Monday, August 30, 2010

ஜெயலலிதாவை தூக்கில் போடு!


தர்மபுரியில் 10 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரின் ஆத்மா இன்று சாந்தி அடைந்திருக்கும்.

நாம் இருபதாம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா? என்று சந்தேகப்பட வைத்து, இந்த தமிழ்ச் சமூகம் எந்தளவுக்கு கேடு கெட்டு போய் விட்டது என்பதை உணர்த்திய அந்த சம்பவத்தை யாராலும் மறந்துவிட முடியாது.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்தளவுக்கு வழக்கு சாதகமாக கொண்டு செல்லப்பட்டது, குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அதிமுக தரப்பில் எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன, அதற்கெல்லாம் மேல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னனி வக்கீல்கள் நேரில் ஆஜராகி வாதாடியிருப்பது எந்தளவுக்கு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்?

குற்றவாளிகள் தரப்பும் "அம்மா" எப்படியாவது கப்பாற்றி விடுவார் என்று நம்பி இருந்தார்களாம். என்ன ஒரு திமிர்?

ஒருவேளை, இந்த பாவத்தை கழுவத்தான் போன வாரம் ஸ்ரீரங்கம் போய் வந்தாரோ? அரங்கநாதன் மன்னித்தாலும் மூன்று மாணவிகளின் ஆத்மா மன்னிக்காது ஜெயலலிதாவை..!

Tuesday, August 24, 2010

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்.!


ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது "புதிய கலாசாரம்" இதழில் வெளிவந்த கட்டுரை.

பரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
‘அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் -
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

அழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.


நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகந்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

கவச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

- புதிய கலாச்சாரம் (ஜூன் 1991)

Saturday, August 14, 2010

இந்த நாட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா?

63ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

Friday, August 6, 2010

ஒரு காவல் கதை - என்கவுன்டர்


கசங்கிய அழுக்கேறிய சட்டை. பரிதாபமான தோற்றத்தோடு ஆட்டுக்கால் சூப் விற்றுக் கொண்டிருந்தவரின் அருகே சூப் குடித்துக் கொண்டு கூட்டம் நிற்கத்தான் செய்தது. அவரின் தோற்றம் அழுக்காய் இருந்தாலும், அவர் விற்கும் சூப் சுவை குறைந்து விடுமா என்ன ?

நான்கு சக்கரங்கள் பொருத்திய வண்டிக் கடையில் சூப் வியாபாரம் செய்து கொண்டிருந்த முனியாண்டிக்கு வயது அறுபது இருக்கும். முகத்தில் முதுமையின் சாயல்கள் நன்றாகவே தெரிந்தன. இருபது வருடங்களாக அன்றாட உணவுக்காகவே போராட்டம் நடத்திய களைப்பு அவரின் தோற்றத்தில் தெரிந்தது.

‘என்ன பெரிதாக வந்து விடப்போகிறது சூப் விற்பதில் லாபம் ?’ ஆனால் முனியாண்டிக்கு வேறு தொழில்கள் செய்து பழக்கமில்லை. சுவையான சூப் கிடைக்கும் என்ற பெயர் பரவி விட்டதால் இவர் கடையை தேடி வந்து சூப் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனாலும் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்க பெரிதாக வருமானமில்லை.

சூப் குடிக்க வருபவர்களின் உறவு, முனியாண்டியிடம் சூப்புக்கு காசு கொடுப்பதோடு முடிந்து விடும் அல்லவா ? வேறு என்ன உறவு இருக்க முடியும் ? அவருக்கு பொருளாதார உதவி செய்து அவரது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையை போராட்டமாக இருக்கும் போது, சூப் விற்பவனின் வாழ்க்கையை பற்றி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கிறது.


“அய்யா நம்ம பாண்டிய போலீஸ் சுட்டுக் கொன்னுடுச்சுய்யா“ என்று அலறியபடி வெங்கடேசன் ஓடி வந்ததைப் பார்த்து முனியண்டிக்கு நெஞ்சில் கடப்பாறையை இறக்கியது போல இருந்தது. தடுமாறி விழப் போனவரை அருகே சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர்.


“ அய்யா வேணான்டா. சொல்றதக் கேளுடா. ஒன் வாழ்க்கையே தெச மாறிப் போயிடுண்டா“ என்று பாண்டியிடம் முனியாண்டி மன்றாடியபோது, 25 வயதுப் பாண்டி “வாய மூடுப்பா. போலீஸ் என்னவோ கண்டுபிடிச்சு மயிறப் புடுங்கிடுவாங்கன்ன…“ “இப்ப பாத்தியா ? இன்னையோட இருபது நாளாகுது. தெனாவட்டா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுங்க. என்னப் பாத்து பொட்டப் பயன்னு நெனைக்க மாட்டான் ? “

இந்த காரசார விவாதத்தின் பின்னணி, பாண்டியின் தம்பி, முனியாண்டியின் இளைய மகனின் மரணம். பாண்டியின் தம்பி முருகன், ஒரு சில்லரைத் தகராறில் 35 இடங்களில் வெட்டுப் பட்டு சாலை முழுக்க தன் ரத்தத்தை சிதற விட்டுப் பிணமானான்.

கொலைகாரர்களை போலீஸ் கைது செய்யாமல் உலவ விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரத்தில்தான் முனியாண்டியிடம் வாதம் செய்து கொண்டிருந்தான் பாண்டி.


“அவனுங்கள பழிக்குப் பழி வாங்குனாத்தான் என் மனசு ஆறும்ப்பா. நான் சும்மா விடமாட்டேன். “ என்று கறுவியபடி வெளியே சென்றான் பாண்டி. ஓரு பத்து நாள் போனா சரியாயிடும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டே, மாலை சூப் கடை வைப்பதற்கான ஆயத்தங்களில் இறங்கினார் முனியாண்டி.


இரண்டு நாட்களில் தன் மகன் பாண்டி, இளைய மகனின் கொலைக்கு காரணமான இரண்டு பேரை சந்தையில் வைத்து கொலை செய்தான் என்ற செய்தி முனியாண்டியை மனம் உடைந்து போகச் செய்தது. அத்தோடு, பாண்டியின் உறவை முறித்துக் கொண்டு, அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டார் முனியாண்டி.


குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு, சேலம் சிறையில் இருந்த பாண்டிக்கு சிறைக்குள் நட்பு வட்டாரம் பெருகியது. “அண்ணே, வெளியப் போனதும், இந்த சம்பவத்த செஞ்சு குடுங்கன்னே. தலைவரு நல்லா கவனிச்சுக்கிடுவாரு. “ என்று அடுத்த கொலைக்கான அச்சாரம் கிடைத்த போது, இயல்பாக ஏற்றுக் கொண்டான் பாண்டி.


பணம் கொட்டியது. பெரிய மனிதர்களின் சகவாசம் கிடைத்தது. புதிதாக சுமோ ஒன்று வாங்கினான். வெளியே எங்கு சென்றாலும் பத்து பேர் இல்லாமல் செல்வதில்லை. சுமோ சீட்டுக்கு கீழே பத்து இருபது வீச்சரிவாள்கள் இருக்கும். சிறையில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, புதிதாக கைத்துப்பாக்கி ஒன்று வாங்கினான். போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக பேசத் தொடங்கினர்.

“பாண்டி. அய்யா வீட்டுல பங்ஷன் வச்சுருக்காரு. பாத்து கவனிச்சுக்கிட்டன்னா, பின்னாடி யூஸ் ஆகும்“ என்று தல்லாக்குளம் ரைட்டர் வந்து சொன்னபோது, அருகில் இருந்த எடுபிடியை அழைத்து, ரெண்டு லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
பாண்டி வற்றாத அமுத சுரபியானான்.

கழுத்தில் 8 பவுனக்கு தங்கச் சங்கிலி. பாண்டியின் சுமோ வந்தால் என்னமோ ஏதோ என்று மதுரை மக்கள் அலறுகிற அளவுக்கு பிரபலமானான். மதுரை தாண்டி, தமிழகம் முழுவதும் பாண்டியின் புகழ் பரவியது. இரண்டு ஸ்கார்ப்பியோக்கள், நான்கு சுமோக்கள் என்று பெரிய பணக்காரனைப் போல பாண்டி வலம் வந்தாலும், முனியாண்டி தள்ளு வண்டியில் சூப்தான் விற்றுக் கொண்டிருந்தார். தன் பேச்சைக் கேட்காக மகனிடம் பேச மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம்.


“அண்ணே வக்கீல் லயன்ல இருக்காருன்னே. “


“எந்த வக்கீல்டா“

“நம்ம சேகர் சாருன்னே“

“குடு“

“என்ன பாண்டி நல்லா இருக்கியா ? “ என்று நலம் விசாரித்த சேகர், பிரபலமான வக்கீல். பெரிய தலைவர்களுக் கெல்லாம் வக்கீலாக இருப்பவர்.

“நல்லா இருக்கேன்னே. நீங்க நல்லா இருக்கீங்களா ? “

“இருக்கேன். இருக்கேன். ஒரு சம்பவம் செய்யணுமே ! “

“சின்னதா பெரிசாண்ணே ? “

“ஒனக்கு எது பெருசு ? நீ நெனச்சா எல்லாம் சின்னதுதான். “

“சொல்லுங்கண்ணே. “

“ கே.கே.நகர்ல ஒருத்தன் இருக்கான். குமார்னு பேரு. எதுக்கும் மசிஞ்சு வர மாட்டேங்குறான். தலைவரையே எதுத்துப் பேசிட்டான்னா பாரேன்.“

“மெறட்டிப் பாக்கட்டான்னே ? “

“அதெல்லாம் ஒத்து வர மாட்டான் பாண்டி. சம்பவம் செஞ்சடுன்னு நான் சொல்றேன்னா, காரணம் இல்லாமயா இருக்கும் ? ஐஞ்சு ரூபா கொடுத்துடுறேன். யாராவது பசங்கள அனுப்பு. இன்னைக்கே அனுப்பு“


“சரிண்ணே“


கே.கே.நகரில் பட்டப் பகலில், அந்தப் படுகொலை நடந்த போது, நகரமே ஆடித்தான் போனது. அந்தக் குமார் நடு வீதியில் இறந்து கிடந்ததைப் பார்ப்பது யாராக இருந்தாலும் பயத்தை கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கொலை நடந்தது.


காலப் போக்கில் வக்கீல் சேகருக்காக மட்டும் ஐந்து கொலைகள் செய்தான் பாண்டி. போலீசின் தேடுதல் வேட்டை தீவிரமாகவும், சிறிது நாட்கள் ஆந்திராவுக்குச் சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, சேகரிடமிருந்து அழைப்பு.


“பாண்டி… என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்“


“இல்லண்ணே. போலீஸ் டார்ச்சர் தாங்க முடியலே. அதான் ஆந்திராவுக்குப் போய் ரெண்டு மாசம் இருந்தேன். “

“பாண்டி, அயனாவரத்துல ஒரு சம்பவம் செய்யணும். “

“அண்ணே. போலீஸ் டார்ச்சர் ரொம்ப அதிகமாயி டுச்சுண்ணே. கொஞ்ச நாள் அப்ஸ்காண்டிங்ல இருக்கலாம்ணு பாக்கறேன். ஒரு ஆறு மாசம் போகட்டும்ணே. “ என்றதை சேகர் ஏற்கவில்லை.

“என்னா பாண்டி. இருவது வருஷமா ஃபீல்டுல இருக்க. நீயே இப்படி சொன்னா எப்படி ? அவசரம்னு தானே ஒங்கிட்டே வர்றேன்“

“இல்லண்ணே. சூடு கொஞ்சம் தணியட்டும். யாரோ புது டிஜிபி போட்ருக்காங்கள்லாம். ரொம்ப ஸ்டிட்டாமே ? “


“பாண்டி. நாந்தான் பாத்துக்கறேன்றேன்ல. எதுக்கு கவலப் பட்ற ? “

“இல்லண்ணே. கொஞ்ச நாள் போகட்டுண்ணே. அப்பொறம் நானே சம்பவம் செஞ்ச குடுக்கறேன். “ என்று சொல்லி விட்டு, லைனில் காத்திருக்காமல் பாண்டி போனை கட் பண்ணியது சேகரை ரொம்பவே ஆத்திரப் படுத்தியது.


ரவுடிப்பய… …. என்ன திமிரு இவனுக்கு என்று மனதிற்குள் கறுவினார் சேகர்.


பாண்டியின் இருப்பிடம் பற்றி கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அநாமதேய அழைப்பை


அடுத்து, பாண்டி தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தது போலீஸ்.
மதுரையில் பிடிக்கப் பட்ட பாண்டியும், அவன் கூட்டாளியும் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

“ யோவ் நந்தகோபால். எங்கய்யா இருக்க ? “ என்ற உயர் அதிகாரியின் குரலைக் கேட்டதும் விறைப்படைந்தார் இன்ஸ்பெக்டர் நந்தகோபால்.

“சார். ரவுண்ட்ஸ்ல இருக்கேன் சார். “

“சரி. பாண்டிய செக்யூர் பண்ணி க்யூ ப்ரான்ச் சேப் ஹவுஸ்ல வச்சிருக்காங்க. யூ டேக் ய டீம் வித் யூ. டேக் கஸ்டடி ஆப் ஹிம் அன்ட் பினிஷ் ஹிம். டோன்ட் லீவ் எனி ட்ரேசஸ் அன்ட் தேர் ஷுட் நாட் பி எனி மிஸ்டேக்ஸ். யூ அண்டர்ஸ்டேன்ட் ? “ என்றதற்கு “எஸ் சார். வெரி வெல் சார்“ என்ற பதிலளித்து விட்டு, உயர் அதிகாரி இணைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்தார் நந்தகோபால்.

பழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆளரவமற்ற தனிமையான பங்களாவுக்கு, தன்னுடன் ஒரு எஸ் ஐயும், இரண்டு ஏட்டுக்களையும் அழைத்துக் கொண்டு எங்கே என்று சொல்லாமல் புத்தம் புதிய பொலீரோ ஜீப்பில் கிளம்பினார் நந்தகோபால். மறக்காமல் பிஸ்டலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார்.

இரவு 12 மணியைத் தாண்டியிருந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஏற்கனவே அந்த பங்களா வாசலில் வேறோரு ஜீப் நின்று கொண்டிருந்தது.


பங்களா வாசலில், இடுப்பில் பிஸ்டலை மறைத்து வைத்திருந்த சபாரி அணிந்த ஒருவர், நந்தகோபாலைப் பார்த்ததும் விறைப்பாக சல்யூட் அடித்தார்.


“சார். சிசிபிலேர்ந்து இன்ஸ்பெக்டர் அஷோக்கும், அவரோட டீமும் வந்துருக்காங்க சார். அக்யூஸ்ட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கான் சார் என்ற அந்தக் காவலரின் பேச்சுக்கு தலையசைத்தபடி முதல் மாடி ஏறினார் நந்தகோபால்.

கால்களில் சங்கிலி போட்டு ஜன்னல் கம்பியோடு இணைக்கப் பட்டு தரையில் உட்கார்ந்திருந்தான் பாண்டி. இவனா இவ்ளோ பெரிய ரவுடி என்று மனதிற்குள் ஏற்பட்ட எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அவன் செயின ரிலீஸ் பண்ணுங்கைய்யா“ என்று யார் என்று குறிப்பிடாமல் பொதுவாகச் சொன்னதை தங்களிடமே சொன்னது போல பாவித்து, மூன்று கான்ஸ்டபிள்கள் வேகமாக ஓடி, பாண்டியை ஜன்னலோடு பிணைத்திருந்த சங்கிலியை மட்டும் அவிழ்த்து, அந்தச் சங்கிலியின் இன்னொரு முனையை கையில் பிடித்துக் கொண்டார்கள். பாண்டியின் கைகள் பின்னால் கைவிலங்கிடப் பட்டன. பாண்டியோடு கூட இருந்தவனும், அதே போல கட்டப் பட்டான். பாண்டியும் அவன் கூட்டாளியும் பொலீரோ ஜீப்பின் பின்புறம் தரையில் உட்காரவைக்கப் பட்டனர்.


“சார் ரிமாண்டா சார்“ என்று பாண்டி கேட்டதை நந்தகோபால் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. நள்ளிரவில் ஜீப்பில் அழைத்து செல்வதைக் கண்டதும் பாண்டிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.


“சார். என்கவுன்டரா சார். ரிமாண்ட் பண்ணிடுங்க சார். குண்டாஸ் கூட போடுங்க சார். என்கவுன்டர் வேண்டாம் சார். ரெண்டு பொண்டாட்டி சார் எனக்கு. கெஞ்சிக் கேக்கிறேன் சார்.“ என்ற பாண்டியின் எந்த புலம்பல்களையும், நந்தகோபால் காதில் விழாதது போல அமைதியாக இருந்தார்.

பாண்டி கூட இருந்தவன் “அய்யோ சார் விட்டுடுங்க சார்“ என்று கத்த ஆரம்பித்தான். பிஸ்டலை எடுத்து அவன் நெற்றிப் பொட்டில் வைத்த நந்தகோபால் “சத்தம் வந்துச்சு, இங்கேயே சுட்டுடுவேன்“ என்று கூறியதற்குப் பிறகு, மூச்சு சத்தம் கூட வரவில்லை.

ஆளரவமற்ற குறுக்கு சாலையில் வண்டி நிறுத்தப் பட்டது. “எறக்குங்கய்யா அவங்க ரெண்டு பேரையும்“ என்ற உத்தரவைக் கேட்டதும், ஜீப்பின் பின் கதவு திறக்கப் பட்டு, இரண்டு பேரும் இறக்கப் பட்டனர். ஜீப் என்ஜின் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.

ஜீப்பின் லைட் வெளிச்சத்திற்கு இரண்டு பேரும் அழைத்து வரப்பட்டனர். “அய்யா. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா. அய்யா கெஞ்சிக் கேக்குறோம்யா.. விட்டுடுங்கய்யா “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிஸ்டலை எடுத்து இரண்டு பேரின் நெஞ்சிலும் சுட்டார் நந்தகோபால்.


இருவரின் உடலையும் பொலீரோ ஜீப்பில் ஏற்றி, கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நந்தகோபால் சென்ற போது, அங்கே, சிசிபி இன்ஸ்பெக்டர் ஒரு புதிய ஸ்கார்ப்பியோ ஜீப்பை, பாதி சாலை மீதும், பாதி சாலையை விட்டு இறக்கியும் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“என்ன சார் முடிஞ்சுதா ? “

“ம். ஓவர். பாடிய எந்தப் பொசிஷன்ல வைக்கலாம் ? “

“சார். ஸ்கார்ப்பியோ லேர்ந்து, ஒரு டென் ஃபீட் தள்ளி வைக்கலாம் சார். அப்போதான் அட்டாக் பண்ணிட்டு ஓடுன மாதிரி இருக்கும்“

“ஆல்ரைட். அப்படியே பண்ணிடுங்க. கமிஷனருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்“ என்று செல்போனை எடுத்தபடி ஓரமாகச் சென்றார் நந்தகோபால்.

பாண்டியின் உடலையும், அவன் கூட்டாளியின் உடலையும், ஓடிப் போய் விழுந்தது போல உத்தேசமான ஒரு வாகில் கிடத்தி விட்டு, நந்தகோபால் அருகில் சென்று “சான் எவ்ரிதிங் ஓவர் சார்“ என்று கூறினார் சிசிபி இன்ஸ்பெக்டர்.

“குட் வொர்க்“

“சார். கேலன்ட்ரி மெடல் இல்லேன்னா ஆக்சலரேட்டட் ப்ரோமோஷன் கெடைக்குமா சார்“

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேன்னா கெடைக்கும். இந்த ஹ்யூமன் ரைட்ஸ் தேவடியாப் பசங்க ஏதாவது கூப்பாடு போட்டுகிட்டு இருப்பானுங்க. அதான் பிரச்சினை. இல்லேன்னா கமிஷனரே, ஹோம் செக்ரட்ரிகிட்ட பேசி வாங்கித் தந்திடுவாரு“

“பிரபல ரவுடி சுட்டுக் கொலை. கூட்டாளியுடன் போலீசைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சிக்கையில் என்கவுன்டிரில் கொலை“ என்று தலைப்புச் செய்திகள் அலறின. சம்பவ இடத்தை பார்வையிட்ட கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போத் ஆர் நொட்டோரியஸ் ரவ்டீஸ். அவங்க ரெண்டு பேரும், வச்சிருந்து துப்பாக்கிய எடுத்து ஃபயர் பண்ண ட்ரை பண்ணாங்க. நம்ப காப்ஸ் செல்ப் டிஃபென்ஸ்ல சுட்டதுல, போத் டைட்“

ப்ரெஸ் மீட் முடிந்ததும் கிடைக்கப் போகும் கவரை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நிருபர் “சார் ரெண்டு பேர் மேலயும் எத்தனை கேஸ் இருந்துச்சு“ என்று கேட்டதற்கு, “போத் வேர் வெரி டேஞ்சரஸ். தே ஹேவ் மோர் தன் 20 கேசஸ்“ என்று கூறி விட்டு, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.


பாண்டி இறந்ததிலிருந்து ஒரு வாரம் சூப் கடை போடவில்லை முனியாண்டி. வீட்டில் சோகம் வெளியேறாமல் சுவர்களெங்கும் ஒட்டிக் கொண்டிருந்தது. உதவி கமிஷனர் முராரி அழைப்பதாக ஒரு போலீஸ்காரர் முனியாண்டியை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
முனியாண்டியை எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார் முராரி.


“இந்தா பாருங்க பெரியவரே. நாளைக்கு ஆர்டிஓ விசாரணை இருக்கு. பத்மான்னு ஒரு
ஆர்டிஓ உங்கள விசாரிப்பாங்க. அங்க போய் கண்டதையெல்லாம் பேசக் கூடாது என்ன ?. பாண்டி சாகும்போது அவன் கழுத்துல 8 பவுன் செயின் இருந்துச்சு. அத குடுத்துர்றேன். “

“அப்புறம் பாண்டி வச்சுருந்த ஒரு வீட்ட நாங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி சீஸ் பண்ணோம். அதுல இருக்க பொருள்லாம் எடுத்துக்கங்க. புரியுதா ? ஆர்டிஓ அம்மா என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கணும்“ என்று முனியாண்டியிடம் கூறியது அறிவுரையா, மிரட்டலா என்று முனியாண்டிக்குப் புரியவில்லை.


“மவனே போயிட்டான். அப்பொறம் என்னங்கய்யா ? “ என்று அவருக்கு பதிலளித்து விட்டு, முராரிக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார் முனியாண்டி.



“ காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, பாண்டியும், அவன் கூட்டாளியும் ஒரு ஸ்கார்ப்பியோ ஜீப்பில் வேகமாக வந்தனர். காவல் ஆய்வாளர் நந்தகோபாலும், காவல் ஆய்வாளர் அஷோக்கும், பாண்டியின் வாகனத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்ட போது, நிற்காமல் செல்ல பாண்டி முயற்சித்ததால், குறுக்கே புகுந்து காவல் துறை அதிகாரிகள் தடுத்த போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாண்டி சுட முயற்சிக்கையில், ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்பட்டு, தன்னுடைய கைத்துப்பாக்கியால் இருவரையும் தற்காப்புக்காக சுட்டதில், இருவரும் மரணமடைந்தனர். ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்படாவிட்டால், அங்கே இருந்த காவல் அதிகாரிகளுக்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் திறமையாக செயல்பட்டு இரண்டு பயங்கர குற்றவாளிகளை தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் ஆய்வாளர் அஷோக் மற்றும் அவர்களுடன் இருந்த அனைத்து காவல் துறையினருக்கும், குடியரசுத் தலைவரின் வீரதீரச் செயலுக்கான விருதும், ஒரு படி பதவி உயர்வும் வழங்க பரிந்துரை செய்யப் படுகிறது“ என்று தனது அறிக்கையை அரசுக்கு அளித்தார் ஆர்டிஓ பத்மா.


நன்றி: படைப்பு இணையம்

Wednesday, August 4, 2010

புதுப்பொலிவு

இனி "தீராத தாகம்" "தண்ணீர் பந்தல்" ஆக உங்கள் தாகம் தணிக்கும்