Sunday, February 27, 2011

ராஜீவ் படுகொலை! விடை தெரியாத கேள்விகள்?

பிரபல பத்திரிக்கையாளர் சுதாங்கன் நவம்பர் 19, 1997 தேதியிட்ட "தமிழன் எக்ஸ்பிரஸ்" இதழில் எழுதிய கட்டுரை. இன்றுவரை கூட இந்த கேள்விகளுக்கு விடை இல்லை என்பதே நிதர்சனம். எதிர்காலத்தில் ஆவது பதில் கிடைக்குமா? அல்லது வரலாற்றின் இருட்டு மூலையில் இந்த கேள்விகள் கரைந்து மறைந்து விடுமா?

ராஜீவ் காந்தி கொலை:

விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்:

நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன.

இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 - ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர் தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.

1993 - ஆம் ஆண்டு துவங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர் தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் காட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் துவக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப்பத்திரிக்கையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்த எதிர் தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதாரப்பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திர சேகர், விசேஷ புலனாய்வுத் துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத் துறை காட்டி விட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.

இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் ? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வௌ¤நாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அராபத்திற்கு இந்தப் பின்னணி தெரியவாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரம சிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' லட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ்தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்ட வில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மன்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மன் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியயக புலனாய்வுத் துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி.
அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனைப் பரிவு?

35. ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் லேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வௌ¤யேற்றப் பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திராசுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

தீர்ப்பு விரைவில் வௌ¤வரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.

கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக்குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவர்களுக்குத் தான் ஆபத்து.

'விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

- நன்றி:சுதாங்கன் & தமிழன் எக்ஸ்பிரஸ்

Sunday, February 6, 2011

ஆ.ராசா அப்பாவியும் அல்ல, நீரா ராடியா நமீதாவும் அல்ல

இப்போதும், இனி எப்போதும் ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசியல் வரலாற்றின் ஊழல் அளவுமானி. சமகாலத்தில் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு பகல்கொள்ளை முன்னெப்போதும் நடந்தது இல்லை. அலைபேசி இணைப்புகளுக்கான இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளை விற்றதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இது மிக ஆதாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஊழலை சாத்தியப்படுத்திய ஆ.ராசா, மத்திய மந்திரி பதவியில் இருந்து கட்டாயமாக பதவி விலகச் செய்யப்பட்டு, இப்போது சி.பி.ஐ யால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். ஆ.ராசாவின் பெயர் மற்றொரு சுற்று ஊடகங்களில் சூடாக அடிபட தொடங்கியிருக்கிறது. ஆனால், ராசா மட்டும்தான் குற்றவாளியா? கருணாநிதி மட்டும்தான் சூத்திரதாரியா? சொல்லப்போனால் இவர்கள் யாவரும் பலியாடுகளே! இந்த மாபெரும் சூறையாடலை நிகழ்த்திய பெரும் முதலாளிகள், சத்தமில்லாமல் அடுத்த கொள்ளைக்குத் தயாராகிவிட்டார்கள்.

நிறம் மாறும் ஊழல்

25 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் என்றால் அதன் அளவு லட்சங்களில், கோடிகளில் இருந்தது. ஆனால் அண்மைக்கால ஊழலில் தொடக்கப்புள்ளியே ‘இத்தனை ஆயிரம் கோடி’ என்பதில்தான் ஆரம்பிக்கிறது. எண்பதுகளில் இந்தியாவில் தனியார் மயம் வீச்சோடு இறக்கிவிடப்பட்ட பின்புதான் ஊழலின் பருமன் நினைக்கவியலாத் தொலைவுக்கு உயர்ந்திருக்கிறது. ஹவாலா, ஹர்சத் மேத்தா, தெல்கி, சத்யம் என பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சூறையாடப்பட்டது. 50 கோடி ஊழல், 100 கோடி ஊழல் எல்லாம் ஊடகங்களுக்கு இப்போது செய்தியே இல்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மக்களின் மனங்களுக்கே ‘இதெல்லாம் ஒரு மேட்டர்’ இல்லை.

கடந்த தேர்தலில் 1000 ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்களித்த மக்கள் இந்தத் தேர்தலில் ‘கூட கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என பேரம் பேசும் அளவுக்கு ‘வளர்ந்திருக்கிறார்கள்’! அண்ணாச்சி கடையில் ஹமாம் சோப்பு வாங்கிக்கொண்டு ‘எதுவும் ஆஃபர் இருக்கா?’ என கேட்டு வாங்குவது போல, மக்கள் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசுகின்றனர். இதன் சாராம்சமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ‘எனக்கு 1000 ரூபாய் தந்தால், நீ 1 லட்சம் கோடி கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்வேன்’ என்பதுதான். தன்னளவில் ஊழல் மயமாகியிருக்கும் மக்கள், அதிகாரத்தின் ஊழலை எதிர்க்கும் தார்மீக தகுதியை இழந்து நிற்கின்றனர். இது மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட பாத்திரம் அல்ல. இந்த சீரழிந்த அரசியல் வடிவம், திட்டமிட்டே மக்களை ஊழல்படுத்தியிருக்கிறது. அதனால்தான் எவ்வளவு பெரிய ஊழலும், அயோக்கியத்தனமும் பரபரப்பு வட்டத்தைத் தாண்டி வெளியே செல்வது இல்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமா?

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை

கடந்த காலங்களில் தொடங்கி இப்போது வரை, ஊடகங்களால் அதிகம் Corrupt செய்யப்பட்டிருக்கும் சொல், ஊழல். மாநகராட்சி அதிகாரி 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதும் ஊழல், ஆ.ராசா ஒன்றேமுக்கால் லட்சம் கோடி அடித்தாலும் ஊழல் என்றால், இதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் இல்லை. இது ஒரு பகல்கொள்ளை. கண்ணுக்கு நேராக, ஆதாரங்களுடன் நிகழ்த்தப்பட்ட பொருளாதார சூறையாடல்.

இது ஒரு பக்கம் இருக்க, மக்களின் மனம், ஊழல் என்றால் அது அரசியல்வாதியுடன் மட்டுமே தொடர்புடையது என்றே புரிந்து கொள்கிறது. அப்படித்தான் ஊடகங்கள் போதிக்கின்றன. ‘கருணாநிதி குடும்பம் சகிதமாக அரசியல் செய்து கொள்ளை அடிக்கிறார்’ என்று திரும்பத் திரும்பப் பேசுகிறோம். இதே அளவுக்கு கலாநிதி மாறனின் சன் குழும கொள்ளைகள் பேசப்படுவது இல்லை. மாறாக அப்படிப் பேசும்போது, ‘அவர் ஒரு தொழில் செய்கிறார். அதில் முன்னேறுகிறார். இதில் என்ன கொள்ளை இருக்கிறது?’ என மத்தியதர வர்க்க மனநிலையுடன் முதலாளிகள் அங்கீகரிக்கப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி கவர்ச்சிகரமாக பேசும் ஊடகங்கள், முதலாளிகளின் ஊழலில் அத்தகைய கவர்ச்சி அம்சத்தை சேர்க்க வழியில்லை என்பதால் ஒதுக்கி விடுகின்றன. ‘முதலாளி தொழில் செய்பவர், அரசியல்வாதியே ஊழல் செய்பவர்’ என்ற இந்த சித்திரம் உண்மையா?

இது ஒரு முழுப்பொய். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆ.ராசா யாருக்காக நிகழ்த்தினார்? 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் ஸ்பெக்ட்ரம் பேரம் நடத்திய எந்த பெருநிறுவன முதலாளியும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லையே ஏன்? ஏனெனில், அரசியல்வாதிகள், நீதிமன்றம், சி.பி.ஐ., பாராளுமன்றம்… அனைவருக்கும் எஜமானர்கள், முதலாளிகள்தான். அவர்களால் பலியிடப்பட்டிருக்கும் பலியாடுதான் ஆ.ராசா. தங்கள் எஜமானரை தண்டிக்கும் தைரியம் சி.பி.ஐ.க்கோ, நீதிமன்றத்துக்கு, அரசுக்கோ கிடையாது. அதனால்தான் 1.76 லட்சம் கோடி ரூபாயை ஏமாற்றிய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து ‘குத்தக்காசு’ வசூலித்து பெருந்தன்மையாக மன்னித்துவிட்டனர்.

ஊடக அரசியல்

இந்தியாவின் தேசிய ஊடகங்களுக்கு எப்போதுமே தென்னிந்தியர்கள் மீது காழ்ப்பு உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், திராவிட நாடு கோரிக்கை என இதற்கு காரணங்கள் பல. ஈழத் தமிழினத்தை சிங்கள பேரினவாதம் அழித்ததை ‘தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக’ பார்த்ததும் இதே மனோபாவம்தான். இந்த நிலையில் நாட்டின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான தகவல் ஒளிபரப்புத்துறைக்கு தென்னிந்தியர் ஒருவர் அமைச்சராக இருப்பதும், அவர் ஒரு தலித்தாக இருப்பதும் எப்படி அவர்களுக்குப் பொறுக்கும்?

அதனால்தான் Times now, CNN-IBN போன்ற தொலைக்காட்சிகள் ‘ஆ.ராசாவை அப்புறப்படுத்தியது நாங்கள்தான்’ என உரிமையுடன் உரிமை கோருகின்றனர். தங்களால் மரியாதைக்கு உரியதாக பார்க்கப்படும் ஓர் இடத்தில் இருந்து தீண்டத்தகாத ஒருவரை அப்புறப்படுத்தி, அதன் புனிதத்தை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தை அவர்களிடம் காண முடிகிறது. இதன் பின்னால் அவர்கள் மறைமுகமாகச் சொல்லவருவது, ‘தலித்கள் அதிகாரத்துக்கு வந்தால் மிக மோசமாக ஊழல் செய்வார்கள்’ என்பதே.

நீரா ராடியா என்ன நமீதாவா?

தேசிய ஊடகங்கள் இவ்விதம் இருக்க, தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை எப்படி அணுகுகின்றன? முழுக்க, முழுக்க அரசியல் கறைபடிந்த தமிழக ஊடகங்கள் ஆ.ராசாவை தேர்தல் மெட்டீரியலாக மட்டுமே கன்வர்ட் செய்கின்றன. வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலின் தீனி, சர்வ நிச்சயமாக ஆ.ராசாதான். தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசும் அஸ்திரமாக ஸ்பெக்ட்ரமும், ஆ.ராசாவும் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் முழுவதுமாய் உண்டு. மக்கள் பணம் 1.76 லட்சம் கோடி ரூபாயை சுருட்டிய இந்த மக்கள் விரோத பொருளாதார குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரி எந்த தமிழ் ஊடகமும் கோரவில்லை. மாறாக, ஆ.ராசா கைது தேர்தல் கூட்டணியை எவ்விதத்தில் மாற்றும் என்றே ஜோதிடம் கூறுகின்றன.

நீரா ராடியா என்னும் அரசியல் புரோக்கரின் வலைப்பின்னல் யூகிக்க முடியாத இடங்களில் எல்லாம் நீண்டிருக்கிறது. ரத்தன் டாடா தொடங்கி, பர்கா தத் வரை அரசியல், ஊடகத்துறைகளின் அனைத்து இடங்களிலும் தரகு லாபி செய்யும் நீரா ராடியாவிடம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் மையச்சரடு இருக்கிறது. ஆனால் தமிழ் ஊடகங்கள் நீரா ராடியாவை ஒரு நமீதா போலவே சித்தரிக்கின்றன. எத்தனை மோசடி இது?

ஆ.ராசா அப்பாவியா?

தலித், பெருமுதலாளிகளின் பலியாடு என்றெல்லாம் சொல்வதால் ஆ.ராசா அப்பாவியாகிவிட முடியாது. ஒரு காலத்தில் முற்போக்கு அம்சங்களோடு தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த திராவிட இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஆ.ராசா ஒரு சோறு பதம். தி.மு.க.வின் இன்றைய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறுநில மன்னனாகவே இருக்கின்றனர். உடனே ‘இது அதிமுகவுக்கும் பொருந்தும். அவர்கள் மட்டும் யோக்கியமா?’ என சிலர் ஆரம்பிக்கக்கூடும். இதுதான் தி.மு.க.வின் விளக்கமும் கூட.

‘நாங்கள் மட்டுமா ஊழல் செய்தோம்? அந்தம்மா செய்யாத ஊழலா?’ என எதிரியின் அயோக்கியத்தனத்தை நினைவூட்டி தனது கயமைக்கு அங்கீகாரம் கோருகிறார் கருணாநிதி. ஆ.ராசாவும், ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் எந்தமுறை பின்பற்றப்பட்டதோ, அதே முறையைதான் நாங்களும் பின்பற்றினோம்’ என்று முன்னால் சென்றவரை கைகாட்டுகிறார். இவர் தெரிந்தே செய்த பாவிதான். அதனால் ஆ.ராசா மன்னிக்கப்பட வேண்டியர் அல்ல, தண்டிக்கப்பட வேண்டியவர்.

ஆனால் ஆ.ராசா கைது என்பதை, ஏதோ அநீதிக்கு தண்டனை கிடைக்கத் தொடங்கியிருப்பதன் முதல்படி போல சித்தரிப்பது அறியாமை மட்டுமல்ல, அது ஒரு மோசடி. தனியார்மயம் அமுலில் இருக்கும்வரை இந்த சூறையாடலை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது! ஏனெனில் இந்த மொத்த ஊழலையும் நிறுவனமயப்படுத்தி, மக்களை ஊழல்படுத்தி, ஊழலுக்கு சமூக அங்கீகாரம் பெற்றுத் தந்திருப்பது தனியார்மயம்தான். அதுவரை தண்டனைகள் என்பவை ‘இந்த அமைப்பில் நீதி கிடைக்கும்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் மயக்க மருந்தாக இருக்குமே தவிர நோய் தீர்க்கும் மருந்தாக இருக்காது!

- அதிரூபன்
பொங்குதமிழ்

Wednesday, February 2, 2011

கறுப்பு பணத்தின் கதை

ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப் போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம்.

ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஆனால், இந்திரா காந்தி, ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, ‘உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில்.

இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார். ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை.

இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார். அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று.

உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம். இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா?

அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், ‘ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார். ‘ஊழலை வேரறுக்க வேண்டும்’ என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது.

இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை ‘திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது. ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.

இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.

சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், ‘திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.



2.2 பில்லியன் டாலர் கதை

1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் ‘ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.

ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது. அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம்.

வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும். அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும்.

இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.

கேஜிபி ஆவணங்கள்

சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய ‘தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

‘அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார்.

கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், ‘இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223)

இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், ‘ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.

இந்திய ஊடகங்கள்

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.

ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார். 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.

‘ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன். ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.



மௌனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்

1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மௌனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மௌனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மௌனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சோனியா நேர்மையானவர், ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா?

ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மௌனமாகவா இருப்பார்?

மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமௌர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம்.

ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மௌனம்?

இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?

ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை

சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது.

2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார். முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள்.

ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ’1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!

கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள். அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.

விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன?

மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது. ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.

விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை. உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!

ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ?

இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!

-ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி
தினமணி