Tuesday, April 26, 2011

கட்சியாவது வெங்காயமாவது...!

கீழ்வேளூரில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் மதிவாணனிடம் நக்கீரன் நிருபர் செல்வகுமார் கேட்கிறார்,” நிலைமை எப்படி இருக்குண்ணே?”.

அதற்கு அந்த அமைச்சர்,”நல்லாவே இருக்கு. ஆனா நாம் தமிழர் இயக்கத்து தம்பிகள்….எனக்கு எதிராக் களமிறங்கி கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைவர் சீமான், தி.மு.கவை எதிர்த்து வேலை செய்யச் சொல்லவில்லை. காங்கிரஸ் மட்டும்தான் அவங்க குறி. இங்க மட்டும் எனக்கு எதிரா ஏன்?” என்று வருத்தப்பட்டாராம்.

உடனே நக்கீரன் நிருபர் நாம் தமிழர் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தஞ்சை வழக்கறிஞர் நல்லதுரையிடம் இது குறித்து விசாரிக்க அவர் அதிர்ச்சியானாராம். அதன்படி,”தி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணும்படி எங்க தலைமை உத்தரவிடவில்லை. இதை மீறி பிரச்சாரம் செய்த இயக்கத்தவர் யார்னு விசாரித்து நடவடிக்கை எடுப்போம். நாங்க கட்டுப்பாடான இயக்கம்” என்றாராம்.

நல்லா கவனிங்க, இந்த மதிவாணன் ஒரு சாதாரண தி.மு.க தலைவரோ, இல்லை வெறும் எம்.எல்.ஏவோ இல்லை. அவர் அமைச்சர். கூட்டணி தர்மத்தின்படி அவர் சீமான் கட்சியை கடுமையாக எதிர்த்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ அதற்கு மாறாக “காங்கிரசைத்தானே தோக்கடிக்கணும்னு சொன்னீங்க, பின்ன ஏன் என்னை எதிர்க்கிறீங்க”ன்னு பாசத்தோடு அந்த தம்பிகள் குறித்து வருத்தப்பட்டால் என்ன பொருள்?

இவ்வளவிற்கும் சீமான் சில இடங்களில் கருணாநிதி ஆட்சியையும் விமரிசித்திருக்கிறார். அது கொஞ்சமா, கூடுதலா என்பது பிரச்சினையல்ல. இல்லை கருணாநிதி கூட தம்பி சீமான் தன்னை எதிர்க்காதற்கு நன்றி என்றா சொன்னார்? இவ்வளவிற்கும் இந்த சீமானை உள்ளே போட்டு ஐந்து மாதங்கள் அடைத்தவரே அவர்தானே? எதன் பொருட்டு இந்த கைது? எல்லாம் காங்கிரசு பெருச்சாளிகளை குளிர்விக்கத்தானே? அது போல இந்த கைதுக்காக சீமானும் கருணாநிதி மீது கோபம் கொள்ளவில்லையா என்ன?

கூட்டிக் கழித்து பார்த்தால் தேர்தலென்பது யதார்த்தத்தில் கட்சிகள், கூட்டணிகள் என்று கூட நடப்பதில்லை. அந்தெந்த தொகுதியில் ஜெயிப்பதற்கு தேவையென்றால் சொந்தக் கட்சியைக்கூட எதிர்ப்பார்களோ, தெரியவில்லை.

இதில் நக்கீரனுக்கு வந்த சோதனை என்ன? அ.தி.மு.கவிற்கு ஒரு ஜூ.வி போல தி.மு.கவிற்கு ஒரு நக்கீரன். அண்ணன் சீமானோட தம்பிகளால் ஒரு தி.மு.க அமைச்சருக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக உடனே சீமான் கட்சிக்காரரிடம் போட்டுக் கொடுக்கிறார்கள். ஏன்? தி.மு.க வெற்றிபெற வேண்டுமென்ற விருப்பமும், அதையொட்டிய கருத்துக் கணிப்பும் பலித்தால்தானே அடுத்த ஐந்து வருடங்கள் குப்பை கொட்ட முடியும்?

சரி இதில் கட்டுப்பாடான நாம் தமிழர் தம்பிகள் ஏன் அங்கே கட்சி முடிவுக்கு மாறாக தி.மு.கவை எதிர்க்க வேண்டும்? ஒரு வேளை அண்ணன் சீமானை விட இனவுணர்வு கொண்டு துரோகமிழைத்த தி.மு.கவையும் எதிர்க்க வேண்டும் என்று ஓவர் ஸ்மார்ட்டாக பணி செய்தார்களா? அப்படியெனில் அவர்கள் முதலில் சீமானையல்லவா குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும்? இல்லை அந்த ஊர் அ.தி.மு.க தலைவர்கள் இந்த தம்பிகளை கவனித்தோ இல்லை கன்வின்ஸ் செய்தோ இறக்கினார்களா?

திருச்சியில் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். சாதி, பண, அரசியல் என எல்லா செல்வாக்கிலும் லீடிங்கில் இருப்பவர். அவரது தம்பி ராமஜெயம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயாவிற்கு எதிராக தி.மு.க வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து தீவிரமாக வேலை செய்தாராம். உடனே திருச்சி மாவட்ட அ.தி.மு.க பெரும்புள்ளிகள் அவரிடம் ” அண்ணே நாங்க மட்டும் அமைச்சர் நேருவுக்கு எதிராக வேலை செய்யல. அது மாதிரி நீங்களும் ஸ்ரீரங்கத்துல எங்க தலைவிக்காக கம்னுதானே இருக்கணும், ஏம்ணே?” என்றார்களாம். என்ன எழவு அண்டர்ஸ்டேண்டிங் இது?

கரூர் தொகுதியில் அமுல்பேபி ராகுல்காந்தியின் அருளால் போட்டியிடும் பேறுபெற்றவர் ஜோதிமணி. காட்டன் சேலையில் கதர் காங்கிரசு வஸ்திரத்தோடு தெரு தெருவா பெரியவங்க கால்ல விழுந்து “எப்படியாவது என்ன ஜெயிக்க வச்சுருங்க”ன்னு பாடுபட்ட இந்த அம்மணி சீமானுக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ” அண்ணே நான் உங்க தங்கச்சி மாதிரி, என் தொகுதிக்கு வந்து எதிர்த்து பிரச்சாரம் செய்யாதீங்கண்ணே”ன்னு அதில் உருகியிருந்தாராம். என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமெண்டுக்கு தனி மவுசு உண்டில்லையா?

அதே போல கரூருக்கு வந்த அண்ணன் சீமானும் “தங்கச்சி நீ காங்கிரச விட்டுவெளிய வந்தீன்னா உன்ன நானே ஜெயிக்க வப்பேன். காங்கிரசு ஈழத்தமிழரின் இரத்தம் குடித்த பகைவர்கள்”னு விளக்கம் அளித்து பேசியிருக்கிறார். இதுல நால்லா பாருங்க! சீமான் காங்கிரசை தீவிரமாக எதிர்க்கிறார். அதில் முக்கியமாக சோனியா காந்தியை வறுத்தெடுக்கிறார். அந்த சோனியாவின் புத்திரன் போட்ட பிச்சை சீட்டில் நின்று கொண்டு புத்திரனது அம்மாவை கிழிக்கும் அண்ணனிடம் பாசமுள்ள தங்கையாக ஜோதிமணி கெஞ்சுகிறார் என்றால்…? ஏசுவே ஏசுவே இது என்ன அரசியல்?

தி.மு.க நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும்போது,” போன தேர்தல்ல பி.ஜெ.பியை ஆதரிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்தல எதிர்க்க வேண்டியிருக்கு. இப்படியே போன தலைவா அடுத்த வாட்டி ஜெயலலிதா கூட கூட்டணி கீட்டணி வச்சிராத” என்றார். ஆனால் அப்படி கூட்டணி ஏற்கனவே இருக்கத்தானே செய்கிறது?

தி.மு.க ஆட்சியில் மிடாஸ் தொழிலுக்கு எந்த இடையூறும் இல்லை. சுமங்கலியிலும் ஜெயா டி.வி நன்றாகவே தெரிகிறது. ஜெயாவின் பாதுகாப்புக்கும் ஒரு குறையுமில்லை. அதே போல நாளை புரட்சித் தலைவி வந்தால் கருணாநிதி, சன்.டி.வியின் தொழில்களுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வேறு, தொழில் வேறு!

உள்ளூர் அளவிலும் இந்த புரிந்துணர்வு தி.மு.க, அ.தி.மு.க தலைவர்களிடம் இருக்கிறது. ஆளும்கட்சியாகவே இருந்தாலும் சாலை ஒப்பந்தங்கள், மணல் கொள்ளை, சுயநிதி கல்லூரி போன்றவற்றில் எதிர்க்கட்சியினரும் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம், அறிக்கை, மாநாடு என்ற விவகாரங்களில் மட்டுமே ஏதோ கொஞ்சம் மோதிக் கொள்கின்றனர். மற்ற நேரங்களில் ‘சமாதான சகவாழ்வுதான்’.

மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஏதோ ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இரு கழகங்களின் பெருச்சாளிகளும் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன. பெருச்சாளிகளின் தொழில் ரகசியத்தையும், ஒரே அலைவரிசையையும் மக்கள் உணரும்போது மட்டுமே இந்த திரைமறைவுக் கூட்டணியின் மோசடி அகற்றப்படும். அது வரை மாறி மாறி செட்டப் வழக்காடு மன்றம் போல கேட்டு இரசிப்பதுதான் மக்களது தலையெழுத்தா?

நன்றி: வினவு

Monday, April 18, 2011

ஜெயக்கப்போவது யாரு?

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரமுகர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து ஒரு கருத்து கணிப்பு.

  1. திருவாரூர் - கருணாநிதி (வெற்றி)
  2. ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா (வெற்றி)
  3. ரிஷிவந்தியம் - விஜயகாந்த் (வெற்றி)
  4. மயிலாப்பூர் - தங்கபாலு (தோல்வி)
  5. தென்காசி - சரத்குமார் (தோல்வி)
  6. ஒட்டபிடாரம் - கிருஷ்ணசாமி (வெற்றி)
  7. நாகர்கோவில் - பொன். ராதாகிருஷ்ணன் (வெற்றி)
  8. சூலூர் - ஈஸ்வரன் (வெற்றி)
  9. ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன் (வெற்றி)
  10. மேட்டூர் - கோ.க.மணி (தோல்வி)
  11. ராதாகிருஷ்ணன் நகர் - சேகர்பாபு (வெற்றி)
  12. கோபிசெட்டிபாளையம் - செங்கோட்டையன் (வெற்றி)
  13. போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம் (வெற்றி)
  14. விருதுநகர் - மாபா பாண்டியராஜன் (வெற்றி)
  15. ராதாபுரம் - மைக்கேல் ராயப்பன் (வெற்றி)
  16. நாங்குநேரி - வசந்தகுமார் (வெற்றி)
  17. அறந்தாங்கி - திருநாவுக்கரசர் (வெற்றி)
  18. ஜெயங்கொண்டம் - காடுவெட்டி குரு (வெற்றி)
  19. ஈரோடு மேற்கு - யுவராஜா (தோல்வி)
  20. ஈரோடு கிழக்கு - முத்துசாமி (வெற்றி)
  21. பரமத்தி வேலூர் - தனியரசு (வெற்றி)
  22. வேலூர் - ஞானசேகரன் (தோல்வி)
  23. அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி (வெற்றி)
  24. ஆயிரம் விளக்கு - வளர்மதி (வெற்றி)

இனி மந்திரிகள்

  1. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் (வெற்றி)
  2. வில்லிவாக்கம் - க.அன்பழகன் (தோல்வி)
  3. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் (தோல்வி)
  4. விழுப்புரம் - பொன்முடி (தோல்வி)
  5. காட்பாடி - துரைமுருகன் (வெற்றி)
  6. எழும்பூர் - பரிதி இளம்வழுதி (வெற்றி)
  7. திருவாடானை - சுப தங்கவேலன் (தோல்வி)
  8. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி (தோல்வி)
  9. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா (தோல்வி)
  10. மானாமதுரை - தமிழரசி (தோல்வி)
  11. மடத்துக்குளம் - வெள்ளக்கோவில் சாமிநாதன் (தோல்வி)
  12. திருவண்ணாமலை - எ.வ.வேலு (வெற்றி)
  13. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வெற்றி)
  14. திருச்சுழி - தங்கம் தென்னரசு (வெற்றி)
  15. திருப்பத்தூர் - பெரிய கருப்பன் (தோல்வி)
  16. கீழ் வேளூர் - மதிவாணன் (தோல்வி)
  17. திருச்சி மேற்கு - கே.என்.நேரு (வெற்றி)
  18. ஆத்தூர் - ஐ.பெரியசாமி (வெற்றி)
  19. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி (வெற்றி)

Saturday, April 9, 2011

அவினாசி தொகுதி நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் பாதியும், கோவை மாவட்டத்தில் பாதியும் பிரிந்து கிடக்கும் தொகுதி இது. ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது. காங்கிரஸ் நடராஜன், அதிமுக கருப்பசாமி மோதுகிறார்கள். பாஜகவும் களத்தில் உள்ளது. அனைவரும் புதுமுகங்கள். பெரும்பாலும் கிராமங்களை மையமாக கொண்ட தொகுதி. நிலத்தடி நீரை நம்பிய விவசாயமே பிரதான தொழில். கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து கட்சிகளுமே ஒவ்வொரு தேர்தலிலும் புதுமுகங்களுக்கே வாய்ப்பு தருகின்றன. குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலிங்கம் (2001), பிரேமா (2006) இருவருமே மிக சாதாரண பின்னணி கொண்டவர்கள். தற்போது போட்டியிடும் கருப்பசாமி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. இவர் ஒரு கூலித் தொழிலாளி. நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தாலும் கூட, அ.தி.மு.க.,வின் அடி மட்ட தொண்டனாகிய கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருப்பசாமியிடம், ஜெ., ஏழு நிமிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்கும் முன், சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கியுள்ளார் கருப்பசாமி. 1980ல் இருந்து கட்சியில் இருப்பதையும், ஏழு முறை சிறை சென்றதையும், விலாவாரியாக விவரித்துள்ளார். "எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, உங்களை பார்த்ததே பெரும் பாக்கியம்" என்று கருப்பசாமி கூறியது ஜெ.,வின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

திமுக அரசின் இலவச டிவி, கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச அடுப்பு போன்றவை நிறைய "ரீச்" ஆகியிருக்கிறது. கொமுகவுக்கும் கணிசமான செல்வாக்கு உண்டு. இளைஞர் காங்கிரசின் "வைப்ரேஷனும்" இந்த தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதிகளில் உண்டு.

பல ஆண்டு கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு குடிநீர் திட்டத்துக்கு எந்த முயற்சியும் எடுக்காதது ஆளுங்கட்சிக்கு பெருத்த பின்னடைவு. நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு போய் பருவ மழையும் சரிவர பெய்யாததால் விவசாயமே அழியும் சூழல், இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்ய நினைத்தாலும் விவசாய கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்துக்கும், திருபூருக்கும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். மேலும் கள் இறக்க திமுக அரசு அனுமதி தராதது, மீறி கள் இறக்கியவர்களை காவல்துறை ஒடுக்கியது போன்றவை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவினாசியில் பெருகி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல், தேசிய நெடுஞ்சாலையில் பெருகி வரும் விபத்துக்கள் போன்ற பிரச்சனைகளுடன் விதவிதமான கலர் பேருந்துகளில் அதிக கட்டணம் போன்றவை கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொங்கு வேளாள கவுண்டர் சமூகமும், தலித் சமூகமும் தான் இந்த தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கின்றன. காலங்காலமாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த கவுண்டர் சமூகம், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கொமுகவுக்கு ஆதரவளித்தது. ஆனால் இந்த தேர்தலில் கொமுக திமுக அணியில் சேர்ந்தது பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேமுதிகவும் தலித் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது.

பொதுவான ஆட்சிக்கு எதிரான மனநிலையும், என்றைக்குமே அசைக்க முடியாத நிரந்தர அதிமுக ஓட்டு வங்கியும், பெருவாரியான மக்கள் ஆதரவுடன் மற்ற கொங்கு தொகுதிகளை போல அவினாசியும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பது பறைசாற்றப்படும்.

பின் குறிப்பு: 2009 நாடாளுமன்ற தேர்தலில், இந்திய தேர்தல் வரலாற்றில் அவினாசி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்லாத இடங்களுக்கு கூட பணம் தண்ணீராய் பாய்ந்து ஆறாய் ஓடியது. எல்லா புகழும் ராசாவுக்கே. இந்த தேர்தலில் இன்று வரை மக்களும், கட்சித் தொண்டர்களும் பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா? என்று "இலவு காத்த கிளி போல" காத்து கிடக்கிறார்கள்.

Sunday, April 3, 2011

கருணாநிதி, ஜெயலலிதா - சில கேள்விகள்?

ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள்:


1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3.யாருமே நெருங்க முடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களைச் சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாகத் தனியே வாழ வேண்டியதுதானே?

4. அ.தி.மு.க.வை சசிகலா குடும்பம்தான் ஆக்கிரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீர்கள்?

8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 33 சதவிகித சீட் தரவில்லை?

9. சக மனிதனை - பெண்ணாக / ஆணாக இருந்தாலும் - காலில் விழச் செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாசாரத்தை / மன நிலையை எப்போது விடப் போகிறீர்கள்?

10. காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயது வந்த பெண்களின் வலி உங்களுக்குத் தெரியுமா? பள்ளி / ரேஷன் கடை மூலம் வயது வந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?

12. மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க.வுக்குப் போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?

13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களைத் திரட்டிப் போராடி ஈழ பொதுமக்களைக் காப்பாற்ற முயலாதது ஏன்?

14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதிமொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா?


கருணாநிதிக்கு 20 கேள்விகள்:


1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?

18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள்:

1. விவசாயம் லாபமில்லாத் தொழிலாகப் போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து, பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயக் கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டன. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதனச் செலவுகளுக்குப் பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திரப் பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதைக் கணிசமாகக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்னைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள்?

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரைச் சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்கவில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிவிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிற்பதற்கு உங்களால் எப்படி முடிகிறது?

- ஞாநி (ஓ பக்கங்கள்)

Saturday, April 2, 2011

மீண்டும் 1996?

கடந்த 1996ம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது, அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, "எங்களுக்கு என்ன செய்தீர்கள்' என்று மட்டுமே கேட்டு வந்த மக்கள், இந்தத் தேர்தலில், "எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்' என்றும் கேட்கத் துவங்கியிருப்பது, புதிய கலாசாரமாக உருவாகியுள்ளது.

கடந்த 1991-96ம் ஆண்டு வரை தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்து வந்தது. அப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், "கட்-அவுட்' கலாசாரம், வளர்ப்பு மகன் திருமணம், ஆடம்பரம் போன்றவை தலை தூக்கி இருந்தன. இதனால் பொதுமக்களிடம், அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் எதிரொலியாக, 1996ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, தொகுதி மாறி வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே நுழையவிடாமல், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பு, தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அந்த நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், ஏற்கனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆளுங்கட்சி எடுத்து வைத்திருந்தது. ஐந்தாண்டுகளும் வழங்கப்பட்ட நலத் திட்டப் பணிகள் அனைத்தும், மக்களைச் சென்றடையும் போது, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. எம்.எல்.ஏ.,க்கள் அடிக்கடி தென்படுவதால், மக்கள் மத்தியில் பெரியளவில் வெறுப்பும் எழவில்லை. இதெல்லாம், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். அடுத்தடுத்த சம்பவங்கள் அதைத் தக்கவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சுனாமி போல வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார், மக்களின் மன நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அனைவருமே வலுவாக சம்பாதித்து விட்டனர்' என்ற எண்ணம், எல்லாருக்கும் ஏற்படத் தொடங்கியது. இடைத்தேர்தல்களில் வழங்கப்பட்ட பணம், அவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டது. "ஓட்டுக்கு நோட்டு வாங்குவது தங்கள் உரிமை' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு, தற்போது விபரீதத்தில் முடிந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த சில சம்பவங்களும், 1996 நிலைமை திரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கின்றன. திருவாரூரில், முதல்வர் மகள் செல்வி பிரசாரத்தின் போது, ஒரு முதியவர், "எங்களுக்கு என்ன செய்தீர்கள், உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு' என நேரடியாகவே கேட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், அமைச்சர் சுப.தங்கவேலனை பொதுமக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக, தங்கள் சாலையையே வெட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பிரசாரம் சென்ற போது, ஊருக்குள் நுழைய விடாமல், கிராம எல்லையிலேயே பொதுமக்கள் தடுத்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பிரசாரம் மேற்கொண்ட போது, ஒரு மூதாட்டி, "ஆமா, தேர்தல் அப்ப வருவீங்க; ஓட்டு வாங்கிட்டு போவீங்க; அதுக்கப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டீங்க... உங்களுக்கு எதுக்கு ஓட்டு போடணும்' என, திட்டி அனுப்பியுள்ளார்.

இதே போல், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு எம்.எல்.ஏ., ஒரு மூதாட்டியிடம் ஓட்டு கேட்டுள்ளார். அப்போது அந்த மூதாட்டி, "இத்தனை ஆண்டு அந்தம்மாட்ட பதவிகளை அனுபவித்தாய். இப்போது, சம்பாதிப்பதற்காக தி.மு.க., பக்கம் வந்துவிட்டாயா' என, நேரடியாகவே கேட்டுள்ளார். இதுமட்டுமின்றி, பல்வேறு கிராமப்புறங்களில், ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் மக்கள், நேரடியாகவே பணம் கேட்கத் துவங்கிவிட்டனர். அவ்வாறு கொடுக்கப்படும் தொகை போதாது எனக் கூறி, "சம்பாதிச்சல்ல... இவ்வளவு குடு' என தொகையைச் சொல்லி கேட்கத் துவங்கிவிட்டனர். இது போன்ற சம்பவங்கள், அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மக்களின் எதிர்(பார்)ப்பைப் போக்கும் வகையில், கூடுதல் பணம் கொடுத்து, அதைச் சரிக்கட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். "என்ன செய்வீர்கள்' என்று கேட்ட காலம் போய், "எவ்வளவு தருவீர்கள்' என்று கேட்கும் காலம் வந்துவிட்டது, காலத்தின் கோலம் தான்.

-தினமலர்