Saturday, March 24, 2012

இலங்கை விவகாரம்… இரக்கமற்ற இந்திய மீடியாக்கள்!

இந்தியாவிலேயே அதிகமாக தேசியத்தைப் பேசுபவன், தேசியத்தை போதிப்பவன் தமிழன்தான் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் அந்தத் தமிழனைத்தான் இந்தியா தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, தமிழ் தலைவர்களின் கடும் அழுத்தத்தால் இந்தியா ஆதரித்தது, வட இந்திய ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ சிங்கள இனவாத இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இந்த போலி தேசியவாதிகள், தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்று இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர்.

வழக்கமாகவே ஈழப் பிரச்சினை என்றாலே வட இந்திய மீடியாக்களுக்கு வேப்பங்காயாக கசப்பது தெரிந்த விஷயமே. இலங்கை அரசு, இலங்கை ராணுவம், இலங்கைத் தரப்புக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து வட இந்திய மீ்டியாக்கள், குறிப்பாக ஆங்கில மீடியாக்கள் பிரசுரிப்பது, ஒளிபரப்புவது வழக்கம்.


இலங்கைப் பிரச்சினை என்னவென்றே அவர்களுக்கு முழுமையாக புரியாமல் போனதே இதற்குக் காரணம். இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சினையை அவர்கள் சரிவர அணுகவில்லை. இது வரலாற்று உண்மை. ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த ஞானத்துடனும், சமயோஜிதத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் ஈழப் பிரச்சினையை அணுகியவர் இந்திரா காந்தி மட்டுமே.

இதனால்தான் இந்திரா காந்தியின் ஆசியோடு, எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார், பயிற்சியளித்தார், ஈழப் பிரச்சினையில் இந்த இரு தலைவர்களும், தமிழர்களுக்கு ஆதரவாக நின்றனர், தமிழர்களின் உணர்வுகளோடு கலந்திருந்தனர்.

இலங்கையில் எண்பதுகளில் இனப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அப்பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த தமிழ் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் ஆத்திரமும் வேதனையும் பொங்க குரல் எழுப்பிய போது, அதைக் கேட்டுக் கொண்ட இந்திரா அவர்கள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

இதோ சிறந்த பாராளுமன்றவாதி என்று புகழப்பட்ட இரா செழியன் சொல்கிறார்:

‘பிரதமர் இந்திரா அம்மையார் எங்களை அழைத்து, உங்கள் வேதனையை நான் உணர்கிறேன். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்து விடுவோம். தனி ஈழம் அமைத்துத் தந்தால், பிரச்சினை தீர்ந்துவிடுமா? தமிழர்கள் துன்பமின்றி வாழ முடியுமா?’ என்று கேட்டார். அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆருக்கு அவர் அனுப்பிய செய்தியும் அதுவே. பங்களாதேஷை உருவாக்கித் தந்த அந்த பெருமாட்டிக்கு தனி ஈழம் அமைப்பது ஒரு பிரச்சினையே அல்ல. அந்த முடிவுக்கும் அவர் வந்துவிட்டிருந்தார், எம்ஜிஆர் அவர்களின் அணுகுமுறை காரணமாக. அவர் சொன்னதே இறுதி வார்த்தை எனும் அளவுக்கு காமன்வெல்த் அமைப்பில் பலமிக்க ஒரே தலைவராகத் திகழ்ந்தார் இந்திரா அவர்கள். ஆனால் காலம், அவரை பறித்துக் கொண்டது.”

இன்று வரை ஈழப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொண்ட இந்தியத் தலைவர்கள் யார் என்றால் இந்த இருவரை மட்டுமே தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் சரியான கோணத்தில் சிந்திக்காமல் போனதாலும், சிந்திக்கத் தவறியதாலும்தான் ஈழப் பிரச்சினை வேறு வேறு ரூபத்தில் மாறிப் போய் இன்று ஒரு ‘தீவிரவாத’ இயக்கத்திடம் சிக்கி இலங்கை மீண்டுள்ளதாக ஒரு கருத்து வலுப்பட்டுப் போகக் காரணமாகி விட்டது. ஈழத்தில் நடந்தது ஒரு இனப் பிரச்சினை என்பது ஆங்கில மீடியாக்களுக்குப் புரிவதில்லை.

செர்பியா, போஸ்னியா, குர்து இன மோதல்கள், பாலஸ்தீன மோதல்கள், தைமூர் மோதல்கள் மட்டுமே அவர்களுக்கு இனப் பிரச்சினை. ஈழத்தில் நடந்தது ‘தீவிரவாதப் போர்’ என்பது அவர்களது கருத்து.

ஈழத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பார்வையுடன்தான் ஈழப் பிரச்சினையை பார்க்கின்றனரே தவிர, அந்தப் புலிகள் போராடியதே ஈழத் தமிழ் மக்களுக்காகத்தான் என்ற மனிதாபிமான கண்ணோட்டம் இந்த பத்திரிகைகளுக்கு இல்லை.

ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறார்கள், பெண்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், எந்த அளவுக்கு சித்திரவதையை அனுபவித்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள், எப்படியெல்லாம் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு சொட்டு கண்ணீரைக் கூட இந்த வட இந்திய மீடியாக்கள் சிந்தவில்லை – ஆனால் சானல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களம் வீடியோவைப் பார்த்து நானும் ஒரு சிங்களன் என்று கூறிக் கொள்ள வெட்கமாக, வேதனையாக உள்ளது என்று தனது மகன் கூறியதாக சொல்லி கண்ணீர் வடித்தார் சிங்களத்து சந்திரிகா குமாரதுங்கா.

மனித நேயம், மனித உரிமை குறித்த அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இலங்கையில் நடந்த கொடூரம் குறித்து நிச்சயம் துடித்துப் போவார்கள். உணர்வு இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சிங்களராகவே இருந்தாலும் கூட சந்திரிகா அதைத்தான் வெளிப்படுத்தினார், நாங்கள் செய்தது தவறு என்றார் வெளிப்படையாக.

ஆனால் எங்கேயோ சிரியாவில் நடந்த தாக்குதல்களைப் பற்றியும், இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும், ஈரானின் நிலை என்ன என்பது குறித்தும் மாய்ந்து மாய்ந்து செய்தி போட்டுத் தாளித்தெடுக்கும் ஆங்கில மீடியாக்களுக்கு, தமக்கு வெகு அருகே ஈழத்தில் நடந்து முடிந்த ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து கவலைப்பட தோணவே இல்லை. பத்திரிகையாளர்களாக அதுகுறித்த குறைந்தபட்ச அக்கறை கூட அவர்களுக்கில்லை.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை -இந்த தீர்மானமே ஒரு வலுவான, உருப்படியான தீர்மானம் இல்லை, அதையும் கூட இந்தியா கடைசி நேரத்தில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்து விட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது – இந்தியா ஆதரிக்கக் கூடாது என்ற ரீதியில்தான் ஆங்கில மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கு வசதியாகப் போய் விடும். அப்படி நடந்தால் இந்தியாவுக்குப் பேராபத்து என்ற ரீதியில் மறைமுகமாக மத்திய அரசை நெருக்கி வந்தன. ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு நிவாரணம் தேட வேண்டும், தமிழரை ஆதரிப்பதன் மூலமும் சீனாவுக்கு பெரும் நெருக்கடி தர முடியும், இந்துமாக்கடல் ஆதிக்கத்தை தக்க வைக்க முடியும் என்ற பார்வையே அவர்களுக்கில்லை.

இப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவைத் தெரிவித்து வாக்களித்ததை பெரும் எரிச்சலுடன் தங்களது செய்திகளில் காட்டி வருகின்றன ஆங்கில மீடியாக்கள். அதிலும் டைம்ஸ் ஆப் இந்தியா, ஒரு படி மேலே போய், ‘கருணாநிதி ஈழத் தமிழர்களைப் பிடித்த சாபம். இவரால்தான் இன்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக உருவெடுத்துவிட்டது’ என்று மிகக் காட்டமாக சொல்லியுள்ளது.

சென்னை தனிமைப்பட்டுப் போனதாம் இந்தியாவிலிருந்து… அவர்கள் செய்தித் தலைப்பு இது!

இந்தியாவிலிருந்து தனிமைப்படும் எண்ணம் இந்தியத் தமிழருக்கில்லை. ஆனால் அந்த எண்ணத்தைத் தூண்டும் இந்த பிரிவினைவாத மீடியாக்களை பாரதம் எப்படி அனுமதிக்கிறது?

இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனா வந்து விடும், பாகிஸ்தான் வந்து விடும் என்று ஆங்கில மீடியாக்கள் பதறுகின்றன, துடிக்கின்றன.

ஈழத்தில் துடிக்கத் துடிக்க சிறார்கள் என்றும் கூட பாராமல் சிங்களர்கள் கொடூரமாக கொன்றழித்ததைக் கூட கண்டுகொள்ளா்மல், இந்தியா இலங்கையை ஆதரித்தபோதும் கூட இதுதானே நடந்தது. ஹம்பந்தோட்டா மூலம் சீனா, இலங்கைக்குள் பெரும் ஆதிக்கத்துக்கு அடிபோட்டுவிட்டதே… இதோ இப்போதும் நாச்சிக்குடாவில் இலங்கை அமைத்துள்ள கடற்படை தளத்தின் முழு கட்டுப்பாடும் சீனா வசம் உள்ளதே… அதாவது சீனத்து குறி எப்போதும் தென் தமிழகத்தை நோக்கி திரும்பி நிற்கிறதே… அது சரிதானா?

கச்சத்தீவு அருகே போனாலே சுட்டுத் தள்ளுகிறார்களே, இந்திய மீனவர்களை -அதாவது தமிழக மீனவர்களை. அது நியாயம்தானா..?

கச்சத்தீவில் சீன ராணுவம் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகிறதே, அதுகுறித்து நமது மீடியாக்களுக்குக் கவலை இல்லையா..? அது மட்டும் இந்தியாவுக்குப் பாதுகாப்பானதா…?

ஈழத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தமிழர்கள் போராடிய காலத்தில் ஒரு சீனரையும் இலங்கையின் பக்கம் நம்மால் பார்க்க முடியவில்லை. பாகிஸ்தானால் உள்ளே வர முடியவில்லை. இந்தியாவின் எதிரிகள் யாரும் அங்கு ஊடுருவ முடியவில்லை. இந்தியா மிக மிக பத்திரமாகவே இருந்தது. ஆனால் இன்று… மாலத்தீவு, இலங்கை என எல்லா பக்கத்திலிருந்தும் சீனாவின் பயமுறுத்தல்… இந்த உண்மையை ஆங்கில மீடியாக்கள் மறந்தது ஏன்…?

உண்மையிலேயே இந்தியாவை நம்பகமான நண்பனாக இலங்கை நினைத்திருந்தால், நிச்சயம் அது சீனாவின் பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ போயிருக்காது. ஆனால் இந்தியாவை மிரட்டிப் பணிய வைப்பதே சிங்கள இனவாதத்தின் நோக்கமாக உள்ளது. அதுதான் அவர்களை சீனாவின் பக்கம் போக வைத்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட வைக்கிறது. இந்தியா செய்யாத உதவியையா இந்த இரு நாடுகளும் இலங்கைக்கு செய்து விட்டார்கள்?

லங்கையின் உண்மையான நோக்கம், தமிழ் இனத்தை பூண்டோடு அழிப்பது, அதற்கு இந்தியாவின் கையையே பயன்படுத்துவது. இந்தியா மறுத்தால் அதன் பரம விரோதிகளிடம் நட்பு பாராட்டி வழிக்குக் கொண்டுவருவது.

இலங்கையின் இந்த கேவல புத்தி இப்போது கொஞ்சமாவது இந்திய அரசுக்கும் புரிய ஆரம்பித்திருப்பது ஏன் ஆங்கில மீடியாக்களும், தமிழகத்தில் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கும் புரியவில்லை?

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் அரங்கேறிய தமிழினப் படுகொலையில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் பெருமளவில் உதவி செய்தது. இதை ராஜபக்சேவே வெளிப்படையாக சொல்லியுள்ளார். இந்தியாவுக்காக நாங்கள் போர் புரிந்தோம் என்று இந்தியாவை தமிழர்களிடம் நிர்வாணமாக்கி, உள்நாட்டு சண்டையை ஏற்படுத்த முனைந்த நரி ராஜபக்சே.

அத்தோடு நிற்கவில்லை அந்த ‘போர்க்குற்றவாளி’. இப்படிச் சொல்லிக் கொண்டே சீனா, பாகிஸ்தானுடனான உறவையும் அவர் வலுப்படுத்திக்கொண்டே வருகிறார். இப்படிப்பட்டவரை இந்தியா நம்ப வேண்டும் என்கின்றனவா இந்த சேனம் கட்டிய ஆங்கிலக் குதிரைகள்?

இலங்கை இப்படி செய்வது சரிதான், அப்போதுதான் இந்தியாவுக்கு ஆபத்து இருக்காது என்பதுதான் இந்திய மீடியாக்கள் நிலையா?

இதற்கெல்லாம் ஆங்கில மீடியாக்களிடம் நிச்சயமாக பதில் இருக்காது. இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். அவர்களது பேச்சையும், எழுத்தையும் பார்த்தால் இந்தியாவின் மானம் காப்பாற்றப்பட்டது சர்வேதேச அரங்கில் என்பதைவிட, முன்னாள் கலிங்கத்திலிருந்து போய் குடியேறி சிங்களராக மாறியவர்களுக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம்தான் தூக்கலாக தெரிகிறது.

அவர்களுக்கும் முன்பே இலங்கையை மன்னர்களாக அரியணையிலிருந்து ஆண்டவர்கள் இந்த தமிழர்கள் என்பது மறந்து போனதா?

அகிம்சையை உலகுக்குக் கற்று கொடுத்த நாடு நமது இந்தியா. கவனிக்க… நமது இந்தியா. எந்த ஆங்கிலப் பத்திரிகைக்கும், இந்திக்காரனுக்கும் மட்டும் சொந்தமானதல்ல இந்த பாரத நாடு.

மகாத்மா காந்தியடிகளையும், புத்தரையும் பார்த்த பூமி இது. இங்கிருந்து போன பெளத்தம்தான் இன்று இலங்கையின் முக்கிய மதம். ஆனால் ஒரு பெளத்தன் செய்யும் காரியத்தைத்தான் சிங்களர்கள் செய்திருக்கிறார்களா என்பதை நடுநிலையோடு அலசிப் பார்க்க வேண்டும் ஆங்கில மீடியாக்கள். வீரப்போர் புரிந்து உயிரிழந்த தமிழ் பெண் போராளிகளின் மார்பகங்களை அறுத்துப் பார்க்கவா சிங்களர்களுக்கு போதித்தார் புத்தர்?

அட, செத்தவன் தமிழன் என்பதையெல்லாம் கூட மறந்து விடுவோம். சக மனிதனை இன்னொரு மனிதன் கொடூரமாகக் கொல்கிறான். அதைப் பார்த்து பிற மனிதர்கள் குறைந்தபட்சம் துடிப்பதும் கூடாதா? அதைத் தட்டிக் கேட்க ஒருவன் கிளம்பினால் அதை ஆதரிப்பதும் தவறா..?

இந்த விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளையும் தூக்கிச் சாப்பிடுகிறது தினமலர். ஒரு காலத்தில் கேரள எல்லையில் தமிழனின் உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இந்த தமிழ்ப் பத்திரிகை, ஈழத் தமிழரின் காவலன் அமரர் எம்ஜிஆரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பத்திரிகை இன்று தமிழின விரோதியாக மாறிப் போனது எத்தனை பெரிய இழுக்கு? பார்ப்பணீயம், திராவிடம் போன்ற சர்ச்சைகளைத் தாண்டி தன்னை ஒரு தமிழ் நாளிதழாக உணருமா தினமலர்?

ஆங்கில மீடியாக்களே, தினமலர்களே… இனி உங்களுக்குத் தேவை செய்திகளோடு… கொஞ்சம் மனிதாபிமானமும்!!

-டாக்டர் எஸ் சங்கர் (என்வழி)

No comments: