள்ளது. இவ்விழாவில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கலந்துக்கொள்கின்றனர். ரசிகர்கள் முந்நிலையில்தான் படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால்தான் இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டாலும், படத்தில் வரும் ஒரு காட்சிக்காக துணை நடிகர்களுக்கு பதிலாக விஜயின் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்வதுதான் தயாரிப்பாளரின் திட்டம் என்று கூறப்படுகிறது.
இதற்காக விஜய் ரசிகர்களுக்கு விஜய் படம் போட்ட பனியன் ஒன்றும், பிரியாணி பொட்டலுமும் கொடுக்கப்போகிறார்களாம். ஏதாவது இதுபோன்ற விழா என்றால் கூட்டத்தை சேர்ப்பதில் விஜயும், அவருடைய தந்தையும் திறமைசாலிகள். ஆனால் அந்த கூட்டத்தை இப்படி லாபநோக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ளும் தயாரிப்பாளர் அவர்களை விட திறமைசாலி என்று நிருபித்து விட்டாரே!

Thursday, June 17, 2010

ராவணன் - சிறப்பு விமர்சனம்


ராமாயண காவியத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம். வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்... ராவணன் கொடுமைக்கார வில்லனாக இருப்பார். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி!

மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவானந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.

வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட... ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.

தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவானந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா... எஸ்.பி. தேவானந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல... அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.

ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்... 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்... என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.

ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.

சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்... அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.

வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.

எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே... என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.

அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்... பார்த்துட்டேன்... பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா...இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.

மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறைகள் அதிகம் இருக்கும்போது குறைகள் எதற்கு?

நன்றி: நக்கீரன்

Wednesday, June 9, 2010

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!


1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?

1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.

1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.
இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.

கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?

பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.

ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!

நன்றி: வினவு இணையம்

Monday, May 31, 2010

மொய் விருந்து

நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?.............. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்........ இதுதான் மொய்விருந்து!

அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.

புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?.... 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!

மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

ஒரு தாத்தாவும், பாட்டியும்..........
அவர்களுக்குப் பிள்ளையில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?...
ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்....... தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்.....பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.

திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.

மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை. அதில் காணப்படும் விவரங்கள் இப்பகுதியில் வாழும் மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைவெளிச்சம் போட்டுக்காட்டக்கூடியவை. என்னுடைய ஆசிரிய நண்பர் சித்துக்காடு திரு.அ.சண்முகம் அவர்கள் கைநிறைய அழைப்பிதழ்களை அள்ளித்தந்தார். இங்கேயிருக்கும் இரண்டு அழைப்பிதழ்களும் மொய்விருந்து பற்றிய ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை நமக்குத் தருகிறது. அவர் கூறிய விபரங்கள் மொய்விருந்து பற்றிய நீள்வெட்டுத்தோற்றத்தைத் தருகிறது.
கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.

உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்........
மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.

மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்......சினிமா கொட்டகை மாதிரி...... 'சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்' என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் 'பல ஊர்' என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.
உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?..... அதை 'தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்' என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.
மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.
பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.

உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.
வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.

ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.
காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.

மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.
அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.
மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.
புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.
விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு 'பின்வரவு' என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.
'நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா.......' என்று வரும் பணம் 'புதுநடை' என்ற தலைப்பில் எழுதப்படும்.
அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.

குடும்பத்தகராறா?........இனிமேல் உறவுவேண்டாமா?......பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.
மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?......கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?.......வழி இருக்கிறது......"இதை எழுதவேண்டாம்" என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.

பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?...........கவலைப்பட வேண்டியதில்லை.....உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் .........விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.

நன்றி: மு.குருமூர்த்தி (http://thanjavure.blogspot.com)