Thursday, June 17, 2010

ராவணன் - சிறப்பு விமர்சனம்


ராமாயண காவியத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம். வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்... ராவணன் கொடுமைக்கார வில்லனாக இருப்பார். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி!

மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவானந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.

வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட... ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.

தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவானந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா... எஸ்.பி. தேவானந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல... அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.

ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்... 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்... என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.

ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.

சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்... அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.

வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.

எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே... என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.

அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்... பார்த்துட்டேன்... பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா...இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.

மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறைகள் அதிகம் இருக்கும்போது குறைகள் எதற்கு?

நன்றி: நக்கீரன்

Wednesday, June 9, 2010

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!


1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?

1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.

1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.
இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.

கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?

பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.

ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!

நன்றி: வினவு இணையம்