Thursday, April 29, 2010

ஆண்டவா! இவர்களிடம் இருந்து தமிழ் நாட்டை காப்பாற்று!

தமிழனாய் பிறந்ததற்கே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு பிராபகரன் தாயார் பார்வதி அம்மா சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தரை இறங்க விடாமல் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பிப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதற்கு விளக்கமளித்த கருணாநிதி இது முழுவதும் மத்திய அரசின் முடிவு, இதில் தமிழக அரசு தலையிட முடியாது, இதைபற்றி எதுவுமே எனக்கு தெரியாது என்று கதையளந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இன்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் "பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அரசு தனது கடிதத்தினை திரும்ப பெறும் வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது" என்று கூறுகிறார்கள்.

ஏன் இந்த கண்ணாமூச்சி? பார்வதி அம்மா வருவது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை என்றால் விசா கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே? ஏன் விசா கொடுத்தார்கள் பிறகு ஏன் திருப்பி அனுப்பினார்கள்? இதுவரை இந்த கேள்விக்கு அரசாங்கங்கள் பதில் அளிக்கவில்லை.

----------------------------------------

சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)

"எப்போதெல்லாம் அதர்மம் தலை விரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்று சொன்னது கிருஷ்ண பகவான். ஏப்ரல் 30 - சுறா ரிலீஸ், மே - 1 எங்கள் 'தல' பிறந்த நாள்."

மேலே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இரண்டு கேள்விகள்.

1. நீங்க திருந்தவே மாட்டீர்களா?
2. இந்த நாட்டை உங்களிடம் இருந்து காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

கடைசியாக கருணாநிதிக்கு இரண்டு கேள்விகள்.

1. ஒரு முதலமைச்சர், கட்சித் தலைவராக இல்லாமல் மிகச் சாதாரண, நோயுடன் போராடும், தள்ளாத வயது முதியவராக நீங்கள் ஒரு மருத்துவமனைக்கு போகும் போது அங்கு துரத்தியடிக்கப்பட்டால் அந்த வலியையும், அவமானத்தையும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

2. தீராத நோயுடன் போராடும் உங்கள் மகன்களில் ஒருவர் அடிக்கடி சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார். அப்படி போகும் போது அந்த நாட்டில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

பி.கு: மேற்கூறிய இரண்டும் கனவிலும் நடக்காது என்பது வேறு விஷயம்.

Thursday, April 22, 2010

போங்கப்பா! இப்பவாவது போய் புகார் கொடுங்க..!

தங்கக் காசு நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கவனத்துக்கு.

கோல்ட் குவெஸ்ட் நிறுவன தங்கக் காசு மோசடி பற்றி இன்றைய தினசரிகளில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. "முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் தங்க காசு மோசடி பற்றி விசாரிக்க தனி நபர் கமிட்டி அமைக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது"

கோல்டு குவெஸ்ட் நிறுவனம் தங்க நாணயங்களோ, கமிஷனோ பெறாத 200 பேருக்கு மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும், அதை ஏற்காத சி.பி.சி.ஐ.டி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் அதனால் தான் இந்த கமிட்டி அமைப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினகரனில் செய்தி வந்துள்ளது.

ஆனால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த விசாரணையின் போதே பலருக்கு தங்க நாணயத்தின் மதிப்பு போக ஒரு தொகை ரொக்கமாக நீதிமன்றத்தில் வைத்தே வழங்கப்பட்டது (25,000 ரூபாய் கட்டியவர்களுக்கு 17,000 சொச்சம் தரப்பட்டதாக ஞாபகம்). மோசடிப் புகார் எழுந்த போது சென்னை மாநகர / சிபிசிஐடி போலீஸாரிடம் முறையாக புகார் தரப்பட்டவர்களுக்கு மட்டுமே பணம் திருப்பி தரப்படுவதாகவும் பெசிக்கொண்டார்கள்.

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் பாதிக்கபட்டவர்கள் இந்த கமிட்டியிடம் வரும் மே 31, 2010 தேதிக்குள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. (Complaints / victims can file their claims on or before May 31, 2010 after an announcement is made by the settlement commissioner in local dailies to this effect).

முதலில் புகார் தெரிவிக்காதவர்கள் இப்போது தெரிவிக்கலாமா என்பது பற்றி தெரியவில்லை. மோசடிப் புகார் எழுந்த போதே நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் புகார் தரவில்லை. புகார் எழுதிக் கொடுத்தாலும் வரவா போகிறது என்ற எண்ணமும், வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் நிறைய பேர் புகார் கொடுக்கவில்லை. அப்போது புகார் கொடுக்காதவர்கள் இந்த கமிட்டியிடம் முறையிடலாமா என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பிரச்சனை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நிதிநிறுவன மோசடிகள் தான் தமிழ்நாட்டில் நின்றபாடு இல்லை.

எததனை காலம் தான் ஏமற்றுவார் இந்த நாட்டிலே!!!!

--------------------------------------------

சமீபத்திய துக்ளக் தலையங்கம் பொருத்தமாக கூறியுள்ளது. "உலகின் மற்ற நாடுகளில் எப்படியோ – தெரியவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், விரைவு வருமானம் உள்ள சமாச்சாரங்களில், நேர்மைக் குறைவு பெரிய அளவில் இருக்கிறது. பண முதலீடு செய்து, பல வருடங்கள் உழைத்து, தரமான பொருளை உற்பத்தி செய்து, ஆரம்ப நஷ்டங்களைத் தாங்கி, போட்டிகளை எதிர்கொண்டு, வர்த்தகத் திறனைக் காட்டி... பின்னர் லாபத்தைக் காணக்கூடிய தொழில்கள் பல உண்டு. இவற்றில் நேர்மைப் பஞ்சம் அதிகம் இருக்காது. சூதாட்டம் மாதிரி, முதலைப் போட்டு, உடனடி லாபம் எதிர்பார்க்கக் கூடிய வர்த்தகங்களும் உண்டு; இவற்றில் நேர்மைக்குப் பஞ்சம் அதிகம் இருக்கும்"

Monday, April 19, 2010

எப்படியோ இருந்த கட்சி!! இப்படி ஆயிடுச்சு!!


மேலே உள்ளது அ.தி.மு.க வின் முதல் உறுப்பினர் படிவம். படிவத்தில் உள்ள பெயர்கள் வரிசையில்

1. எம்.ஜி.இராமச்சந்திரன்
2. கே.ஏ.கிருஷ்ணசாமி
3. எஸ்.டி.சோமசுந்தரம்
4. முனு.ஆதி
5. குழ.செல்லையா
6. எஸ்.ஆர்.இராதா
7. கே.செளந்தரராசன்
8. இரா.மோகனரங்கம்
9. ஜேப்பியார்
10. என்.எஸ்.இளங்கோ
11. எம்.கே.சுதாகரன்
12. முசிறிப்புத்தன்

இந்த படிவம் நிரப்பப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை.

Friday, April 16, 2010

தேவை கொஞ்சம் சுரணை

அந்தச் செய்தியைப் படித்ததுமே எனக்கு ரத்தம் கொதித்தது.

சென்னையில் பல்லாவரத்தில் இன்னமும் கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்தில் தவறுதலாக சென்ற கார் 50 அடி உயரத்தில் இருந்து ரயில் பாதையில் விழுந்ததில் காரோட்டி திவாகர் என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்த விபத்துக்குக் காரணம், அந்த மேம்பாலம் தொடங்கும் இடத்தில், அதில் செல்லக் கூடாது வேலை இன்னும் முடியவில்லை என்ற அறிவிப்புகளோ, தடுப்பு வேலியோ எதுவும் இல்லை என்பதுதான்.

இப்படி ஒரு விபத்து மேலை நாட்டிலேற்பட்டிருக்குமானால், அந்த மேம்பாலத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பதவி விலக வேண்டி வந்திருக்கும். நாமோ சுர¬ணையற்ற, பொறுப்பற்ற அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

டாஸ்மாக் மதுக்கடை வாசலில் ஒருவராவது மிதமிஞ்சிய போதையில் தெருவோரம் சுய நினைவற்று விழுந்து கிடப்பதை தினசரி சென்னை சாலைகளில் பார்க்கிறேன். அந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு முழுக் குடும்பத்தின் வேதனையும் வலியும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை யாருக்கும் எந்த சுரணையும் கிடையாது. வருடத்துக்கு 10 ஆயிரம் கோடி வருமானத்தை 13 ஆயிரம் ஆக்கிவிடுவோம் என்ற வெறி மட்டும்தான் அரசுக்கு இருக்கிறது.

சமூக ஆர்வலர் நாராயணன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கில் தெரிவிக்கும் தகவல்கள் நம் ரத்தக் கொதிப்படி அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை குடி போதையால் நடப்பவை.

சாலை வரிகளாக மட்டும் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்களை சம்பாதிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 ஆயிரம் தமிழர்கள் சாலை விபத்துகளில் செத்தார்கள். மூன்று லட்சம் பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். 2009ல் மட்டும் சராசரியாக தினம் 39 பேர் ! சாவு விகிதம் கடந்த 4 வருடங்களில் 67 சத விகிதம் அதிகமாகியிருக்கிறது. டாஸ்மாக் விற்பனையும்தான்.

பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துத் தீர்ப்பதற்கு பதிலாக மழுப்புவது, திசை திருப்புவது, வார்த்தை விளையாட்டில் விஷயத்தை மறைப்பது போன்ற உத்திக¬ளையே கருணாநிதி அரசு எப்போதும் பயன்படுத்தி வருகிறது. சட்டமன்ற விவாதங்களையும் அறிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது தெரியும்.

அரசுப் பணிகளிலும் ஆசிரியப்பணிகளிலும் ஓய்வு பெற்றவர்களை மறுபடியும் நியமிப்பதால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதைப் பற்றி சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது, கருணாநிதி பதிலுக்குக் கேள்வி கேட்கிறார். ‘‘எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ?’ ‘‘ பத்தாயிரம் ஓய்வுபெற்றவர்களை நியமித்தால், பத்தாயிரம் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

‘‘ஒரு சிலர் கூட பாதிக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதிலே கஷ்டம் இருந்து அதனால் பொது மக்களுக்கு செய்யவேன்டியவற்றில் தாமதமாகாமல் இருப்பதற்காக இடைக்காலத்தில் சிலரை நியமிக்க வேண்டியிருக்கிறது. இதுவும் நீதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு முடிந்து போன கதை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.

இந்த செய்திக்கு அடுத்த பக்கத்திலே ஒரு செய்தி . தமிழ்நாடு அரசின் குரூப் 2 தேர்வில் வெறும் 1225 காலி டங்களுக்கு நான்கு லட்சம் பேர் போட்டி இடுகிறார்களாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஓய்வு பெற்ற வயதானவர்களை மறுபடி நியமித்தால் எத்தனை இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விதண்டாவாத கேள்வி கேட்கிறார் முதலமைச்சர்.
(இவர் ஓய்வு பெறாமல் இருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞருக்கே 58 வயதாகிவிட்டது என்பது இன்னொரு கதை.)

வெளித் தோற்றத்தில் எல்லம் சிறப்பாக செய்வது போன்று ஷோ காட்டுவதில் மட்டுமே அக்கறை இருக்கிறதே தவிர சாராம்சத்தில் எல்லாம் அரைகுறையாகவும் சீர்கேடுகளுடனுமே இருக்கின்றன.

ஒரு பக்கம் அரசு ( பெரியாரைத் தவிர) யார் யாருடைய நூல்களை எல்லாமோ நாட்டுடமையாக்குவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கிறது. நூல் வடிவமே பெறாத கையெழுத்துப் பிரதிகளைக் கூட நாட்டுடமையாக்குகிறது !
இன்னொரு பக்கம் மூன்றாண்டுகளாக அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதே மர்மக் கதை போலாகிவிட்டது. பதிப்பாளர்களை விண்ணப்பிக்கும்படி அழைக்கும் வருடாந்தர அறிவிப்பு விளம்பரம் 2007க்குப் பிறகு வரவில்லை. 2007க்கான நூல்களை 2009 வரை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சுரணையற்ற நிர்வாகம், ஆட்சிமுறை என்பது மாநில அளவிலானது மட்டுமல்ல. மத்தியிலும் அப்படித்தான். டெல்லி கதிர்வீச்சு விபத்து ஓர் அடையாளம். மாயாபுரி தொழிற்பேட்டையில் இரும்புக் கழிவுக் கடையில் கோபால்ட் 60 என்கிற ஆபத்தான கதிரியக்கம் மிகுந்த உலோகம் கழிவுகளுடன் கலந்து வந்திருக்கிறது. அதை உடைத்த தொழிலாளியும் கடைக்காரருமாக மொத்தம் 4 பேர் படு மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காயலான் கடைக்குக் கதிர்வீச்சுப் பொருள் எப்படி வந்தது ?இப்படிப்பட்ட பொருட்களை வாங்குவது முதல் பயன்படுத்தி வீசி எறிவது வரை ஒவ்வொரு கட்டத்தையும் முழுக்க முழுக்க நிர்வகிக்கும் பொறுப்பு அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துடையது. அதற்குத் தெரியாமல் ஒரு துகள் கூட நகரக் கூடாது என்பதுதான் விதி.

அணுசக்திப் பொருட்கள் இருக்கும் இடங்கள் மட்டும் இந்தியாவில் 1485. இவற்றிடம் 7850 அணுப் பொருட்கள் இருக்கின்றன. கடந்த 2008&09ல் மொத்தம் 1485 இடங்களில் வெறும் 16 இடங்களில் மட்டும்தான் வாரியம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பு சோதனை நடத்தியிருக்கிறது. தொழிற்சாலை ரேடியாலஜி யூனிட்டுகள் மொத்தம் 505. அவற்றில் 39ல் மட்டும்தான் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாரியத்தை நம்பித்தான் நம்முடைய கல்பாக்கம், கூடன்குளம் போன்ற அணுசக்தி, அணுகுண்டு உலைகள் எல்லாம் இருக்கின்றன. இங்கெல்லாம் படிப்பறிவற்ற தினக் கூலித் தொழிலாளர்கலை கதிரியக்கத்துக்கு உட்படுத்தினால் அதைப் பற்றி கேட்பார் கூட கிடையாது. படித்த ஊழியர்களே கேட்கும் நிலையில் இல்லை.

இந்த லட்சணத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கே அணு உலைகள் ஏற்படுத்த வரும்படி மன்மோகன் அரசு நடைபாவாடை விரித்துக் கொன்டிருக்கிறது. அந்த உலைகளில் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு ஒரு அளவுக்கு மேல் தரமுடியாது என்று சட்டம் இயற்றும்படி அமெரிக்காவும் பிரான்சும் மன்மோகன் அரசை வற்புறுத்துகின்றன. மன்மோகனும் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு சட்டம் கொன்டு வருகிறார்.

கருணாநிதியானாலும் சரி மன்மோகனானாலும் சரி, அவர்களிடம் மக்கள் நலன் பற்றிய சுரணையை எதிர்பார்ப்பதே நம் தவறுதான் என்று தோன்றுகிறது. முதலில் நமக்காவது சுரணை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

மக்களின் சுரணை திருமங்கலம் முதல் பெண்னாகரம் வரை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் முற்றிலுமாக அழிந்துபோய்விடவில்லை என்பதை வேலூர் காட்பாடி மக்கள் காட்டியிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து அட்டென்டென்சில் கையெழுத்து போட்டுவிட்டு வேலை பார்க்காமல் தினமும் சென்னைக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்த டாக்டர்களை ரயிலடிக்கே வந்து முற்றுகையிட்டு போலீசிடம் பிடித்துக் கொடுத்த சுரணையுள்ள மக்களுக்குத்தான் எல்லா பத்மஸ்ரீ பத்மபூஷண் பாரதரத்னா விருதுகளையும் கொடுக்க வேண்டும்.

-ஞாநி (ஓ பக்கங்கள்)

Monday, April 12, 2010

கடன்காரன்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழக வட மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள். தமிழகம் எங்கும் அமல் படுத்தப்படும் மின் வெட்டுக் காரணங்களால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.14 ஆயிரத்து 353 கடன் மட்டும்தான் உள்ளது. இது ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும் போது பரவாயில்லை என்கிற தொனியில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பட்ஜெட் விவாதத்தின் போது பதிலளித்துப் பேசிய அன்பழகன், அமெரிக்காவின் கடன் ரூ.12.67 லட்சம் கோடி ஆகும். தமிழகத்தில் 2009 இறுதியில் மொத்த கடன் பொறுப்புகள் ரூ.89,140 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது மராட்டியத்தில் ரூ.1 லட்சத்து 79,727 கோடியாகவும், ஆந்திரத்தில் 1 லட்சத்து 9,757 கோடி ரூபாயாகவும், கர்நாடகத்தில் ரூ.79 ஆயிரத்து 644 கோடியாகவும், கேரளாவில் ரூ.70 ஆயிரத்து 117 கோடியாகவும் உள்ளது. கேரளத்தில் ரூ.70 ஆயிரம் கோடி இருக்கும் போது தமிழகத்தில் ரூ.89 ஆயிரம் கோடி என்பது பரவாயில்லை.தனி நபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும். தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல என்றார்.

சரி சாதாரண தமிழன் ஒவ்வொருவனும் இவ்வளவு கடன் பட்டிருக்கிறான் என்றால் எதன் பேரில் இவர்கள் இத்தனை கடன்களை வாங்கினார்கள். தமிழக மக்களின் வாழ்க்கையே நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் போது இந்தியாவின் கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின் பெயரால் கடன்களை வாங்கி தங்களையும் தங்களின் வாரிசுகளையும் வளப்படுத்திக் கொள்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

நன்றி: இனியொரு

Saturday, April 10, 2010

கொசுத்தொல்லைகள்

நான் எந்த வேலையில் இறங்கினாலும் அதில் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும் சூழலும் முக்கியம். அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரையேற வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று, என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். நான் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும் போது, கண்டிப்பாக களத்தில் இறங்குவேன். "நான் ஒரு முடிவெடுத்தா, அதை நான் நினைச்சா கூட மாற்ற மாட்டேன்" என்பது சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் வைத்த மக்களுக்காக போராட, எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை சகோதரனாக, மாணவ சமூகத்தினர் சக மாணவனாக, பெரியோர் தாய்மார்கள் தங்கள் வீட்டுப்பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக, களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும் என்னை நம்பி என் வழியை பின்பற்றும் ரசிகர்களையும் கைவிடமாட்டேன்.

-இளைய தலைவலி (ஸாரி) இளைய தளபதி விஜய்.

டேய்.. நாராயணா! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா ஏதாவது மருந்து அடிச்சு கொல்லுங்கடா!

Monday, April 5, 2010

இந்தியனின் மனசாட்சி

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.

நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.

விரிவாகப் பார்ப்போம்.

நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்… இளமைத் துடிப்பு மிக்கவர்… அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்… என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.

ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், “நேரு குடும்பத்து வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.

உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்த்து. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது!” என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்தக் கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.

ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.

இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.

ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்குத் தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!

இதற்கிடையில் இந்திய அரசியலில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.

மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.

நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?

தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.

கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரச்சினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.

இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி “மானாட, மயிலாட” நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!

ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.

ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரச்சினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரச்சினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்குப் பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.

இதன் விளைவாகவே தமது உண்மையான பிரச்சினைகளை உணரவும், அதை எதிர்த்துப் போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி – அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதை ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.

- சுந்தரராஜன்

நன்றி: நெருடல்

Friday, April 2, 2010

கேள்விக்கு என்ன பதில்?

விலைவாசி கண்ணைக் கட்டும் இந்நேரத்தில் பிரதமருக்கு பாரதிய ஜனதா கட்சி பின் வரும் பத்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

1. பிரதமர் மன்மோகன்சிங் விலைவாசி உயர்வு ஏன் என்று தெரிந்திருந்தும் நாட்டு மக்களுக்கு அதை தெரியப்படுத்த மறுப்பது ஏன்?

2. இந்தியாவில் மட்டும்தான் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 11 சதவீதமாக உள்ளது. உணவு பண்டங்களுக்கான பணவீக்க விகித அளவு மட்டும் கடந்த 20 வாரங்களில் 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவே இருக்கிறதே தவிர இறங்கியபாடில்லை இதற்கு காரணம்தான் என்ன? இந்த விலை உயர்வை தடுக்க மத்திய அசு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?

3. உலக அளவில் பணவீக்க விகிதம் 1 சதவீதம் முதல் 2 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக இருப்பதன் மர்மம் என்ன?

4. உலக அளவில் ஒப்பிடும்போது சர்க்கரை விலை 100 சதவீதம் உயர்வாக உள்ளது. கோதுமை விலை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையை விட இந்தியாவில் உணவு பண்டங்களின் விலை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

5. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் சீனாவில் 9 சதவீதம், ஆனால் சீனாவில் பண வீக்க விகிதம் 2 சதவீதம்தான். இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது ஏன்?

6. 48 லட்சம் டன் சர்க்கரையை கிலோ ரூ.12.50 விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள். பின்னர் அதையே வெளிநாடுகளில் இருந்து கிலோவுக்கு ரூ.22 முதல் ரூ.32 வரை கொடுத்து இறக்குமதி செய்தீர்கள். இந்த லாபகரமான நடவடிக்கை ஏன் என்று நாட்டு மக்களுக்கு விளக்க தயாரா? சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் கையிருப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் ஆன் லைன் வாணிபத்துக்கு துணை போனது ஏன்?.

7. அரசின் தானிய கிடங்குகளில் தானியங்களை வைக்க இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன. பொது விநியோகத்துக்கு எடுத்து வழங்காமல் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை புளுத்து போய் உள்ளது. இந்த நிலையில் நாட்டின் சரிபாதி மக்கள் இரவில் காலி வயிறோடுதான் தூங்க செல்கிறார்கள் என்பது இந்த அரசுக்கு தெரியுமா?

9. 2005 ல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 31 கோடி என்று மத்திய திட்டக்குழு அறிவித்தது. ஆனால் 2009 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயர்ந்துள்ளது என்கிறது டெண்டுல்கர் குழு. வறுமையை ஒழித்து விட்டோம் என்று இன்னமும் நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?

10. நாட்டின் ஏழைகளில் 51 சதவீதம் பேருக்கு ரேஷன் அட்டையே கிடையாது. அவர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் தரப்படுதே இல்லை என்று மத்திய அரசு நியமித்த சக்சேனா கமிட்டி கூறி உள்ளதே?

ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்வாரா சர்தார்ஜி?